இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு , மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.ஏற்கெனவே இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அந்த நாடு பின்பற்றி வந்த நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் தளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பிரதமர் மாற்றம் என எந்த மாற்றமும் மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் மக்கள் இங்கிலாந்து நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும்,அந்த வர்க்கங்களின் அங்கமாக உள்ள மன்னர் குடும்பத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்,மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா,வரும் மே 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்கு மேலும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கூட கேட்காத மன்னர் குடும்பம்
இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்திலுள்ள அரண்மனையில் அவர் காலமாகும் வரை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காலனி நாடுகளில் நடந்த கொடுமைகள்,மக்களுக்கு அந்த ஆட்சி இழைத்த சொல்லொணாத் துயரங்கள் பற்றி அவர் சிறிது கூட வாயை திறக்கவில்லை. 1943-ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியின் கொள்கைகளால் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டு முப்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மடிந்து போன கொடுமை ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அதேபோன்று பிரிட்டிஷ் அடக்குமுறையால் சித்திரவதைக்கும், சிறை கொடுமைக்கும், தூக்கு தண்டனைக்கும் ஆளான எண்ணற்ற மக்களுக்கு எந்த நீதியும் வழங்காத அரசாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு இருந்து வந்துள்ளது. காலனி ஆட்சியின் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் அரச குடும்பமும், இங்கிலாந்து அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. வரலாற்றில் நிகழ்ந்துள்ள கொடுமைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு மனித சமூக நலன் மீது எந்த அக்கறையும் இருக்காது.அதன் கவனம் முழுவதும் கொள்ளை லாபமும், மூலதன பெருக்கமும்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுமைகள் மானுட வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக பதிந்துள்ளது. மனிதர்களையும், நாடுகளையும் அடிமைப்படுத்தி,உழைப்பைச் சுரண்டி, நாடுகளின் வளங்களை கொள்ளையடித்த அந்த வரலாறு மறக்க முடியாதது. பிரிட்டிஷ் அரசு இன்று மன்னிப்பு கேட்டாலும் கூட அது இழைத்த கொடுமைகளுக்கு, அதெல்லாம் ஈடாகாது உண்மையில், காலனித்துவ வரலாற்றில் உணர வேண்டிய படிப்பினை என்ன? மனிதர்களையும் நாடுகளையும் அடிமைப்படுத்தி, ஒடுக்குகிற முதலாளித்துவ, ஏகாதிபத்திய முறைமை முற்றாக தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான்.இந்தக் கடமையாற்றிட, இந்தியாவைப் பற்றிய மார்க்சின் எழுத்துகள் துணை நிற்கின்றன.
குழப்பமான பேச்சும், உள்நோக்கமும்
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் மார்க்சின் எழுத்துகள் பற்றி நுனிப்புல் மேய்வது போலப் பேசியுள்ளார்.இந்திய சமூக ஒழுங்கினை பிரிட்டிஷார் அழிக்க வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியதாக குறிப்பிடுகிறார்.இது இந்தியாவில் அவர்கள் ஆற்ற வேண்டிய ஒரு கடமை என்று மார்க்ஸ் எழுதி இருப்பதாக ஆளுநர் தெரிவிக்கிறார் ஏன் இந்த சமூக ஒழுங்கினை அழிக்க வேண்டும்? அதற்கு மார்க்ஸ் சொல்வதாக ஆளுநர் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார். கூட்டான அமைப்புக்கு தனிநபர் அடிபணிய வேண்டியுள்ளது; தனி நபர் வளர்வதற்கு கூட்டான அமைப்பு தடையாக இருக்கிறது; இதனால் இது அழிக்கப்பட வேண்டும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டதாக ஆளுநர் விளக்குகிறார். இது மார்க்சின் எழுத்தை ஆழமாக வாசிக்காமல் பேசிய பேச்சு மட்டுமல்ல; மிகவும் தெளிவற்ற,குழப்பமான கருத்து.ஆனால் இதற்கும் ஒரு நோக்கம் உள்ளது. எப்படியாவது மார்க்சினை இந்தியாவுக்கு எதிரானவராக முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசரத்தில் ஆளுநர் இந்த கருத்துக் குழப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார். மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதுகிற போது இந்தியப் பணத்தை வாடகை, டிவிடெண்ட், ரயில்வேயில் இலாபம்,ஓய்வுபெற்ற ஆங்கிலேய ராணுவ, சிவில் அதிகாரிகளுக்கான ஓய்வூதியம்,ஆப்கானிஸ்தானிலும் மற்ற இடங்களிலும் நடத்துகிற போர்களுக்கான தொகை என்று பல வகைகளில் கணக்கு போட்டு சுருட்டிக் கொண்டு போன வரலாற்றை அம்பலப்படுத்தியுள்ளார். இது அல்லாமல், இங்கிருந்து பருத்தி,சணல் உள்ளிட்ட பிரிட்டனின் தொழில் தேவைகளுக்கான மூலப்பொருட்கள், விற்பனைக்கான சரக்குகள் என்கிற முறையில் கொண்டு சென்ற சரக்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு, இந்தியாவின் ஆறு கோடி விவசாயிகள்,தொழிலாளர்களின் வருமானத்துக்கு ஈடானதாகும் என்கிற விவரத்தையும் மார்க்ஸ் பதிவு செய்துள்ளார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அனைத்துக் கொள்ளைகளும் மார்க்சின் பருந்துப் பார்வையிலிருந்து தப்பவில்லை அவர்களது பொருளாதாரக் கொள்கைகளும், கொள்ளைகளும்,இந்தியாவினை துன்ப துயரங்களுக்கு ஆளாக்கியது என்பதை அவர் விரிவாக பேசுகிறார். இந்த நிலைமைகளை மாற்றிட பாட்டாளி வர்க்கப் புரட்சி அவசியம் என்கிற பார்வையுடன் அன்றைய இந்தியாவின் சமூக ஒழுங்கினைப் பற்றி மார்க்ஸ் சிந்தித்தார்.அன்றைய இந்திய சமூக ஒழுங்கு, மோசமான ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்கள் கொண்ட நிலவுடைமை சமூகமாக இருந்தது. அதே நேரத்தில் மாற்றத்திற்கான சிந்தனைக்கு தடையேற்படுத்தும் சாதி, மத கண்ணோட்டங்கள் நிரம்பிய சமூகமாகவும் அது இருந்தது. எனவே, சாதிய, நில உடமை கொடுங்கோன்மை சமூகம் அழிக்கப்பட்டு ஒரு புதிய சமூகம் உருவாக வேண்டும் என்கிற அழுத்தமான எண்ணம் மார்க்சின் சிந்தனையில் இருந்தது. சமூகத்தில் வேரூன்றி இருந்த சாதிய முறை சமூக முன்னேற்றத்திற்கும்,சமத்துவத்திற்கும் முக்கியமான தடை என்று மார்க்ஸ் கருதினார்.இது 1850-களில் வேறு எந்த முக்கிய சிந்தனையாளரும் வெளிப்படுத்தாத மகத்தான கருத்து.சாதி ஒழிப்பு இலட்சியத்தின் முதல் முன்னோடி சிந்தனையாளர் மார்க்ஸ். அனைத்து வகைகளிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிற சமூக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து, மானுடத்தின் மீது அக்கறை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கு நீடிக்க வேண்டுமெனவும், அது 21-ஆவது நூற்றாண்டிலும் மேலும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறவர்கள்,அதற்காக பணியாற்றத் கூடியவர்கள்தான் மார்க்ஸ் கருத்தை எதிர்ப்பார்கள்.அதில் ஒருவர் தமிழக ஆளுநர்.எனவே அவர் மனம் போன போக்கில் மார்க்ஸ் எழுத்தை அவதூறு செய்வதில் வியப்பேதுமில்லை!!