articles

துயரத்திலும் ஆதாயம்!

கோவிட் பாதிப்புக்குப் பிறகு கடந்த இரண்டாண்டு காலத்தில் முதன் முறையாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் கடந்த மே 23, 24 தேதிகளில் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் கூடிய உலக பொருளாதார மாமன்ற உச்சி மாநாடு நடைபெற்றது. கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில், இந்த மெகா கோடீஸ்வரர்களின் மலையளவு சொத்துக்களின் மதிப்பு இதற்கு முன்னெப்போதும் இருந்திராத, திகைக்கச் செய்யும் உயரத்தை எட்டிவிட்டன.  மனிதகுலத்தின் பெரும்பாலானோருக்கு துயரங்கள் நிறைந்ததாக இருந்த நோய்த்தொற்று காலம், பெரும் முதலாளி வர்க்கத்தினருக்கு வரலாற்றிலேயே சிறந்த தருணங்களில் ஒன்றாக இருந்தது. 

நியூயார்க் முதல் புதுதில்லி வரை உலகெங்கிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் துன்புற்று வருகின்றனர்.  கோதுமை மாவு, சமையல் எண்ணெய், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது.  தங்களது தேவைகளை வெட்டிச் சுருக்கிக் கொள்ள உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  தங்களது தட்டில் உணவு இருப்பதை உத்தரவாதம் செய்திட - தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை புறந்தள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  தங்களது குழந்தைகளில் யாரை தங்களால் பள்ளிக்கு அனுப்ப இயலும் என தேர்ந்தெடுக்க அவர்களின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.  

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளில் வாழ்க்கைச் செலவு தொடர்பான நெருக்கடி முதன்மையானதாக இருக்கிறது.  கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ள அதீத வறுமையைத் தடுக்க அரசுகளும், உலகச் சமூகமும் தவறியுள்ளன.  இத்தோல்வியை ‘மாபெரும் பேரழிவு’ என விவரித்திடலாம்.  உலகெங்கும் 2 கோடிக்கும் கூடுதலான மக்கள் கோவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  அசமத்துவத்தின் ஒவ்வொரு பரிமாணமும் விண்ணை நோக்கி உயர்ந்துள்ளது. 

இத்தகைய அசமத்துவமானது, ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு நபரின் இறப்புக்குக் காரணமாகிறது.  கோடீஸ்வரர்களாக உள்ள பணக்காரர்கள் மட்டுமே நோய் எதிர்ப்புச்சக்தியோடு உள்ளனர்.  அதுமட்டுமின்றி, இத்தகைய பல வகையான நெருக்கடிகளிலிருந்து குறிப்பாக பலனடைபவர்களாகவும் இந்த கோடீஸ்வரர்கள் உள்ளனர்.  இவர்களது சொத்துக்கள் மலையளவு பெருகியுள்ளன.  இத்தகைய உயர்வுக்கான காரணம். உலகப் பொருளாதாரத்தினுள் வியக்கத்தக்க அளவிலான தொகையை அரசுகள் ‘மீட்பு நிதி’ என்ற பெயரில் உட்செலுத்தியதே ஆகும். இந்த தொகை அப்படியே கோடீஸ்வரர்கள் கைக்குப் போய்விட்டது. 

உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள மகா கோடீஸ்வரர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படியெல்லாம் சுரண்டிக் கொழுத்துள்ளன; பெருவாரியான உலக மக்களின் துயரில் எப்படி லாபம் சம்பாதித்துள்ளன என்பதை, டாவோஸ் மாநாட்டையொட்டி, “ஆக்ஸ்பாம்” அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மிக விரிவாக அலசியுள்ளது.