பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலை தாக்குதலின் மற்றொரு பகுதியாக லெபனான் மீதும் அறிவிக்கப்படாத போரை நடத்தி வருகிறது. இந்நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய எதிர்த் தாக்குதலில் இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த கேரளாவைச் சேர்ந்த பட்டி நிபின் மேக்ஸ்வெல் என்ற தொழிலாளி பலியானார். மேலும் இரண்டுபேர் படுகாயம் அடைந்தனர். இது மேக்ஸ்வெல் என்ற புலம்பெயர் தொழிலாளியின் மரணச் செய்தி மட்டும் அல்ல. ஆண்டாண்டு காலமாக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஆதிக்கத்தில் உள்ள வர்க்கத்திற்காக பலம் குன்றிய வர்க்கம் தனது உழைப்பை கொடுக்க வேண்டிய சூழல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆளும் வர்க்கம் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்துப் பிரம்மாண்டமாக வளர்ந்து உள்ளது. மனிதன் குழுக்களாக வாழத் துவங்கிய போது, ஒரு குழு இன்னொரு குழுவை தாக்கி குழுவில் இருப்பவர்கள் அடிமையாக்கினார்கள். மன்னர் ஆட்சிக் காலத்தில் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டு ஆண்க ளையும் பெண்களையும் குழந்தைகளையும் அடிமையாக்கினார்கள். ஆப்பிரிக்கர்கள் ,அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் ஆகியோரை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் எவ்வாறு சுரண்டி வளர்ந்து உள்ளார்கள் என்பதையும் இலங்கை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் தேயிலை தோட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சுரண்டப்பட்டார்கள், கொடுமையாகக் கொல்லப்பட்டார்கள் என்பதையும் வரலாறு காட்டுகிறது.
இது போன்று ஆசிய நாடுகள், ஆதிக்க நாடுகளுக்காக தங்கள் சொந்த நிலத்தில் பாடுபடுவது மட்டுமின்றி, அவர்களின் நாடுகளுக்கும் தொழிலா ளர்களை ஏற்றுமதி செய்துள்ளது. இன்று இந்த தொழிலாளர் ஏற்றுமதி நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம டைந்துள்ளது. இஸ்ரேலின் வளர்ச்சிக்காக தாய்லாந்து, இந்தியா, போர்ச்சுகல், பாலஸ்தீனர்கள் (கொத்தடிமைகளாக), மத்தியக் கிழக்கு நாடுகள் என பல நாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு சக்கையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர். வேலையின்மை, பசி, பஞ்சம் ஆகியவற்றால் இளைஞர்கள் பல இடங்க ளுக்கு வேலை தேடி இடம் பெயர்கின்றார்கள். இஸ்ரேலுக்கு இந்திய தொழிலா ளர்களை அனுப்பும் ஒப்பந்தத்தின் பின்னணியில் ஹரியானா, உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, வேலை வேண்டும்என்று கிளம்ப தயாராக இருக்கிறார்களே அதுவே சிறந்த உதாரணம்.
இஸ்ரேலில் இந்தியர்கள்
இஸ்ரேலில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இந்தியத் தொழிலாளர்கள் ஏற்கனவே பணியில் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் விவசாயம், கட்டுமா னத் தொழில், நோயாளிகளை பராமரிப்பவர்கள் என பல துறைகளில் பணி புரிந்து வருகிறார்கள். உலக நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடாக உள்ள இஸ்ரேல் முதியவர்கள் பராமரிப்பு, கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு தொழி லாளர்களை உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்கள். அதற்கான ஒப்பந்தங்களையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு நான்கு லட்சம் வரையிலும் மருத்துவப் பணியாள ராக செல்ல 10 லட்சம் வரையிலும் விசாவிற்காக மட்டும் செலவு செய்வதாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர். 2023 அக்டோபரில் போர் துவங்குவதற்கு முன்பாக மட்டும் இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலஸ்தீனத் தொழிலாளர்கள் இருந்தனர். போர் துவங்கிய பிறகு அவர்களை இஸ்ரேல் பணியை விட்டு துரத்தியது. அந்த இடத்தை நிரப்பத்தான் இந்தியா, தொழிலாளர்களை அனுப்ப முன்வந்துள்ளது.
யூத தொழிலாளர் கொள்கை
1920 ஆம் ஆண்டுகளில் யூத தொழிலாளர் கொள்கை கொண்டுவரப்பட்டது. தங்களுக்கு தேவையான வேலைகளை யூதர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இஸ்ரேலில் கூறப்பட்டது. 1967 க்கு பிறகு மேற்குக் கரையையும் காசாவையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கத் துவங்கிய போது பாலஸ்தீனர்களை அடிமைத் தொழிலாளராக தங்கள் தேவைக்கு பயன்படுத்தத் தொடங்கியது. அதன் பிறகு தான் இஸ்ரேலின் தொழிலாளர் சந்தையில் கட்டுமானத்துறை யில் 60 சதவீதம், விவசாயத் துறையில் 24சதவீதம் பாலஸ்தீனத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்தது. பிறகு 1987 ஆம் ஆண்டு சொந்த நாட்டு உரிமை கேட்டு பாலஸ்தீனர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் இஸ்ரேலுக்காக பணிபுரிந்து வந்த அத்தனை தொழிலாளர்களும் பங்கேற்றனர். இது இஸ்ரேலையே முடக்கியது. இதனை கண்டு இஸ்ரேல் நடுங்கிப் போனது. அதனால் அதிக தொழிலாளர்கள் இருப்பது தங்களுடைய பாதுகாப்பிற் கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பாலஸ்தீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கத் தொடங்கினார்கள். இதை ஈடுசெய்ய தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இஸ்ரேல் முதலாளிகள் அரசாங்கத்திற்கு உத்தர விட்டார்கள். இதன் மூலம் சீனா, இந்தியா, தாய்லாந்து, ரோமானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். 2001 ஆம் ஆண்டே கிட்டத்தட்ட 10 சதவீதம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியில் இருந்தார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான சுரண்டல்
புலம்பெயர்ந்து உலக நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டத் துவங்கியது இஸ்ரேல். நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தங்களில் கூட இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு எந்த ஒரு உத்தரவாதத்தையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை. ஒப்பந்தம் ஏற்படுத்துகிற நாடுகளும் தொழிலா ளர்கள் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் கேட்பதில்லை என்ற கடுமை யான குற்றச்சாட்டும் உள்ளது. இவை மட்டுமின்றி, தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் லட்சக்க ணக்கான ரூபாய்களை வேலைக்கு செல்லும் முன்பே தொழிலாளர்கள் இழக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதாவது தங்கள் கடனையும் வறுமையையும் போக்க அதைவிட அதிக கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதே வேளையில் நாட்டிற்குள் வரும் தொழிலாளர்களை தங்கள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் வகையிலும் இஸ்ரேல் குடிமகனாக மாறிவிடக்கூடாது என பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதாவது இஸ்ரேலில் பணி நிமித்தமாக வந்திருக்கும் வெளிநாட்டுத் தொழி லாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்கள் யாருடனும் காதல் வயப்படக்கூடாது, என்றும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடு களை வைத்துள்ளது. விசா காலம் முடிந்தவுடன் உடனடியாக அவர்களை நாட்டை விட்டு தூக்கி எறிந்து விடும். மேலும் பொது சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இருந்து தொழிலாளர்களை தள்ளி வைத்துள்ளது.
ஆபத்தான பணியில்...
தொழிலாளர்கள் தங்கும் இடங்களிலும் பணியிடங்களில் போதிய பாதுகாப் பின்றி ஒவ்வொரு நாளும் ஆபத்தான சூழலில் பணியாற்றுகிறார்கள். எடுத்துக்காட்டாக விவசாயப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பாதுகாப்பான கவசங்கள் இன்றி உயிரைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்தகைய மோசமான சுரண்டலின் பின்னணியில் இஸ்ரேலுக்கு ஆத ரவாக அமெரிக்காவின் அழுத்தமும் உள்ளது. இவ்வாறான அமெரிக்காவின் அழுத்தத்தால் பல நாடுகள் தொழிலாளர்களை அனுப்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள் . இந்த பின்னணியில்தான் இஸ்ரேலில் தற்போது புலம்பெயர் தொழி லாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர் கள் கட்டுமானம் மற்றும் விவசாயப் பணிகளிலும் 70 ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நோயாளிகள் பராமரிப்புப் பணியிலும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தற்போது உயிருக்கு உத்தரவாதம் இன்றி நவீன அடிமை முறைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதில் கேரள நர்ஸ் சௌமியா பலியானார். முதலாளித்துவத்தின் தேவைக்கும் ஆசைக்கும் ஏற்ப மூலதனத்தை எல்லை தாண்டி பயணிக்க எளிய பாதைகளை உருவாக்கிய நவீன தாராள மயக் கொள்கைகள் நவீன அடிமை வர்க்கத்தை உருவாக்கி மென்று துப்பிக் கொண்டு இருக்கிறது. அதில் இந்தியர்களை பலி கொடுக்கத் தயங்காமல் முடிவெடுத்துள்ளது பாஜக அரசு.