குழந்தைகளுக்கு கதைகள் என்றால் பிடிக்கும். அதிலும் தாத்தாக்கள், பாட்டிகள் கதை சொன்னால் “இச்” கொட்டி, “ம்” கொட்டி கேட்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது? குழந்தைகள் முதல், இளைஞர்கள் வரை அனைவரும் வாயைத் திறந்து எச்சில் வடிய கேட்பார்கள். உலகத்திலேயே தலைசிறந்த “கதை சொல்லிகள்” தாத்தாக்களும் பாட்டிமார்களும் தான் என்றால் மிகையாகாது. இந்திய நாட்டின் அரசியலமைப்பு குறித்து குழந்தைகளிடம் வெகு எளிதாக தாத்தாக்கள் பாட்டிமார்களை விட வேறு யார் சொல்லிவிட முடியும்? அதையே அவர்கள் கதை வடிவில் சொன்னால். . . ? இந்த யுக்தியைத் தான் நூலாசிரியர் பத்மகுமாரி வெகு இலகுவாக கையாண்டிருக்கிறார். ஒரு பூங்காவின் பெஞ்சில் தினமும் குழந்தைகளுக்காக கைகளில் கடலை மிட்டாயுடனும், முகத்தில் வெண்ணிற தாடியுடனும் அமர்ந்திருப்பவர் தான் அரசியல் அமைப்பு பற்றிய கதையினை சொல்லும் தாத்தா. . . ! தாத்தாவை தினமும் சுற்றி தேன் வண்டுகளாக ரீங்காரம் செய்து கொண்டிருப்பவர்கள் தான் கதை கேட்கும் குழந்தைகள். ஆனால் புத்தகத்தின் முதல் பக்கத்தை படிக்கத் துவங்கியவுடன், வாசகர்களாகிய நாமும், வயது வித்தியாசமின்றி “வண்டு குழந்தைகளாக” மாற்றிவிடுகிறார் நூல் ஆசிரியர்.
எடுத்த எடுப்பிலேயே சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கு என்ன வித்தியாசம் என்ன வித்தியாசம் தாத்தா என்று குழந்தை ஒன்று கேட்பதும். . . சுதந்திர தினத்தன்று கோடி ஏற்றும் முறைமைக்கும் குடியரசு தினத்தன்று கோடி ஏற்றும் முறைமைக்கும் உள்ள வித்தியாசத்தை தாத்தா சொல்லுவது, நம்மை புத்தகத்தை நிமிர்த்தி வைத்து படிக்க வைக்கிறது. சுதந்திர இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தின் தேவை ஏன்? - என்று பூங்காவின் வெளியே பலூன், ஐஸ்க்ரீம் விற்கும் வியாபாரிகள் மூலம் சொல்லுவது எதார்த்தம். இப்படி எளிய உதாரணத்தின் மூலம், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக இருப்பதற்கு எவ்வாறு அரசியல் அமைப்பு சட்டம் உதவி செய்கிறது என்று சொல்கிற பாங்கு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை, அரசியல் அமைப்பு சட்டம் என்கிற பெட்டகத்தை திறக்கும் சாவி என்று உருவகப் படுத்தியிருப்பது நல்ல கற்பனை என்றால், அந்த முகப்புரையையே மறுநாள் குழந்தைகளையே எழுதி வருமாறு தாத்தா சொல்வது நல்ல யுக்தி. அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையின் ஒவ்வொரு அம்சத்தையும் குழந்தைகளுக்கு புரிவது போல் தாத்தா உரையாடியிருப்பது அருமை. மொத்தத்தில் குழந்தைகள் தாண்டி பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்திற்கு தேர்ந்தெடுத்து வரையப்பட்டுள்ள படங்கள் மிகவும் பொருத்தமாக இருப்பதோடு, படிக்கும் அனுபவத்தை மிகவும் ஆனந்தமாக்குகிறது. புத்தக வடிவமைப்பு குழந்தைகளைபடிக்கத் தூண்டும் வண்ணம் சிறப்பாக வந்த்துள்ளது. அட்டை வடிவமைப்பும் அட்டையின் வண்ணமும் பார்ப்பவர்களை கவரும்படி உள்ளது. முத்தாய்ப்பாக மகாகவி பாரதியின் “விடுதலை” பாடலை நிறைவு பகுதியாக வைத்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.
“ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே. . . . மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே. . .
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையோடு இயல்பாக பொருத்துகிறது பாரதியின் வரிகள். 30 நிமிட வாசிப்பு அனுபவம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையின் மகாத்மியத்தை போகிற போக்கில் சிறப்பாக சொல்லும் நூல்.
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
நூலாசிரியர்: ஆர்.பத்மகுமாரி
வெளியீடு: Book for children,
பாரதி புத்தகாலயம்
தொலைபேசி : 044-24332424;
விற்பனை : 044- 24332924
விலை : ரூ. 25/-