articles

img

மார்க்சியப் பார்வையில் மதமும் மதவாதமும் - அ. அன்வர் உசேன்

கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட பிப்ரவரி 21ம் நாள் சிவப்பு புத்தக தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு “மதத்தை பற்றி மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்” எனும் நூல் வாசிப்பை பாரதி  புத்தகாலயம் முன்னெடுத்தது. பல இடங்களில் இந்த வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளது. மதம் குறித்து மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த சித்தாந்த நடைமுறை ஆய்வுகளை வேறு எந்த தத்துவமும் முன்வைக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது. இவை வெறும் சித்தாந்த ஆய்வுகள் மட்டுமல்ல; நடை முறைக்கு வழிகாட்டி. சோசலிச நாடுகளிலும் சோசலிசத்துக் காக போராடும் தேசங்களிலும் நடைமுறை வழிகாட்டியாக இந்த கருத்தாக்கங்கள் உள்ளன.

மதத்தை படைத்தது மனிதனே!

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இந்த நூலில் 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டுரை “ஹெகலின் உரிமைகள் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு” என்பதாகும். இந்த கட்டுரையின் முதல் மூன்று பக்கங்களில் (பக்:11-13) மார்க்ஸ் அவர்கள் மதம் குறித்து மிக ஆழமான செறிவான கருத்துகளை முன்வைக்கிறார்.மார்க்ஸ் கூறுகிறார்:  “மதம் மனிதனை உண்டாக்குவதில்லை. மனிதனே மதத்தை உண்டாக்குகிறான்” (பக்:11) இதனை மார்க்ஸ் எழுதியது 1843ம் ஆண்டு! கம்யூனிஸ்டு அறிக்கை எழுதுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு. இதனை மேலும் மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தன்னைத் தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாத அல்லது தன்னைத்தானே ஏற்கெனவே இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வும் சுயமரியாதையும்தான் மதம்!” “இந்த அரசும் சமூகமும்தான் மதத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் மதம் என்பது தலைகீழ் உணர்வாகும்.  ஏனெனில் இந்த சமூகம் தலைகீழாக உள்ளது” மதம்  எந்த அளவுக்கு மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கீழ்க்கண்ட வார்த்தைகளில் விளக்குகிறார் மார்க்ஸ். மதம் என்பது 

v    உலகின் பொதுவான சித்தாந்தம்
v     உலகின் அறிவுக்களஞ்சியத்தின் சுருக்கம்.
v    மக்கள் மொழி வடிவத்தில் உள்ள தர்க்க கருத்துகள்
v    தவிர்க்க இயலாத மேன்மை தங்கிய ஆன்மீக விருந்தாளி.
v     உலகின் உத்வேகம்
v    ஒழுக்க நியதியின் கோட்பாடுகள்
v    உலகின் கவுரவத்தின் பூரணத்துவம்
v     நியாயத்துக்கும் ஆறுதலுக்கும் உள்ள சர்வ     வியாபகமான தளம் (பக்:11)
v     மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள மதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை சமூகத்தில் உருவாக்கியுள்ளது என்பதை இந்த அளவுக்கு யாராவது விளக்க இயலுமா? மார்க்சுக்கு மட்டுமே அது சாத்தியம்! 
v     இந்த நூலின் 12ம் பக்கத்தில் மனிதன் மதத்திடம் தஞ்சமடைந்து வெளிப்படுத்துகிற துயரம் இயக்கவியல் அடிப்படையில் இரு முரண்பாடுகளை கொண்டது என மார்க்ஸ் கூறுகிறார். 
v    அந்த துயரம் என்பது உண்மையான துயரத்தின் வெளிப்பாடு!
v    அதே சமயத்தில் அந்த துயரத்துக்கு எதிரான எதிர்வினையும் கூட!

மனிதன் மதத்திடம் தஞ்சமடைவது என்பது சில பகுத்தறிவுவாதிகள் கூறுவது போல இழிவான செயல் அல்லது கேலிக்குரிய செயல் அல்ல! மாறாக எந்த துயரத்தை மனிதன் வெளிப்படுத்துகிறான் என்பதையும் அதற்கான எதிர்வினையின் செயல்வடிவம் என்ன என்பதையும் நோக்குவது அவசியமாகிறது. இந்த வாசகங்களுக்கு பின்னர்தான் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற கீழ்க்கண்ட வரிகளை வெளிப்படுத்துகிறார்: “மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் பெரு மூச்சு. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மாவற்ற சூழலின் ஆன்மா. (எனவே) இது மக்களுக்கு வாய்த்த அபின்”

மதம் ஏன் அபின்?

‘மதம் மக்களுக்கு அபின்’ எனும் வாசகத்தை வைத்து கொண்டு கம்யூனிஸ்டுகள் மீது இரு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு விமர்சனம் ஆன்மீகவாதிகளுடையது. இவர்கள் காரல் மார்க்ஸ் அபினுடன் ஒப்பிட்டு மதத்தை இழிவுபடுத்திவிட்டார் என கூப்பாடு போடுகின்றனர். இந்த வாசகத்துக்கு முன்னால் உள்ள பல அம்சங்களை ஆய்வு செய்தால் மார்க்ஸ் மதத்தை இழிவுபடுத்தவில்லை என்பதை தெளிவாக அறிய முடியும். மனிதனின் வாழ்வில் மதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை மார்க்ஸைவிட தெளிவாக முன்வைத்த எந்த ஆன்மீகவாதியும் இல்லை. மேலும் மார்க்ஸ் காலத்தில் ஜெர்மனி போன்ற தேசங்களில் அபின் போதைப்பொருள் என தடைப்படுத்தப்படவில்லை. எனவே மதத்தை மார்க்ஸ் இழிவுபடுத்தினார் எனும் அவதூறுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னொரு விமர்சனம் பகுத்தறிவுவாதிகளுடையது! மதம் அபின் என மார்க்ஸ் தெளிவாகவே கூறியுள்ளார்; ஆனால் இன்றைய கம்யூனிஸ்டுகள் மதம் குறித்த மார்க்சின்  மதிப்பீட்டை நீர்த்து போகச் செய்துவிட்டனர் என இவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர். பகுத்தறிவுவாதிகள் உலகில் வெறும் பிரச்சாரம் மூலம் மட்டுமே மதம் அல்லது கடவுளை அகற்றிவிட இயலும் என்கின்றனர். மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டுகள் குறைத்து மதிப்பிடவில்லை.  அமெரிக்க அறிஞர் இங்கர்சால் தன் வாழ்நாள் முழுவதையும் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்தார். தந்தை பெரியார் அவர்களின் தீவிர மான பிரச்சாரம் யார்தான் குறைத்து மதிப்பிட இயலும்?  கேரளாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்த ஆபிரகாம்  கோவூர் பல நவீன அறிவியல் முறைகளில் மதத்துக்கு  எதிராக களமாடினார். அவரைப்போல சாய்பாபாவை எவ ரும் அம்பலப்படுத்தியிருக்க முடியாது. வெற்றிடத்திலிருந்து விபூதியை வரவழைக்கும் சாய்பாபா பூசணிக்காயை வரவழைக்க முடியுமா என சவால் விடுத்தார். ஏனெனில் விபூதியை ஜிப்பாவில் கைகளின் அடியில் மறைத்துவைக்க இயலும். பூசணிக்காயை மறைப்பது சாத்தியமில்லை. எனினும் இந்த மகத்தான ஆளுமைகளின் பிரச்சாரத்துக்கு பின்னரும் மத ஈடுபாடு குறையவில்லை. மாறாக அது அதிகரித்துள்ளது என்பதே இன்றை சூழல்!

மதத்தை அபினுடன் ஏன் மார்க்ஸ் ஒப்பிடுகிறார்?

அபின் உட்கொள்பவன் தற்காலிகமாக தனது துன்பங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கத்தில் உலா வரு கிறான். ஆனால் போதை தெளிந்தவுடன் இந்த உலகின் துன்பங்களை அவன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  அப்படி முதலாளித்துவ சமூகத்தில் வாழ்வாதார துன்பங்களினால் அல்லறும் ஒருவன் முன்பு இரு வழிகள்  உள்ளன. ஒன்று இந்த துன்பங்களுக்கு காரணமான வர்க்க  பேதமுள்ள சமூகத்தை மாற்ற போராட முன்வரவேண்டும். அல்லது மதத்திடம் தஞ்சமடைந்து தனது துன்பங்களி லிருந்து விடுபட வேண்டும். மதம் எனும் புகலிடத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவன் மீண்டும் வர்க்க சமூகத்தின் உண்மை சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதம் அவனுக்கு தரும் நிம்மதி தற்காலிகமானது. நிரந்தர தீர்வு அல்ல. எனவேதான் மதம் மனிதனுக்கு வாய்த்த அபின் என்கிறார் மார்க்ஸ். “மக்களின் உண்மையான ஆனந்தத்திற்காக மாயை யாக உள்ள மதம் எனும் ஆனந்தத்தை ஒழிக்க வேண்டி யுள்ளது’’ எனக் கூறும் மார்க்ஸ், மனிதனின் சுய நம்பிக்கை யை எப்படி மதம் சிதைக்கிறது என்பதை கீழ்க்கண்ட வார்த்தைகளால் அழகாக கூறுகிறார்: “மனிதன் தன்னைதானே சுற்றிவராத வரையிலும் மனிதனை சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது”.

மதமும் அதன் புறச்சூழல்களும்

மேலும் இந்த நூலின் 13ஆம் பக்கத்தில் மார்க்ஸ் மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். மதம் எனும் திரையை அகற்றுவதில் நாம் வெற்றி பெற்றால் “பரலோகம் பற்றிய விமர்சனம் பூவுலகம் பற்றிய விமர்சனமாக மாறுகிறது; மதத்தை பற்றிய விமர்சனம் உரிமை பற்றிய விமர்சனமாக மாறுகிறது; இறையியலைப் பற்றிய விமர்சனம் அரசியல் பற்றிய விமர்சனமாக மாறுகிறது” எனக் கூறுகிறார்.  மதம் எனும் மாயையை அகற்ற வேண்டுமெனில் அந்த மாயையை உருவாக்கும் புறச்சூழல்களை அகற்ற வேண்டும்  என்றே பொருள் என மார்க்ஸ் ஆழமாக குறிப்பிடுகிறார்.  “மனிதனை மதத்துடன் பிணைக்கப்பட்ட சங்கிலி என்பது பொருளாதார சுரண்டலுடன் பிணைக்கப்பட்ட சங்கிலியின் பிரதிபலிப்புதான்” என்கிறார் மாமேதை லெனின். மேலுலகத்தில் உள்ள சொர்க்கம் குறித்து ஒடுக்கப் பட்ட வர்க்கங்களின் ஒருமித்த கருத்தைவிட இந்த பூமியில் சொர்க்கத்தை உருவாக்கும் தொழிலாளி வர்க்கத்தின்  கருத்தொற்றுமை  மிக முக்கியம் எனவும் கூறுகிறார் லெனின்.  எனவேதான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு கடவுள்/மதம் மறுப்பு கண்ணோட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆணித்தரமாக கூறினார் லெனின்.

இந்த நூலின் 24வது பக்கத்தில் வளர்ந்து வந்த முதலாளித்துவ சமூகத்துக்கு இசைந்ததாக எப்படி கிறித்துவத்தின் புரொட்டெஸ்டண்ட் பிரிவு பரிணமித்தது என விளக்குகிறார். ஒவ்வொரு மதம் அல்லது மதத்தின் உட்பிரிவு தோன்றியதிலும் ஆன்மீகத்தோடு இணைந்து குறிப்பிட்ட சமூக/ பொருளாதார/அரசியல் காரணங்கள் உள்ளன என்பதே மார்க்சியத்தின் அடிப்படை நிலையாகும். வேத மதத்தை பின்னுக்கு தள்ளி சமணம்/பவுத்தம் முன்னுக்கு வந்ததற்கும் பின்னர் இந்த மதங்களை பின்னுக்கு தள்ளி சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி கண்டதற்கும் இத்தகைய காரணிகள் பொருந்தும். வெறும் ஆன்மீகம் மட்டுமே மதத்துக்கு அடிப்படையாக இருந்ததில்லை.  சுரண்டலுக்கான கருவிகளாக மாறிய மதங்கள் இந்த நூல் தொகுப்பின் இறுதி கட்டுரை மாமேதை ஏங்கெல்ஸ் அவர்களின் “ஆரம்பகால கிறித்துவத்தின் சரித்திரம்” பற்றியதாகும். இதில் 55வது பக்கத்தில் உள்ள  முதல் பத்தி மிக முக்கியமானது. தொடக்க கால கிறித்துவத்தின் வரலாறும் தொடக்க கால தொழிலாளி வர்க்கத்தின் வரலாறும் ஒரே மாதிரியாக உள்ளது என ஏங்கெல்ஸ் கூறுகிறார். இரண்டுமே உழைப்பாளிகளுக்கு ஆதரவாக நின்றன; இரண்டுமே அரசின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகின; இரண்டுமே மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண முனைந்தன. ஆனால் ஒரே வேறுபாடு என்னவெனில் கிறித்துவம் மறுமை உலகில் தீர்வு சொன்னது. சோசலிசம் இந்த உலகிலேயே தீர்வு சொன்னது. செயிண்ட் கிளமண்ட் “இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும்.”என்றார். ஆனால் 12ம் போப், பயஸ் சமூகத்தில் பல வர்க்கங்கள் இருப்பது என்பது படைத்தவனின் திட்டம் எனவும் பணக்காரன் மாளிகையில் இருப்பதும் ஏழை அவன் வாயிற் காப்பாளனாக இருப்பதும் படைத்தவனின் விருப்பம் எனவும் கூறினார். தொடக்கத்தில் சாதாரண மக்களுக்காக குரல் கொடுத்த கிறித்துவம் எப்படி ஆளும் வர்க்கங்களின் கருவியாக மாறியது என்பதை இந்த இரு முரண்பட்ட கருத்துகள் தெளிவாக்குகின்றன. 

பைசாண்டைன் சாம்ராஜ்யத்தின் அடக்குமுறை/ பாரசீக அரசர்களின் கொள்ளை/ கிறித்துவத்தின் மூட  நம்பிக்கைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இஸ்லாம் நின்றது. ஏழைகளும் ஒடுக்கப்பட்ட  இனத்தவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் வரவேற்கப்பட்ட னர். ஆனால் 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் எதிர் திசையில் பயணித்து ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை கருவி யாக மாறியது. இஸ்லாம் குறித்த மிகச் சுருக்கமான குறிப்பு இந்த புத்தகத்தின் 56/57ம் பக்கங்களில் அடிக்குறிப்பாக தரப்பட்டுள்ளது. வேத மதத்தின் வர்ணாசிரம கருத்துகளுக்கு எதிராக பவுத்தமும் சமணமும் எதிர்வினையாற்றின. “உயிர் கொல்லாமையை” முன்வைத்தன. யாகங்களில் பலியிட தமது கால்நடைகள் பறிக்கப்பட்டதால் “கொல்லாமை” கருத்தாக்கம் மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது. வர்ணா சிரமத்தால் பாதிக்கப்பட்டவர்களும் யாகங்களுக்கு கால் நடைகளை பறிகொடுத்தவர்களும் இந்த மதங்களை ஆதரித்தனர். ஆனால் கொல்லாமையை அதீதமாக முன்னெடுத்த சமணம் மண்ணை உழும்பொழுது உயிர்கள் கொல்லப்படுகின்றன எனக் கூறி விவசாயத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. இயற்கையிலேயே இது விவசாயி களிடம் அதிருப்தியை தோற்றுவித்தது. சைவமும் வைணவ மும் இதனை பயன்படுத்தி கொண்டன. இந்த மதங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் அடக்குமுறை கருவியாக பயன்பட்டன.

இந்துத்துவா அரசியல் திட்டத்தை முறியடிப்போம்

இன்று ஆர்.எஸ்.எஸ். மிக வேகமாக இந்துத்துவா திட்ட த்தை முன்னெடுக்கிறது. அனைத்துவித மதவாதங்களை யும் எதிர்த்து மக்களை திரட்ட வேண்டிய மிகப்பெரிய கடமை கம்யூனிஸ்டுகள் முன் உள்ளது. மனிதனின் வாழ்வில் பல வகைகளில் மதம் பின்னிப்பிணைந்துள்ளது; ஆர்.எஸ்.எஸ்.ன் நச்சுப் பிரச்சாரமும் இணையும் பொழுது பெரும்பான்மை மதத்தை சார்ந்த கணிசமான பிரிவினர் மத வாதத்துக்கு ஆதரவாக இரையாகின்றனர். மத அபிமானம் மதவாத ஆதரவு எண்ணமாக மாறுகிறது. அன்று எப்படி சைவமும் வைணவமும் சமணத்தையும் பவுத்தத்தையும் எதிரிகளாக சித்தரித்தன என்பதை இந்த நூலுக்கு பதிப்புரை எழுதிய எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், நூலின் 7 மற்றும் 8ம் பக்கங்களில் தெளிவாக எடுத்து காட்டியுள்ளார். அனைத்து சமணர்களின் தலையையும்  வெட்டுவதற்கு உண்டான வல்லமையை அரங்கநாதனிடம் வேண்டுகிறார் பொடியாழ்வார். கிராமப்புறங்களில் சிறு தெய்வங்களுக்கு எதிராகவும் அன்று நச்சு கருத்துகள் வெளியிடப்பட்டன. அன்று சமணத்தையும் பவுத்தத்தையும் எதிரிகளாக முன் நிறுத்தினர். இன்று இஸ்லாமியர்களையும் கிறித்து வர்களையும் எதிரிகளாக முன்நிறுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்துத்துவாவும் வெல்ல முடியாத சக்திகள் அல்ல என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவாக்கு கின்றன. ஆர்.எஸ்.எஸ்.ன் நச்சுப் பிரச்சாரத்தையும் வன்முறைகளையும் முறியடிக்க சித்தாந்தம்/ அரசியல்/ பண்பாடு ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்பட வேண்டிய தேவை நம் முன் உள்ளது. இதற்கு மார்க்சிய மூலவர்களின் ஆய்வுகளும் நடைமுறைகளும் நமக்கு வழிகாட்டியாக அமையும். அதில் மதத்தை பற்றி மார்க்ஸ் எனும் இந்த நூல் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது எனில் மிகை அல்ல.