articles

img

உலகம் பார்த்த சினிமா - கி.ஜெயபாலன்

“TILL”-2023-
Prime Amazon-OTT

அறிமுகமில்லாத பெண் அழகை கமெண்ட் அடிப்பது ஈவ் டீசிங் என்ற சிறு தண்டனை குற்றமே தவிர, மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல;  ஆனால் 1955ல் நிறவெறி உச்சத்திலிருந்த அமெரிக்கா வில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைப்பார்த்து கருப்பின இளைஞன் ஒருவன், அவள் அழகாய் இருப்ப தாய்ச் சொன்னதற்காக சட்டத்தை மதிக்காத கூட்டத் தால், அநியாயக் கொலை (lynching) செய்யப்படுகிறான். அவனது சாவுக்கு நீதிகேட்டுப்போராடும் தாயின் அவலக் கதையே “இதுவரை” என்ற பொருள் தரும் Till. (இதுவரையிலும் நீதி “மாயமான்”என்பது இதன் உட்கருத்து.) சிகாகோ நகரில்  கணவனை இழந்த, பெற்றோரோடு வசிக்கும் மேமிக்கு 14 வயது நிரம்பிய ஒரே மகன். குடும்பப் பெயர் எம்மட் டில்(Emmett Till).செல்லமாக அழைக்கும் பெயர் போபா. முடிதிருத்தும் தொழிலாளி ஜீன் என்பவரோடு, நட்பு பாராட்டி வாழும் மேமி, உள்ளிட்ட  அனைவரும் கருப்பினத்தவர்களே. மகன் போபாவே உலகம் என்று வாழ்பவள் மேமி. மிசிசிபி மாகாணத்தில் வாழும் மேமியின் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பள்ளி விடுமுறையை கழிக்க போபாவை அனுப்புகிறாள். இன, நிற வெறி பிடித்த, கறுப்பர்கள் மீது வெறுப்பைக் கக்கும் வெள்ளையர்கள் அதிகம் வாழும் மிசிசிபிக்கு மகனை ஒரு வித தயக்கத் தோடே அனுப்புகிறாள். ஒர் மாலை வேளையில் உறவினரின் மூன்று ஆண் பிள்ளைகளோடு, போபாவும் வெள்ளையனின் கடைக்கு காரில் செல்கிறார்கள். போபா மட்டும் கடைக்குள் சென்று மிட்டாய் வாங்கி, அதற்கான நாண யத்தை, கடைக்காரி கரோலினிடம் கொடுக்கி றான். வெள்ளைக்காரியான கரோலினின் தோற்றம், போபாவின் விருப்ப நடிகையை ஞாபகப்படுத்த, உடன் தனது பர்ஸை திறந்து, அதிலுள்ள நடிகை யின் புகைப்படத்தை காண்பித்து,”உங்கள் தோற்றம் இந்த நடிகையை போலுள்ளது” எனக்கூறுகிறான்.

ஒரு கருப்பு இளைஞன் தன்னிடம் நேருக்கு நேராக பேசுவதை, சிறிதும் விரும்பாமல் எரிச்சலடைந்த கரோலின், மிகுந்த கோபமடைகிறாள். இதனை பார்த்த உறவுப்பையன், உடன் போபாவை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளியே இழுத்து வருகிறான்.ஆனால் கோபம் தீராத கரோலின்,போபாவை துரத்திக் கொண்டே கடை வாசலுக்கு வருகிறாள்.வாசலில் நிற்கும் கரோலினை, சாலையில் நின்று கொண்டு விசிலடித்து,டாடா காண்பிக்கிறான் போபா. இதனை சற்றும் எதிர்பார்க்காத அருகிலிருந்த அனைத்து கருப்பர்களும், தங்கள் உயிரைக் காக்க அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள்.அடுத்து கரோலின் கைத்துப்பாக்கி கொண்டு  இவர்களை சுட முயற்சிக்க, அனைவரும் காரில் ஏறி தப்பிக்கிறார்கள். இந்நிகழ்வு நடந்து மூன்று நாட்கள் கழித்து, கரோலின் கணவன், மற்றொரு வெள்ளையன் மற்றும் இவர்களின் கருப்பின அடிமைகள் ஆகியோரோடு, போபாவை மட்டும் அவனது உறவினர் வீட்டிலிருந்து   துப்பாக்கி முனையில் கடத்துகிறார்கள்.பின்பு, இக்கூட்டம் போபாவை அடித்தே கொலை செய்து, பிணத்தை ஆற்றில் வீசுகிறது. வெள்ளையர்களின் நிறவெறிக்கு பலியான பாசமான மகனின், உருக்குழைந்த, முகம் சிதைந்த பிணத்தை, மீடியாக்களில் படச்செய்தியாக்கி அமெ ரிக்காவின் மனசாட்சியை உலுக்குகிறாள் மேமி.வெறுப்பு தோய்ந்த நீதியற்ற மிசிசிபி நகர நீதிமன்றத்தின் நிறவெறி இருட்டில், நீதியைத் தேடி மாபெரும் துயரத்தோடு பயணிக்கும் மேமியின் போராட்டமே மீதப்படைப்பு. நீதிமன்றத்தில் சாட்சி கூண்டில் வெள்ளையர்கள் அமர்ந்து சாட்சியளிப்பர். நீக்ரோக்கள் நின்றுகொண்டே சாட்சியமளிக்க வேண்டும்.வெள்ளையர்கள் மட்டும் பரிசோதனையின்றி வழக்காடு மன்றத்திற்குள் செல்லலாம். புகைபிடிக்கலாம். நீக்ரோக்களுக்கு இது தடை. வெள்ளையின பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்த பின், இருக்கைகள் காலியாக இருந்தால், அதில் மட்டும் நீக்ரோக்கள் அமரலாம். மற்ற நீக்ரோக்கள் நிற்கவேண்டும்.இதெல்லாம் நிறவெறியின் ஒரு சில வெளிப்பாட்டு உதாரணங்களாக படத்தில் வருகிறது.

மவுண்ட் பேயோ நகர நீக்ரோக்கள் அனைவரும் மேமி போல், நீதி தேடி அது கிடைக்காமல் அங்கேயே குடியேறியவர்கள் என்ற பதைபதைப்பு செய்தியும் படத்தில் உண்டு. வழக்காடு மன்றத்தின் முன் மேமி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு பயந்து ஓடுவாள். வெள்ளை குழந்தைகள் பொம்மை துப்பாக்கி கொண்டு மேமியை நோக்கி சிரித்துக்கொண்டே சுடுவார்கள். பாதிப்பற்ற, சத்தம் கேட்கும் துப்பாக்கியைப் போல்; நிறவெறி கொண்ட மிசிசிபி வழக்காடு மன்றமும் போலியானது  என்பதன் படிமமே இக்காட்சி. இறுதியாக மேமி, வழக்காடு மன்றத்தில், சாட்சி சொல்லும் காட்சியில், தாய்மையின் உன்னதத்தை விவரிப்பார். இது மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கும். மேமி முகத்தின் அருகாமையில் எடுக்கப் பட்ட 3.23 நிமிட ஒரே ஷாட் இது. இதில் மேமியின் பங்களிப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நெகிழ்வான பின்னணி இசை,  மேமியின் மனத்துய ரம், நம்பிக்கை,கொப்பளிக்கும் கோபம் ஆகிய அனைத்தையும்  நமக்கும் கடத்துகிறது. படத்தின் காஸ்ட்யூம், அரங்க அமைப்பு நம்மை ஐம்பதுகளுக்கு சுலபமாக நகர்த்துகிறது. அந்த புகைவண்டி நிலைய கிராபிக்ஸ் காட்சி மட்டும் விதிவிலக்கு. உன்னதமான ஒளிப்பதிவு,சிறப்பான படத்தொகுப்பு, தடம்புரளாத திரைக்கதை பார்வை யாளர்களை கட்டிபோடுகிறது. படத்தை நைஜீரியா பெண் ஷினோன்யே ஷிக்வூ சிறப்பாக இயக்கியுள்ளார். இவர் உலகின் கவனத்தை ஈர்ப்பார். 

மகனின் மீதான அபரிமிதமான பாசம் கொண்ட தாய்; மகனை ஒரு வாரம் மட்டுமே பிரிந்த சோகத் தாய்; கடத்தப்பட்ட மகனை நினைக்கும் வேதனையான தாய்; மகன் கொலைசெய்யப்பட்டு விட்டான் என்ற செய்தியை கேட்டு பரிதவிக்கும் தாய்; மகனின் வடிவற்ற முகத்தை கொண்டு இனவெறியை எதிர்த்து போராடும் தைரியத்தாய்; பொய்மை சூழ்ந்துள்ள வெள்ளை வழக்காடு மன்றத்தை எதிர்த்து போராடும் நீதித்தாய்; வழக்காடிகளின் விசாரணையில் தனது மகன் இரண்டா வது முறை கொலை செய்யப்படுவதை பார்க்கும் தாய்; இவற்றையெல்லாம் தனது கண்,கண் இமைகள்,கண்ணீர் துளிகள், ஆற்றாமையோடு சுவாசிக்கும் நாசி, புருவங்கள், கருப்புக் கன்னங்கள், வறண்ட இதழ்கள் துணையோடு மேற்கண்ட தாய்மை பாத்திரத்தை, பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்த்தி காட்டி, விந்தை புரிந்துள்ளார் டேனியலே டெட்விலர். இவரை நடிகை என்ற குமிழுக்குள் அடைக்கவே முடியாது. இவர் அதை கடந்து உச்சம் தொட்ட மகா கலைஞன் என நிருபித்துள்ளார்.இவர் தோன்றும் பல காட்சிகளில், படம் பார்ப்பவர்களின் கண்களில் நீர் சுரப்பதை தவிர்க்கவே முடியாது.சிறந்த பாத்திரப் படைப்புக்கான உலக விருது இவருக்கு கிடைப்பது சர்வ நிச்சயம். 2023-க்கான பாஃப்டா விருதுக்கும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இன்று வரை (TILL)தொடரும் அநியாயக் கொலைகளுக்கு எதிராக,பைடன் அரசு, 2022-ல் Emmett Till பெயரிலேயே The Emmett Till Anti-Lynching Act கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே இந்த வரலாற்று உண்மை நிகழ்வுக்கும், நிறவெறிக்கெதிரான தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.