articles

img

பாஜக-வின் பெண்கள் மீதான வெறுப்பு

சர்வதேச அளவில் பதக்கங்களைப் பெற்ற நம் நாட்டின் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும்  வீரர்கள் பலர்,  ஒன்றிய அரசுக்கு எதிராக தில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்களுக்கு எதிராக, மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்காக ஒன்றிய அரசாங்கம் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சகத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சட்டம் சொல்வது என்ன?

இவர்கள் அளித்த புகார்கள் மீது எவ்வித நடவடிக்கை யும் எடுப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருவதால், வேறு வழியின்றி ஜனவரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் தள்ளப்பட்டார்கள். 2013ஆம் ஆண்டு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர், முறையிடு பவரின் நலனைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு  பெறும் நிலையில் இருப்பவராக இருந்தால், முறையிடு பவர்கள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரும்பட்சத்தில், அந்தப் பொறுப்பிலிருந்து அவர்  நீக்கப்பட வேண்டும் என்று மிகவும் தெளிவாகவே கூறு கிறது. எனினும், மல்யுத்த வீராங்கனைகளால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர், பாஜக எம்.பி., தொடர்ந்து அந்தப் பொறுப்பிலேயே நீடித்து வருகிறார்.  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ஆதரவு  பெருகிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இப்பிரச்சனை தொடர்பாக விசாரணை செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி ஒரு குழுவை அமைத்திட விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த அறிக்கையே மூன்று மாதங்கள் கழித்துத்தான் வெளியிடப் பட்டிருக்கிறது. இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின் நகல் எதுவும்  சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை. இவ்வாறு இவர்கள் மீண்டும் ஒருமுறை இச்சட்டத்தை மீறி இருக்கிறார்கள். புகார்தாரரின் புகார் மீது ஏதேனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அதன்  நகலை அவருக்கு அளிக்க வேண்டியது இச்சட்டத்தின்படி யான கடமையாகும்.  ஏனெனில் அப்போதுதான் அவர்கள் தங்கள் புகார் மீதான நடவடிக்கை குறித்து தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்திட முடியும். ஆனால், அதற்குப் பதிலாக, அமைச்சகம் புகார்தாரர்கள் அளித்த புகார்களில் நடைமுறை பலவீனங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி இருப்பதுடன், பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.

மீண்டும் சட்ட மீறல்

பின்னர், மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் ஒருமுறை, தர்ணா போராட்டத்தில் அமர்வதற்கு முன்பு, புது தில்லிக் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்திருந்தார்கள். மேற்படி எம்.பி.யின் இல்லத்தில் ஓர் இளவயது சிறுமி உட்பட நான்கு பேர்களிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் கொடுத்ததுடன், அவற்றின்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, அந்தப் புகார்  மனுக்களில் குறிப்பிட்டிருந்தார்கள். மேற்படி எம்.பி.-யின் இல்லம் மேற்படி காவல்நிலையத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் வருவதால், இவ்வாறு அந்தக் காவல்நிலையத்தில் புகார்கள் அளித்திருந்தார்கள். கடமை தவறாத காவல்துறையினர் என்றால் இவற்றின்மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். எனினும், உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தில்லிக் காவல்துறை அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது. மீண்டும் ஒருமுறை இவ்வாறு சட்டம் கேலிக்கூத்தாக்கப் பட்டிருக்கிறது.

பாதுகாக்க முயற்சிக்கும் பாஜக

இதுதொடர்பாக நடந்துள்ள விவகாரங்களை முழுமையாக ஆராயும்போது, ஒன்றிய அரசாங்கம் இதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்பதும், இப்பிரச்சனையை காலங்கடத்தி ஆறப் போடவே அது விரும்புகிறது என்பதும் நன்கு தெரிகிறது. இதற்கான  காரணம் மிகவும் தெளிவானதாகும். பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆறு தடவை எம்.பி.ஆக இருக்கிறார். உத்தரப்பிர தேசத்தில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோண்டா நகரில் ஆளும் கட்சியின் செல்வாக்கான நபராக இருப்பவர். இந்த நபர் பல்வேறு கிரிமினல் குற்றங்களைப் புரிந்துள்ள ‘பாகுபலி’ போன்று வலுவான மனிதராக அவர்களால் கருதுப்படுபவர்.  அவருக்கிருக்கும் செல்வாக்கு, கட்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாஜக-வின் அணுகுமுறை என்பது, தங்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் ஏன் அமைச்சர்கள் மீது கூட பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் சுமத்தப்பட்டால், அவற்றை அது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, அவர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 

அரியானாவிலும்...

இவ்வாறு மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் ஜனவரியில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில், அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர், சந்தீப் சிங்கிற்கு எதிராக, இளம் பெண் பயிற்சியாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டது. மாநில முதல்வர், மனோகர் லால் கட்டாரும் அந்த நபர் மீது நடவடிக்கை எதுவும் எடுத்து, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க  மறுத்துவிட்டார். அவரை விளையாட்டுத்துறை பொறுப்பி லிருந்து மட்டுமே விடுவித்திருக்கிறார். இந்த நபர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று  வலியுறுத்தி, அவருக்கு எதிராக விளையாட்டு வீராங்கனை களும், வீரர்களும், மாதர் அமைப்புகளும் போராடி வந்த போதிலும், பாஜக அதனைச் செய்ய மறுத்துவிட்டது. கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டபின்னர், ஏழு மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் அளித்த புகார்கள் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு  செய்யாதது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக் கிறார்கள். புகார்தாரர்கள் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் ஆழமானது என்று கூறி அவற்றின்மீது அவசரமாக தீர்மானித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வாயம் தீர்மானித்திருக்கிறது. அவ்வாறே காவல்துறையினருக்கும் அறிவிப்பு அனுப்பி இருக்கிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டால்தான் காவல்துறையே செயல்படும் போல் தோன்றுகிறது.

உபி- செங்கார் வழக்கில்...

பாஜக, தங்கள் தலைவர்கள் மீதும் தங்கள் மக்கள் பிரதிநிதிகள் மீதும் வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை, கொஞ்சம்கூட கவலைப்படாது தள்ளுபடி செய்யும் விதமும், அந்த நபர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. 2017இல் உத்தரப்பிரதேசத்தில் உன்னாவோ என்னுமிடத்தில் மிகவும் அவக்கேடான (notorious), குல்தீப் சிங் செங்கார் வழக்கே இங்கே நமக்கு நினைவுக்கு வருகிறது. பாஜக எம்எல்ஏ-வான செங்கார், 17 வயது இளம் சிறுமி ஒருவரை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் மாநில அரசாங்கமும், காவல்துறையும் அவரைப் பாதுகாக்கவே முயற்சித்தன. பொது மக்கள் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்ததாலும், உயர்நீதிமன்றம் தலையிட்டதாலும் இந்த வழக்கு மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் செங்கார் கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். பிரிஜ் பூஷன் சரண் சிங் விவகாரமும் இதேபோன்றே தொடரப்பட வேண்டும். முதலமைச்சர் ஆதித்யநாத் சமீபத்தில்  ‘‘உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்களும், சமூக-விரோதி களும் கடந்த கால சமாச்சாரம்’’ என்று பீற்றிக்கொண்டார். இத்துடன் அவர் ஒன்றை இணைத்துக்கொள்ள வேண்டும். அதாவது ‘‘வலதுசாரி அரசியல் அமைப்புகளுடன் இணைந்து ள்ள கிரிமினல்கள் இதற்கு விதிவிலக்கு’’ என்று ஒரு வரியையும் அத்துடன் அவர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 26, 2023
தமிழில்: ச.வீரமணி