பசுமை நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி செல்பவர்களிடம் நோய்கள் குறைவாக காணப்படுகிறது. மருந்துகளுக்கு அடிமையாவதில்லை. குறைந்த வருமானம் இருந்தாலும் நேர்மறை எண்ணங்கள் அதிகம் இருப்பதால் அத்தகையவர்கள் வாழ்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கின்றனர் என்று பின்லாந்தில் நடந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முடிவுகள் வாழிடங்களில் பசுமை நிறைந்த பகுதிகள் இல்லாமல் இருப்பதாய் அல்லது வாழ்பவர்கள் அங்கு செல்லாமல் இருப்பதால் பலதரப்பட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர் என்று சமீப காலங்களில் ஆய்வாளர்கள் கூறிவருவதை நிரூபிப்பதாக உள்ளது. பூங்காக்கள், சமூகத் தோட்டங்கள், இதர பசுமையான இடங்களுக்கு செல்லும் நகரவாசிகள் மனப் பதட்டம், உறக்கக்குறைவு, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைக் குறைக்க உதவுகிறது.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பு
வாரம் மூன்று நான்கு முறை இத்தகைய இடங்களுக்கு செல்பவர்கள் மனநல நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவில் மூன்றில் ஒரு பகுதி குறைகிறது. ஆஸ்த்மாவிற்கு எடுத்துக்கொள்ளும் மருந்தில் கால்பகுதி குறைகிறது. பசுமை நிறைந்த பகுதிகளுக்கு சென்றுவருவதால் மனதில் உருவாகும் நேர்மறை எண்ணங்கள் மிகக் குறைந்த ஆண்டு வருமானம் உடைய குடும்பத்தினரிடையில் வலிமையாக உள்ளது. ஏழை சமூகங்கள் இயற்கை நிறைந்த இடங்களுக்கு செல்லும் வசதியை குறைவாகவே பெற்றுள்ளனர். பின்லாந்து சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக் கழகம் அந்நாட்டில் பெரும்பாலான நகரவாசிகள் வாழும் ஹெல்சிங்கி, எஸ்ப்பூ (Espoo), வாண்ட்டா (Vanttaa) நகரங்களில் வாழும் 16,000 பேரிடம் ஆய்வு நடத்தியது. நகரவாசிகளில் 25 வயதிற்கும் மேற்பட்டவர்களிடையில் இந்த ஆய்வு நடந்தது.
பசுமை இடங்களும் நீல இடங்களும்
வீட்டுக்கு அருகில் இவர்கள்வாழும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கும் காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், வரலாற்று இடங்களில் இருக்கும் பசுமை இடங்கள், கல்லறைகள், விலங்கு காட்சிச் சாலைகள், இயற்கைப் புல்வெளி நிலப்பகுதிகள், மைதானம் போன்ற திறந்தவெளி இடங்கள் மற்றும் ஈர நிலப்பகுதிகள் போன்ற பசுமை அல்லது கடல், ஏரிகள், நதிகள் போன்ற நீலம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது. இவர்களிடம் மனப் பதட்டம், தூக்கக்குறைவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா மற்றும் மன அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி ஆராயப்பட்டது. பசுமை இடங்களில் இவர்கள் செலவிடும் நேரம், அங்கு செய்யும் உடற்பயிற்சி பற்றி கேட்கப்பட்டது. ஆண்டின் மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் இத்தகைய இடங்களுக்கே செல்லாதவர்கள் மற்றும் ஐந்து முறை அல்லது அதற்கும் அதிகமாக செல்பவர்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மனப்பதட்டம், தூக்கக்குறைவு, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா நோய்கள் மக்களிடையில் பொதுவாக அதிகம் காணப்பட்டாலும் இவை தீவிர உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோய்கள் என்பதால் இவை பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. வாரம் ஒரு முறைக்கும் குறைவாக இத்தகைய இடங்களுக்கு செல்பவர்களைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு முறை செல்பவர்கள் மனநலப் பிரச்சனைகளுக்கான மருந்துகளை 33 சதவீதம் குறைவாகவே எடுத்துக்கொள்கின்றனர்.
மருந்துகளைக் குறைக்க சிறந்த வழி
இவர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை 36 சதவிகிதமும், ஆஸ்த்மாவிற்கான மருந்துகளை 26 சதவிகிதமும் குறைவாக உபயோகிக்கின்றனர். வாரம் ஐந்து முறை செல்பவர்கள் மனநலக் கோளாறுகளுக்கான மருந்துகளை 22 சதவிகிதமும், ஆஸ்த்மா மருந்துகளை 24 சதவிகிதமும் குறைவாக பயன்படுத்துகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே பசுமை இடங்களுக்கு செல்பவர்களைக் காட்டிலும் அடிக்கடி செல்பவர்கள் உயர் இரத்த அழுத்த மருந்துகளை 41 சதவீதம் குறைவாக பயன்படுத்துகின்றனர். நகரங்களில் அதிகமாக பசுமை நிறைந்த இடங்கள் உருவாக்கப்பட இந்த ஆய்வுமுடிவுகள் உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை வாழிட மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம் (Occupational&environmental Medicine)என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்த வாழ்வே இன்பமான நோயற்ற வாழ்வு என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.