articles

img

சினிமாவுக்குப் போன தோழர் லெனின் - களப்பிரன்

“சினிமா வெறும் சூன்யம். அது ஒரு பயனும் இல்லாதது மட்டுமல்ல, அழிவுக்கு அழைத்துச் சென்று வேண்டாத திசைக்கு திருப்பும் செயலாகும். விபரீத எண்ணம் கொண்டவ னால் மட்டுமே இந்தத் தெருவோர காட்சி வியாபா ரத்தை கலையின் அந்தஸ்திற்கு சொல்ல முடியும்” என்று ஒரு குரல் வரலாற்றில் கடுமையாக கூப்பாடு போட்டுள்ளது. இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல, ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தால் துரத்தி அடிக் கப்பட்ட; தன் சொந்த மக்களை சுரண்டிக்கொழுத்த இரண்டாம் நிக்கோலஸ் ஜார் மன்னன் தான். திரைப்படங்கள் தேவையா? அவற்றால் சமூ கத்திற்கு என்ன பயன்? அவை சமூகத்தை சீரழிக்கும் கருவிகளாக இருக்கின்றன. சினிமாவைத்தவிர உங்களுக்கு பேசுவதற்கு வேறு பேச்சே இல்லையா? சினிமாவிற்கு என்று ஒரு தனித்த விழா தேவையா? உலகத் திரைப்பட விழாவை நம்மூரில் யார் பார்க்கப்போகிறார்கள்? என்று காலத்திற்கு காலம் பரிணமித்த அந்தப் பழமைவாதக் குரல்களின் நவீனமான கேள்வி தான் இணைய உலகில் திரைப் பட விழாக்கள் தேவையா? என்பதும் கூட. 

பழமைவாதிகள் எல்லாக் காலங்களிலும் எல்லா நவீனங்களையும் கண்டு அஞ்சியிருக்கிறார்கள். பதற்றத்தோடு அணுகியிருக்கிறார்கள். அதைத் தடுப்ப தற்காக தங்களை தோற்றத்தில் சமூக அக்கறை கொண்ட நவீனவாதிகள் போல் காட்டிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள். ஆனால் முன்னேறும் பாட்டாளி வர்க்கம் நவீனத்தைக் கண்டு எந்நாளும் அஞ்சிய தில்லை. கூடுமானவரை அது அவற்றை தனதாக்கிக் கொண்டு முன்னேறியே வந்துள்ளது.

1917ல் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வந்தாலும் அங்கு புதிய அரசை முழுமையாக அமைக்க அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப் பட்டது. அதற்கு முன்பு இருந்த அரசின் அத்தனை செயல்பாடுகளையும் புரட்டிப்போடும் பணிகள் நடைபெறுகையில் அதில் முதன்மைச் செயல்பாடு களில் ஒன்றாக சினிமாவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. 1917க்கு முன் ரஷ்யத் தயாரிப்பு சினிமா என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் பெரிய படங்கள் ஏதும் தயாரிக்கப்படவில்லை. பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே திரைப்படங்கள் ரஷ்யாவில் இறக்கு மதியாகின. புரட்சி ஏற்பட்ட சூழலில் வெளிநாடுகளிலி ருந்து ரஷ்யாவிற்குள் வந்த அனைத்துமே தணிக்கை க்கு உள்ளாக்கப்பட்டன. அதில் பிரதானமாக அமெ ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த அனைத்து சினிமா படச்சுருள்களும் துறைமுகத்தி லேயே முடக்கப்பட்டன. அவ்வளவு நெருக்கடி மிகுந்த  சூழலிலும் லெனின் தனக்கான நேரத்தை ஒதுக்கி, முடக்கப்பட்டிருந்த திரைப்படங்களை பார்க்கிறார். திரைப்படங்களை முதன்முறையாக பார்த்த அவர் “எல்லாக் கலைகளையும் விட சினிமா நமக்கு அதி முக்கியமான ஒன்றாகும். நாம் மணிக்கணக்கில் பேசவேண்டிய கருத்தொன்றை சினிமாவில் ஓரிரு காட்சிகளால் மொழிகளைக் கடந்து கடத்த முடியும். ஆகவே நாம் முக்கியத்துவம் தந்தாக வேண்டிய முதல் கலை சினிமா தான்” என்று பேசியதோடு 1919லேயே திரைப்படத் துறையை நாட்டுடைமையாக்கி திரைப்படத்திற்கென்று முதல் பள்ளி ஒன்றை மாஸ்கோவில் தொடங்கினார். அதன் முதல்வராக தனது இணையர் நடாஷா குரூப்ஸ்கயாவை நிய மித்தார். அதற்குப் பின் உருவான சோவியத் திரைப் படங்கள் உலக சினிமாவிற்கு பல்வேறு கொடை களைக் கொடுத்தது மட்டுமல்லாமல், சோசலிச அரசைக் கட்டமைப்பதிலும் கருத்தியல் ரீதியில் பெரும் பங்கை வகித்திருக்கிறது என்று சொல்லலாம்.

தொழிலாளி வர்க்கத்தின் தொடர் வெற்றிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத வலதுசாரி சக்திகள் 1930களில் சினிமாவை தன்வயப்படுத்த முயற்சித்தது. அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம் தான் உலகத் திரைப்பட விழா. 1932ல் இத்தாலியில் அந்தக்காரி யத்தை தொடங்கிவைத்தவர் பாசிச சர்வாதிகாரியான முசோலினி என்பது வரலாற்று வினோதம். வெனிஸ் திரைப்பட விழாவை தொடங்கிய முசோலினி, ஒவ் வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கான விருதுக ளை வழங்கத் தொடங்கினார். ஆனால் எல்லா ஆண்டும் இத்தாலிய சினிமாவிற்கு மட்டுமே விரு தும் மற்ற உலக சினிமாக்களுக்கு அதிக வரிவிதிப்பும் என்று தனது பாசிசத் தேசிய வெறி அரசியலுக்கே அதை பயன்படுத்திக் கொண்டார். இதில் விமர்சனங்கள் எழுந்த போது அன்றைய ஹிட்லரின் ஜெர்மன் தேசத்து திரைப்படங்களுக்கு மட்டும், இத்தாலியைத் தாண்டி விருதுகள் அறிவிக்கப்பட்டதே தவிர வேறு எந்த நாடுகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்படவில்லை. 1937ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் ழான் ரெனுவார் இயக்கிய பிரெஞ்சு திரைப்படமான தி கிராண்ட் இல்யூஷன் (The Grand illusion) படத்து க்கு விருது மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பிரெஞ்சு படைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பாசிச அரசிற்கு எதிராகத் தோற்றுவித்ததுதான், இன்று உலகின் சிறந்த திரைப்பட விழாவாக விளங்கும் ‘கான்ஸ்’ திரைப்பட விழா ஆகும். இவ்வாறு தான் அரசி யல் சூழலுக்கு ஏற்ப உலகம் முழுவதும் அந்தந்த நாடு களின் உலகத் திரைப்பட விழாக்களும் உருவாகின.

இந்தியாவில் விடுதலைக்குப் பின்னர் உருவான புதிய அரசும் நவீன இந்தியாவைக் கனவு கண்ட நேரு வுமே 1952ல் உலகத் திரைப்பட விழாவை இந்தியா வில் தொடங்கினர். ஆனால் அந்த விழாக்கள் மந்த கதியிலேயே நடைபெற்றன. 23 ஆண்டுகள் கடந்தும், 1974 - 75ல் ஐந்தாவது உலகத்திரைப்பட விழாவை நடத்தும் அளவிற்குத் தான் அதன் வேகம் இருந்தது. அதுவும் 2004 முதல் கோவாவில் உலகத் திரைப்பட விழாவை நடத்த முடிவான பின்பு தான் இந்தி யாவின் உலகத் திரைப்பட விழா ஒரு சீரான நிலை யில் நகர்ந்தது. இதற்குக் காரணமும் கூட நாம் முத லில் சொன்ன சினிமாவை சீரழிவு வடிவமாகவும், தரம் தாழ்ந்த ஒன்றாகவும் பார்த்த பார்வையே ஆகும். அதோடு இந்திய சமூகத்தின் பிரத்தியேக வடிவமான சாதிய படிநிலையும், சமூகத்தின் பழமைவாத மன நிலையும் அவற்றோடு ஒன்று சேர்ந்து நவீன சாத னமான சினிமாவை இந்தியாவில் மேலும் வளர விடாமல் பார்த்துக் கொண்டன.  ஆனால் அதற்கு முன்பே மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் செயல் பட்ட திரைப்படக் கழகங்கள் உலக சினிமாவை  பரவலாக அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. அதற்கு, அந்த மண்ணில் 60களில் எழுச்சி பெற்ற புரட்சிகர சித்தாந்தங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.  அதன் விளைவை இன்று வரை இந்த இரண்டு மாநில சினிமாக்களிலும் அதன் அரசியல் சூழலி லும் நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 55ஆண்டுகளில் இங்கி ருக்கும் அரசியல் ஏற்ற இறக்கங்களுக்கும், சினிமாத் துறைக்கும் தொடர்பே இல்லை என்று சொல்ல இய லாது. இங்கிருக்கும் நாயக வழிபாட்டில் உலக சினிமா வின் கடந்த கால போதாமை அதில் எந்த அளவு பங்காற்றியிருக்கிறது என்பதையும், அதன் விளை வை நேரடி அரசியல் களத்திலும் நாம் இன்று வரை எதிர்கொண்டு வருகிறோம். சமீப காலங்களில் உரு வாகி பெருகிவரும் நவீன சமூக ஊடகங்களின் விளை வாகவும், சாட்டிலைட் தொலைக்காட்சியைத் தாண்டி இன்று ஓடிடி வழியாகவும் ஊடுருவி இருக்கும் சொற்ப  உலகம் அதற்கு சாட்சி. அது கொடுத்துள்ள பார்வை நவீன தலைமுறையிடம் நாயக வழிபாட்டைத் தாண்டி பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருப்பதை நம்மால் இன்று உணர முடிகிறது.

இன்று திரையரங்கம் செல்லத் தேவையில்லை. இணையம் இருக்கிறது, ஓடிடி இருக்கிறது. எந்த அரசு இயந்திரத்தாலும் அதை தடுக்க இயலாது.  நூற்றுக்கணக்கான உலகப் படங்களை யார்வேண்டு மானாலும் பார்க்கும் சூழல் இருக்கும் இன்றைய ஜனநா யக நாளில் ஒரு திரைப்பட விழா தேவையா என்ற கேள்விக்கு ஒருவர் வரக்கூடும். கலைத்துறையை, திரைப்படத் துறையை, திரையரங்குகளை, அச்சு மற்றும் சாட்டிலைட் ஊடகங்களை - என்று எல்லா வற்றையும் விழுங்கும் ஆளும் வர்க்கம் இணையத்தை யும், ஓடிடியையும் விழுங்காமல் இருக்கப் போவது இல்லை.  எனவே திரைப்பட விழா என்பதன் நோக்கம் வெறும் படம் பார்ப்பது மட்டுமல்ல;  எப்படி திரைப்படங்களை பார்க்கவேண்டும் என்ற கற்றல் முறையின் ஒரு பகுதியாகும்.  

லெனின் திரைப்படத்தை முதலில் கண்டவுடன் அவர் அதைக் கொண்டாடியதோடு நிற்கவில்லை. அதைத்தாண்டி அவர் செய்த முதல் பணி, திரைப் படத்தை சொல்லித்தர வேண்டும் என்று திரைப் பள்ளியை உருவாங்கியது தான். இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் “திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று நாம் பள்ளிக்குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டும். அவற்றை பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும்” என்று சொன்னார். உண்மையில் திரைப்பட விழாக்கள் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் அரசு நடத்தும் திரைப்பட விழாக்கள் பெரும்பாலும் அவைகளை செய்வ தில்லை. காரணம் அவர்களுக்கு நோக்கம் மக்களை கல்விமயப்படுத்துவது அல்ல. ஆனால் தமுஎகசவை போன்ற முற்போக்கு அமைப்புகளுக்கு மக்களிடம் கருத்தியல் உரையாடல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் உண்டு. அதைத் தான் கடந்த ஆறு உலகத் திரைப்பட விழாக்களில் தமுஎகச செய்து வருகிறது. முதலில் எல்லோரையும் ஒரு அரங்கில் கூடி திரைப் படத்தை பார்க்க வைக்கிறது. அதுவும் செல்பேசி திரை யில் சிக்கி எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாத இந்தத் தலைமுறைக்கு பெரிய திரையில் முழுவதுமாக கவனம் குவித்து திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் ஏற்படுத்துகிறது. பல்வேறு உலக நாடுகளின் தற்காலச் சூழலை காட்சி வழியே அறிமுகப்படுத்தி, அதோடு அந்தத் திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்று ஒன்று கூடி விவாதித்து, ஒன்றாகவே ஒருவருக்கு ஒருவர் கற்றுக்கொடுக்கவும், கற்றுக்கொள்ளவும் செய்கிறார் கள். இவ்விழாக்களில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு ஆளுமைகளை அமைப்பும் அழைக்கிறது; சிலர் தாங்களாகவே முன்வந்தும் பங்கேற்கிறார்கள். அவர்களோடு சமூகத்தின் பிரதிநிதியாக அந்த அரங்கம் உரையாடுகிறது.

அந்தப் பயணம் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி பட்டுக்கோட்டை, கம்பம், திருப்பூர், புதுச்சேரி, திருவண்ணாமலை என இன்று புதுக்கோட்டை வரை நீண்டுள்ளது.  புதுக்கோட்டையில் அக்டோபர் 14 (இன்று) முதல் நடைபெறும் 7ஆவது திரைப்பட விழாவிற்கு ஹவுஸ் புல் போர்டு போடும் அளவில் முன்னேறியுள்ளது. ஒருவாரம் முன்பே முன்பதிவு செய்து நிறைத்துள்ள நூற்றுக்கணக்கான இளைஞர் படையை மாநிலம் முழு வதிலிருந்து தமுஎகச திரட்டியுள்ள இப்பணி தமிழக பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

கட்டுரையாளர் : துணைப்பொதுச் செயலாளர்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்
திரை இயக்க ஒருங்கிணைப்பாளர்.