‘உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் பிரிக்கப்பட்டபோது அனுபவித்த வலியை நாங்கள் உணர்ந்தோம். அது தோலைப் பிய்த்து எறிவது போன்று உள்ளது.”
அன்புள்ள காசா தாய்மார்களே, நான் உங்களிடமிருந்து ஆயிரக்க ணக்கான மைல்களுக்கு அப்பால் அமர்ந்திருக்கிறேன். எனினும் உங்கள் புலம்பல்கள், கதறல்கள், உங்கள் அலறல்கள் எனது இதயத்தை ஒரு அம்பைப் போல் கிழிக்கின்றன. உங்கள் அன்புக்குரியவர்கள், பரந்து கிடக்கும் இடிபாடுகளிலி ருந்து தோண்டியெடுக்கப்படும்போது - எலும்புகள், சிதைந்த பொம்மைகள், கிழிந்த கருப்பு நிறப் பைகளிலும், வெள்ளை நிறப் போர்வைகளிலும் கொண்டு வரப்படும்போது- நான் உதவி செய்ய முடியாதவனாக உணர்கிறேன். ஆறுதல் என்பது அர்த்த மற்ற சொல்லாகி விடுகிறது. பொறுமை என்பது பயனற்ற அறம். எனினும் கூட, ஒரு சிறு உடல் ஒரு பாலிதீன் பையில் ஒழுங்கற்ற எலும்புக் குவியலாகக் கட்டப்பட்டிருப்பதை விட ஒரு வெள்ளைப் போர்வையில் ஒழுங்காகச் சுற்றி வைக்கப்பட்டி ருப்பது ஆறுதலான விஷயம்தான். குறைந்த பட்சம் அந்தப் போர்வையில் ஒரு மனித உருவம் உள்ளது, அது மரணமடைந்ததாக இருப்பினும் கூட. அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேலிய ஆக்கிர மிப்பாளர்கள் -உங்கள் ரத்தமும் சதையுமாயி ருக்கும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்துள்ளனர். உங்கள் இழப்புக்காக நான் வருத்தப் படுகிறேன் என்று கூறுவது நீங்கள் அனுபவித்த வலியை அர்த்தமற்றதாக்கி விடுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதமுள்ள வாழ்நாள் முழுவ தும் உங்களுடனேயே இருக்கும்.
நின்று போன காலம்
உங்களில் பலருக்கு, உங்கள் வாழ்க்கையின் அன்புக்குரியவரின் இறந்த உடல் வெளியில் எடுக்கப்பட்ட அந்தக் கணத்தில் காலம் நின்று போயி ருக்கும். ஆனால் உலகம் தனது சொந்த பாணியில் சுற்றிக் கொண்டே இருந்தது. அதுதான் நம் உலகின் வழிமுறை. ஆம், அப்படித்தான் இந்த உலகம் இருக்கி றது. பங்குச் சந்தை உயர்ந்தது, பரஸ்பர நிதி லாபம் பெற்றது. அதிகமான போர் ஆயுதங்கள் கண்டங்க ளுக்கு இடையே கைமாறின. மூலதனத்தின் என்றும் மங்கி மறையாத மணம் பரந்த உண்மை யாக நிலைத்தது. உங்களது இழப்பு இந்த உலகுக்கு ஒரு விஷயமாகவே இல்லாமல் போனதன் காரணம் போர், அமைதி என்ற பெயரில் இன்னும் கொள்ளைய டிப்பதற்கு ஏராளமாக இருந்தது என்பதுதான். இன்னும் பல குழந்தைகள் கொல்லப்பட வேண்டியி ருந்தனர், இன்னும் பல நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட வேண்டியிருந்தன. ஆனால் இது முழு உண்மையல்ல. ஏனென்றால் எங்களில் பல லட்சக்கணக்கானோர் உங்களைப் பின் தொடரும் கொலைகார பயங்கரத்தைக் கண்டு ஆத்தி ரத்தில் துடித்துக் கொண்டிருந்தோம். உங்கள் குழந்தை களிடமிருந்து நீங்கள் பிரிக்கப்பட்டபோது அனுப வித்த வலியை நாங்கள் உணர்ந்தோம். அது தோலைப் பிய்த்து எறிவது போன்று உள்ளது. நான் எனது சின்னஞ்சிறிய மகளை முதன்முதலில் பள்ளியில் விட்டபோது அவளது கரம் என் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்த அந்தக் கதகதப்பை நினைவு கூர்கிறேன். உங்கள் கைகளை இனி ஒருபோதும் அந்தப் பிஞ்சு விரல்கள் கதகதப்படையச் செய்யாது என்பதை அறியும்போது, அது இதயம் நொறுங்கிப் போவதல்ல, உங்களது உலகமே முடிந்து போனது போன்றது. நான் இந்த இழப்பைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. காசாவின் இடிபாடுகளின் மேல் குவிந்து கிடக்கும் அந்தச் சிதைந்த பொம்மைகளும், சின்னஞ்சிறு ஷுக்களும் எங்கள் அனைவரையும் அவமானப்பட வைக்கின்றன. முரணாக அது நாஜி ஜெர்மெனியில் சித்ரவதைக் கூடங்களில் அவப்புகழ் மிக்க விஷவாயு அறைகளுக்கு வெளியில் குவிந்து கிடந்த ஷூ குவியலை நினைவூட்டுகிறது.
நீங்கள் உயிர் வாழ வேண்டும்
என் அருமை ஒம்மி, உங்கள் வாழ்க்கையையும் சிந்தனையையும் பிடித்துக் கொண்டு, உங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் சோகம் மட்டுமே உங்கள் மறு விழிப்புக்கும், உங்களால் முடிந்த வழிகளி லெல்லாம் வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு மான ஆயுதம். கடும் பனிக்காலத்தில் தமது இலை களையெல்லாம் இழக்கும் மரங்கள், வசந்த காலத்தில் உயிர்த்தெழுகின்றன. அது ஒரு மோசமான ஒப்பீடுதான். அநேகமாக அதுதான் மனிதர்களுக்கும், மரங்களுக்குமிடையிலான வேறுபாடு. ஆனால் என்னை நம்புங்கள், உங்களது இந்த ஈடு செய்ய முடி யாத இழப்பு, உங்கள் உடல், இதயத்தின் இழப்பு, வாழ்க்கையுடன் ஒரு வகையான சமாதானம். ஒரு எதிர்காலத்துக்கான இந்த நம்பிக்கைதான் உங்களை வாழத் தூண்ட வேண்டும். இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. உங்களால் இனி வாழவே முடி யாது என்று நினைக்கும் கணங்கள் இருக்கும். முக்கிய மாக இந்தப் பேரழிவின் முன்னோடிகளாக இருக்கும் ஆட்சியாளர்கள், ‘மோலோக்கு’களின் (குழந்தை களைக் கொல்லும் அரசர்கள்) நிழலில் இருக்கும். ஆனால் நீங்கள் உயிர்வாழ வேண்டும். காசாவின் கதைகளை எங்களுக்குச் சொல்வதற்காக நீங்கள் உயிர்வாழ வேண்டும். நீங்கள் ஒரு காலத்தில் வீட்டில் சுட்ட ரொட்டியின் மணத்தைப் பரப்ப நீங்கள் உயிர்வாழ வேண்டும். மனிதர்கள் வலியுடன் வாழ்ந்தால், அவர்கள் மனிதர்களாக இல்லாமல் போகிறார்கள் என்பதால் நீங்கள் வாழ வேண்டும். அவர்கள் புனிதர்களாகி விடுகிறார்கள். நீங்கள் இந்த உலகின் புனிதர்கள், இறுதித் தியாகத்தினைக் கடந்தவர்கள்.
துன்பத்தின் நிலைகள், தம் குடும்பத்தினரை இழந்தவர்களின் நிலைகளை எழுதிய எலிசபெத் குப்ளேர்-ராஸ் ஒருமுறை எழுதியதை நான் உங்க ளுக்குச் சொல்கிறேன். அவர் எழுதினார், மக்கள் வண்ணம்பூசிய படிந்த கண்ணாடி ஜன்னல்களைப் போன்றவர்கள். அவர்கள் சூரியன் ஒளி வரும்போது மின்னி, பளபளக்கிறார்கள். ஆனால் இருட்டியதுமே, அவர்களது உண்மையான அழகு உள்ளிருந்து வெளிச்சம் வந்தால்தான் வெளிப்படுகிறது. நீங்களெல் லாம் சூரியனை விழுங்கியவர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இப்போது இந்த இருண்ட உலகின் வெளிச்சம். எங்கள் மீது ஒளி வீசுவதற்காக நீங்கள் வாழத்தான் வேண்டும்.
நம்பிக்கையின் உயிர்ப்பு
பாதுகாப்பான வீடுகளில் உங்கள் குழந்தை கள் கொல்லப்பட்டது எங்களையெல்லாம் ஆத்திர மடையவும், கோபப்படவும், சோகமடையவும் வைத்துள்ளது. நாங்கள் வரலாற்றைப் படிக்கும்போது, மொத்தமாகப் படுகொலை செய்வதும், இன அழிப்பு களும் கடந்த காலத்தவை என்று நினைத்திருந் தோம். ஆனால் நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டி ருக்கிறோம். உங்கள் வீடுகளின் மீது ஒவ்வொரு குண்டும் விழுந்த போது, உங்கள் மார்புகளில் ஒவ்வொரு குண்டும் துளைத்தபோது, உங்கள் உடல் கள் சித்ரவதை செய்யப்பட்டபோது, இன அழிப்பு நிஜமானது. நம்பிக்கை உயிருடன் புதைக்கப்பட்டது. ஆனால் நம்பிக்கையை உயிருடன் வைத்திருப்பது என்பதே புத்துயிர்ப்பின் பொருள். உங்கள் மீது விரக்தி யைத் திட்டமிட்டு விதைப்பவர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தோல்வி நம்பிக்கையை உயிருடன் வைத்திருப்பதாகும். விரக்திக்கு நம்பிக்கைதான் நிச்சயமான எதிர்ப்பு மருந்து.
உங்களுக்கும் எங்களுக்கும் இரண்டே தேர்வு கள்தான் உள்ளன- மகிழ்ச்சியுடன் இருப்பது அல்லது அமைதியுடன் இருப்பது. மகிழ்ச்சி என்பது ஒரு கனவு. நான் உங்களைக் கனவு காணச் சொல்ல மாட்டேன். ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு முறை கண்ணை மூடும்போதும், அந்தச் சிறிய உடல்கள் சில்லு விளையாட்டு அல்லது கால்பந்து விளையாடும் அல்லது முன்பொரு நாள் அந்தப் பொம்மைக் கடையில் செய்தது போல் அமர்க்களம் செய்யும் என்பது எனக்குத் தெரியும். இஸ்ரேலின் படுகொலை, பேரழிவு ஆகியவற்றின் குரூரம் மனித நாகரீகத்தின் முகத்தில் கரும்புள்ளிகள். அவர்கள் காசாவில் மனிதாபிமானம் அனைத்தையும் கொல்லலாம் – ஆனால் அவர்களால் உங்களைக் கொல்ல முடியாது – என்றும் ஒடுக்க முடியாத தாய்மார்களைக் கொல்ல முடியாது. நான் உங்களை இங்கிருந்தே ஆரத் தழுவிக் கொள்கிறேன். நாங்களெல்லாம் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் இழந்ததை எங்களால் ஈடு செய்ய முடியாது. ஆனால் உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், அது உங்கள் உடைந்த இதயத்துக்கும், காயமடைந்த ஆன்மாவுக்கும் சிறிது அமைதியைக் கொண்டு வரும் என்று ஆழமாக நம்புகிறோம்.
தமிழில் : கி.ரமேஷ்