தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமாகி 40 ஆண்டுகள் கடந்து அனைவராலும் மதிக்கப்படும் பேரியக்கமாக உயர்ந்து மாணிக்க ஆண்டில் பெருமையுடனும் பேரெழுச்சியுடனும் பயணிக்கிறது. பெண்களை அணிதிரட்டுவதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது, சாதனைகளை ஊக்குவிப்பது, அவர்களை அரசியல்படுத்துவது, போர்க்குணமிக்க, மனஉறுதிகொண்ட வலிமையான பெண்களை உருவாக்கிடவும், அவர்களுக்கு தலைமைபண்பை வளர்ப்பதன் மூலம் ஸ்தாபனத்தை , வலுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களை அலுவலக மையம், வட்டக்கிளைகள், மாவட்டங்கள் என மாநில அளவில் அணிதிரட்டி சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடத்தி பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வும் சமூக பாதுகாப்பும் ஏற்படுத்திவருகிறது. நவீன தாராளவாத பொருளாதார சந்தை நுகர்வு கலாச்சாரத்தில் பெண்களின் உடல் காட்சிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது, பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அழகுசாதனப்பொருட்கள், ஆடை அணிகலன்கள் விற்கப்படுகின்றன. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். விளம்பரங்களும் சினிமாக்களும் பெண் என்பவள் வெண் நிறமுடைய, ஒல்லியான தேகம் கொண்டவளாக இருக்கவேண்டும் என்று சித்தரிப்பதன் மூலம் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள சந்தை நுகர்வு கலாச்சாரப் பொறியில் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர். பெண்கள் தங்களை போலி மதிப்பீடுகளால் ஒப்பனை செய்துகொள்வதன் மூலம் பெரும் முதலாளிகளின் பொருட்களை விற்பனை செய்யும் விளம்பரதாரர்களாகவும், அவர்களுக்கு பணம் சம்பாதித்து குவிக்கும் திரைப்பட கருவிகளாகவும் பலர் மாற்றப்படுகிறார்கள். வாக்குரிமை, எட்டுமணிநேர உழைப்பு, பாலின சமத்துவத்திற்காக பல ஆண்டுகள் போராடி உயிர்த்தியாகம் செய்து பெற்ற சர்வதேச மகளிர் தினத்தை ஆடித்தள்ளுபடி அறிவிப்பது போல் விற்பனைச் சலுகைகளை அறிவித்து கொச்சைப்படுத்தப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம் என்பது கொண்டாடுவதற்காக அல்ல நமது உரிமைகளை பெறுவதற்காக என்பதை உணர்த்திட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கை நடத்துவதன் நோக்கம் குறித்து சமூகச் சிந்தனை கொண்டவர்களை அழைத்து அவர்கள் மூலம் சிறந்த கருத்துகளைப் பெற்று சமூகவிழிப்புணர்வு பெற உதவுகிறது. பெண்களுடைய பிரச்சனைகளை ஒட்டுமொத்த சமூகத்தோடு பார்க்கவேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் மாற்றம் அடையும் வரை பெண்கள் போராடவேண்டும் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் அனைவரின் விடுதலையும் ஒட்டுமொத்தமாக நோக்கப்படவேண்டும். “பெண் விடுதலை என்பது உலக பாட்டாளி வர்க்கத்துடன் தொடர்புடையது” – என்கிறார் காரல்மார்க்ஸ். தாய்வழிச் சமூகத்தில் எப்போது ஏற்பட்டதோ அப்போதுதான் ஆணாதிக்கம் ஏற்பட்டது. சொத்துக்களை பாதுகாக்க மக்களை அடிமைப்படுத்தியது போல பெண்களையும் அடிமைப்படுத்த தொடங்கினர். சொத்துரிமையற்ற சமுதாயம் இருக்குமிடத்தில் ஆண்களும் பெண்களும் சமமாகவே இருந்திருக்கிறார்கள். எனவே பெண் விடுதலையென்பது சமுதாய நலனோடு ஒன்றியது சொத்துரிமை சமுதாயம் மாறுகின்ற போதுதான் பெண்கள் விடுதலை அடைய முடியும் என்று மார்க்சி யம் கருதுகிறது. அந்தச் சிந்தனையை உரத்துப் பேசுகிறது அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்.