நீண்ட நாள் பரிச்சயம் என்றாலும் மனிதரை முன் போல் அதிகம் பார்க்க முடிவதில்லை. கண்ணில் பட்டாலும் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற வேண்டியதாகி விடுகிறது. வேடிக்கை என்ன வெனில், இவருக்கு ஆகாத ஆட்கள் தான் இவரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எப்போதும் பேசிக் கொண்டி ருக்கின்றனர். ‘என் சிநேகிதன்னு கூட வெளியே சொல்லிக்காதே... உனக்கும் ஆபத்து’ என்று அண்மை யில் கூட, அக்கம்பக்கம் பார்த்து விட்டு மெல்ல என் காதருகில் முணுமுணுத்து விட்டுப் போனார். சொல்ல மறந்துவிட்டேனே, அவருக்கு வயது 74 முடிந்து 75 நடக்கிறது. அவரால் தான் சரியாக நடக்க முடிவதில்லை. வயது காரணமல்ல. அந்த அடி வாங்கி இருக்கிறார் வழி நெடுக!
இவரோட இரண்டரை வயசு மூத்த அண்ணன் பிறக்கும்போதே ஒரு பண்டிதர் சொல்லி இருந்தார், குழந்தையைத் தக்க வச்சுக்கணும்னா கண்ணும் கருத்துமாப் பாத்துக்கணும்னு....அந்த பாதுகாப்பு இவருக்கும் பொருந்தும்... பண்டிதர் மகளே படுத்தி எடுத்த பாட்டுல, குத்துயிரும் குலையுயிருமா மனிதர் சில காலம் கோமாவில் கிடந்தார். ஆனா தங்களை வதைச்சுக்கிட்டுப் போராடி அவரைப் பத்திரமா வெளியே கொண்டுவரவும் சில நல்ல உள்ளங்கள் இருந்துச்சு... இப்போவும் அவங்க தான் இவரை நலம் விசாரிக்கிறதும், நலிந்து கிடந்தார்னு தெரிஞ்சா உடனே குளுக்கோஸ் ஏத்திக் கொஞ்சம் நடமாட விடவும் செய்யறது. ஹூம்...அதெல்லாம் பழங்கதை... இப்போ பெரிய ஆபத்துல இருக்கார்னு கேள்வி. அவரோட சேர்ந்தவங்க, சொந்தக்காரங்க எல்லோருமே சிரமத்தில் இருக்காங்கன்னு காதுபட பேச்சு. ஒரு மனிதருக்கு இத்தனை சோதனை வரக்கூடாதுங்க வாழ்க்கையில...பாருங்களேன்...ஆசையா ஒரு பள்ளிக்கூடம் கட்டி வச்சிருந்தார்... பள்ளிக்கூடத்த பராமரிக்கிறது ஊரார் பொறுப்பு. தலைமை ஆசிரியர்கள் அடுத்தடுத்து வந்து போய்கிட்டு இருந்தாங்க...
இப்போ ஒரு பத்து வருசமா வந்து உக்காந்திருக்கிற ஹெட்மாஸ்டர் அடிக்கிற லூட்டி, அராஜகம்னு பேசிக் கிறாங்க.... அவருக்கு ஆமாம் சாமி போட்டவங்க பொழைச்சாங்க... எதுத்து ஒற்றைக் கேள்வி கேட்டா போதும், பீம்பாய்னு ஒரு சவுண்டு கொடுப்பாரு, தொபுகடீர்னு ஒரு சத்தம் மட்டும் கேக்கும், உள்ளாற இருக்கவங்க கூண்டோட வெளிய கிடப்பாங்க. பள்ளிக்கூடத்துக்குள்ள ஒரு பாடமும் நடக்காது... பாஸ் பாஸ் பாஸ்னு அறிவிப்பு மட்டும் வந்துக்கிட்டே இருக்கும். திரைத்துறை, வனத்துறை, அறிவியல், வரலாறு, நீதி போதனை என எல்லாத்துறையிலும் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி மாமன் மச்சான் கொழுந்தியான்னு வேண்டப்பட்டவங்களா புடிச்சு போஸ்டிங்ஸ் போட்டுக்கிட்டாரு ஹெட்மாஸ்டரு.
அன்னிக்குப் பாருங்க... அறிவியல் கண்காட்சின்னு ஊருக்காரங்களைத் திரட்டி இவரே தொறந்து வச்சு என்ன பேசினாருங்கிறீங்க... ‘ஐயாயிரம் வருசமா எங்க பரம்பரைக்குத் தெரியாத வித்தையே கிடை யாது, எங்க முப்பாட்டன் காத்துல கரணம் அடிப்பாரு, எங்க கொள்ளுத்தாத்தாவோட எள்ளு தாத்தா கடல் மேல பறந்தவரு... இந்த சயன்ஸ் எல்லாம் ஹம்பக்’னு அடிச்சு விட்ருக்காரு....வரலாற்று பிரிவுல இவரோட சொந்தக்காரன் போட்டுக் காட்டுன ஸ்லைடு எல்லாம் பாத்து ஹிஸ்டரி வாத்தியாருங்க மண்டை குழம்பிப்போய் மனநல மருத்துவமனையில இருக்காங்க. விளையாட்டு மைதானத்துல வீராங்கனைங்க கிட்ட மோசமா நடந்துக்கிட்ட ஆளுக்கு இவரு வீரன்னு பட்டம் கொடுக்கிறாரு. வெள்ளாமை செய்யுறவங்க ஏதோ கொறைன்னு குரல் கொடுத்ததுக்கு ஆள ஏவி அடிச்சு விட்ருக்காரு.பெண் குழந்தைங்க நம்பி நடமாட முடியல. ஊருக்கே நாட்டாமை இவரு.
இந்த அடாவடி எல்லாம் கண்டு அதிர்ந்துபோன நீதிபோதனை வாத்திமாருங்களும் பாத்துப் பாத்துப் பேச வேண்டிய அளவுக்குப் போயிருச்சு... கொஞ்சம் அப்படியும் இப்படியுமா எழுத ஆரம்பிச்சுட்டாங்க...ரிடையர் ஆனா ஹெட்மாஸ்டரோட ஆசீர்வாதத்துல ஸ்கூலோட வேற பிரிவுல சம்பளம் வாங்கிட்டு, கொற காலத்த ஜாலியா ஓட்டலாம்னு சிலரு முடிவுக்கு வந்துட்டா மாறி தெரியுது... அதுலயும் துணிஞ்சு எழுதற வங்க தான் ஹெச் எம்முக்கு இப்போ ஆகாதவங்க நம்பர் ஒண்ணு. இவரு ஹெட்மாஸ்டரா வந்தது ஒரு பெரிய பம்மாத்து. ஒரு சின்ன கிராமத்துல ஆரம்பப் பள்ளியை இவரு தான் தூக்கி நிறுத்துனாரு, அங்க படிச்ச வன்லாம் அமெரிக்காவுல வேல பாக்கான்... அட்லாண்டிக்ல கப்பல் வுட்றான்... அது இதுன்னு காது கிழிய கூவுன கூவுல இந்த ஊரு சனங்க ஏமாந்து இவர தலைமை ஆசிரியரா தூக்கி வச்சு கொண்டாடி னது. இப்போ தான் ஊர் மக்களுக்கு மெல்ல மெல்ல விஷயமெல்லாம் தெரிய வருது. ஹெட்மாஸ்டரா வந்தவரு, ஆசிரியப் படிப்பே படிக்காதவரு. பழைய ஆரம்பப் பள்ளியில் தொட்டது எதுவும் தொலங்கல... பட்டது எதுவும் பவிசில்லன்னு இப்பல்ல சாயம் வெளுத்து வருது... ஒண்ணு மண்ணாக் கலந்து இருந்த பசங்க, இவரு போனப்புறம் தான் கலர் கலரா கயிறு கட்டிக்கிட்டதும், ஒத்தருக்கொருத்தர் முட்டிக்கிட்டதும்.. இவரோட ஆளுங்க எப்பேர்ப்பட்ட வெறிக்கூட்டம்னு அந்த ஊர்ல பட்ட பாடு இப்போ இந்த ஊர்லயும்....
பசங்களும் கல்வியும் நாசமாப் போனதுக்கு ஸ்கூல் தான் மோசம்னு சொல்லி, ஊர் சனங்க காச எடுத்துப் பக்கத்துல வேற ஒரு கட்டிடத்தக் கட்டிப்புட்டு, அத கேள்வி கேக்குறவங்கள இங்கயும் வச்சு வெளுத்துக்கிட்டிருக்காரு, மாண்புமிகு எச் எம்! அதுலயும் கொடும.... நியாயப்படி பாத்தா, புது பள்ளிக்கூடம் தொறக்க வேண்டிய ஊர்த் தலைவிய, அன்றைக்குக் கிட்ட வரப்படாதுன்னு சொல்லிட்டாரு, தலைவியாவே இருந்தாலும் இன்ன சாதின்னு தான் இந்த அவமதிப்பு... அந்த அம்மா என்னடான்னா, ஹெச் எம் அய்யா போட்ட பிச்சைதான் நான் ஊர்த் தலைவியா ஆனதுன்னு செய்தி கொடுத்துட்டு இருக்கு. ஹெட்மாஸ்டருக்கு எப்படி இத்தனை ஆதரவுன்னு கேட்டா, ஊரை அடிச்சு உலையில் போடுற கம்பெனிக்காரங்க, நிலத்தை வளைச்சுப்போடும் ஆசாமிங்க எல்லோரும் இவருக்கு சப்போர்ட்டு, வங்கிச் சந்தையில் போய் நின்றால் மாட்டுத் தரகு ஆளுங்க துண்டைப் போட்டுப் பத்திரமா அவ ருக்குச் சேர வேண்டியதை யாருக்கும் தெரியாம கொடுத்திட்டுப் போயிருவாங்க. அவங்க சக்கை போட்டுப் பொழைக்கறதுக்கு இவரு வக்காலத்து. இவரை இப்படி ஆட வைக்கிற இவங்க குல குரு ரொம்பவும் வக்கிரமானவருன்னு பேசிக்கிறாங்க.
இப்படியான நிலைமையில் ஒடிஞ்சு போயி ருக்கும் என் நண்பரோட கதைக்கு வர்றேன்... அவ ரோட சகோதர சகோதரிகளும் ரொம்பவும் உபாதை களுக்கு உள்ளாகித் தவியாத் தவிக்கிறத அவரால் ஜீரணிக்க முடியல. தான் பொறந்தபோது உண்மையா சந்தோசப்பட்டவங்க கண்ட கனவு என்ன... இப்போ நடப்பதென்ன என்று நினைக்கும் போதே அவருக்குக் கண்ல முட்டிக்கிட்டு நிக்கும் கண்ணீரு. ஊர் சனங்க கொஞ்சம் மனசுல கைய வச்சு யோசிக்க வேண்டாமான்னு கேக்கறாரு... அநியாயக் காரனை பள்ளிக்கூடத்தை விட்டு மூட்டையைக் கட்டிட்டுப் போய்யான்னு விரட்ட வேண்டாமான்னு பதறுறாரு. இனியும் தான் வாய் மூடி நிக்க முடியாதுன்னு எல்லோர் வீட்டு வாசலிலும் வந்து இப்போ குரல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு....
இவ்ளோ சொல்லிக்கிட்டு வந்தேன், நண்பர் பேரைச் சொல்ல மறந்துட்டேனே ... ஜனநாயகம்ங்க அவரு பேரு. சுதந்திரம் தான் அண்ணன். மதச்சார் பின்மை கூட்டாட்சி, சமூக நீதி எல்லாமே ஒண்ணாப் பொறந்தவங்க தான்! அவங்க வாழ்வாங்கு வாழ்ந்தாத் தானே நாம நல்லா இருக்க முடியும். செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டியது உங்க பொறுப்பு... ஆமா... சொல்லிப்புட்டேன்.