articles

img

அறியாத விபரங்களை அள்ளித்தரும் காவிரி நீரோவியம் - எஸ்.ஏ.பெருமாள்

“காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு கலைகளுக் கெல்லாம் அது தாய் வீடு” என்கிறது  தமிழ் கவிதை. இந்நூல் காவிரி தோன்றிய இடத்திலிருந்து அதன்  கரையோரங்களில் உருவான இலக்கியங்களையும், வரலாறுகளை யும் சொல்லிச் சென்று கடலோடு கலக்கும் வரை நிறைவுறுகிறது. நதிக்கரைகளில் தான் மனிதர்களின் நிலைத்த வாழ்வு உருவானது. அதன்பின் வரலாறு தொடங்குகிறது. இது மார்க்சியப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் முகநூலில் கட்டுரைகளாக வந்து பாராட்டுப் பெற்றது. அதுவே 806 பக்க பெரு நூலாக வந்துள்ளது. இதற்கு ஆதாரங் களாக சங்க இலக்கியங்கள் வரலாற்று நிகழ்வுகள் வாரிக் கொட்டப்பட்டுள்ளது. வாசகனை பிரமிப்பூட்டுகிறது. தலைக்காவிரி முதல் காசி கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஓராண்டு  பயணம் செய்து நூறு கட்டுரைகளாக இதை எழுதியுள்ளார். இதற்கான ஆதாரங்களாக 185 தமிழ் நூல்களை யும், 25 ஆங்கில நூல்களையும் காட்டியுள்ளார்.

அவர் கூறுகிறார்: மதம் என்பது கோட்பாடும் வழிபாடும் கொண்டதாக உருவாக்கப்பட்டது. வழிபாட்டுக்கு ஒற்றை இலக்கு மட்டும் இருந்தது. அது கோடிக்கணக்கான உழைக்கும் கூட்டத்தை ஆதிக்கத்தின் காலடியில் மண்டியிட வைப்பதே ஆகும். வழிபாடு என்பது அரசியல் வரை நீடிப்பதன் அர்த்தம் இதுதான். எது தன்னை நம்பப்படுகிறதோ அதுவே வழிபாடாக (காப்பதாக) மாறுகிறது. தத்துவங்கள் வழிகாட்டும் நெறி மட்டுமே. பூமியின் நிலவியல் முதல் உலகில் நிகழ்ந்த புரட்சிகளைப் பற்றிய பிரெஞ்சுப் புரட்சி முதல் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் முன்பு நிகழ்ந்த மத மாற்றங்கள் பற்றி- “சமணத்தின் தீர்த்தங்கரர்கள், சைவத்தின் நாயன்மார்களாகவும் பௌத்தத்தின் மாறன்காரிகள் வைண வத்தின் ஆழ்வார்களாகவும் மாறி சிவனையும் திருமாலையும் தூக்கிக் கொண்டு திக்கெட்டும் பயணமா யினர். மன்னர்களின் பேராதரவு இவர்களுக்குக் கிட்டியது. முன்பு மன்னன் இருந்த இடம் கோவில் எனப்பட்டது. பின்பு கடவுள் இருக்கும் இடமே கோவிலாக்கப்பட்டது. தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயத்தை ராஜராஜ சோழன் கட்டியதால்தான் அதன் பிறகான கோபுரங்கள் அனைத்தும் ராஜகோபுரம் என்றழைக்கப்பட்டன. கோவிலின் முதல் சுற்றில் பிராமணர்களும் அடுத்த சுற்றில் சத்திரியர்களும் அதற்கடுத்த சுற்றில் வைசியர்களும் அடுத்து சூத்திரர்களும் கோவிலின் தென்மேற்கில் பஞ்சமர்களும் குடியமர்த்தப்பட்டனர். கோவிலின் தென்மேற்கில்தான் எமன் குடியிருப்பதாகவும் வைதீகம் கூறுகிறது.

இந்திய மலைகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் முக்கியத்துவம் விரி வாகக் கூறப்பட்டுள்ளது. செயற்கைக் கோள்கள் உருவானதில் இயற்கையின் சீற்றத்தால் நதிகள் பாதை மாறின. காவிரி பாதைகள் மாறிய விபரங்கள் தரப்பட்டுள்ளது. காவிரியின் கிளை ஆறுகளும் வெவ்வேறு பெயர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நூலில் யாரும் எளிதில் படித்தறிய முடியாத செய்திகள் தஞ்சைப்  பெரிய கோவில் முதல் தேவரடியார்கள் உட்பட கால அரசர்களின் நடத்தைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. தஞ்சை நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆண்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தமிழகத்திலிருந்த, மூதேவி (மூத்த தேவி) வழிபாட்டிலிருந்தது. பிராமண வருகைக்குப் பின்பு ஸ்ரீதேவியை கொணர்ந்து மூதேவியை மறையச் செய்தனர். காவிரி பாயும் பகுதியில் அடிமை முறை அமலில் இருந்தது. இதற்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கி போராடியது. குத்தகை, வாரம் போன்ற முறையில் நிலப்பிரபுக்கள் விவசாயிகளைச் சுரண்டி வந்தனர். நிலப்பிரபுக்கள் விவசாயிகளை சாகுபடியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் நில மீட்சி இயக்கப் போராட்டம் நடத்தியது. செங்கொடி இயக்கத்தின் உச்சக் கட்டப் போராட்டம் வெண்மணியில் 44 பேர் தீயிட்டுக் கொளுத்தியதையும் இந்நூலில் சேவியர் பதிவு செய்துள்ளார்.

பலரும் அறியாத விவரங்களை முகநூலில் சேவியர் எழுதியதால் ஆயிரக்கணக்கானோர் அதை வாசித்து மகிழ்ந்தனர். இதை முழு நூலாக  கொணரவேண்டுமென வலியுறுத்தி வந்தனர். காவிரிப் பிரச்சனை தோன்றியது தான் இன்னும் தீர்க்கப்படாத அவலம் இன்னும் பல செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அருமையான இந்த நூலுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு அணிந்துரை எழுதி அழகு சேர்த்துள்ளார். இத்தகைய நூலை எழுதிய தோழர் சூரியா சேவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு காலத்தில் சேவியர் என்னிடம் மார்க்சியம் கற்றவர் என்ற பெருமை எனக்குண்டு. காவிரி நீரோவியத்துக் கடுத்து வைகை நீரோவியம் எழுதத் தொடங்கியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

காவிரி நீரோவியம் 
ஆசிரியர் : சூர்யா சேவியர்,  வெளியீடு : உயிர்மை
 விலை : ரூ.1,100

;