articles

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ஜி.ராமகிருஷ்ணன்

இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் “விஸ்வ கர்மா யோஜனா” எனும் திட்டத்தை அறி வித்தார். அதற்காக அரசாங்கம் 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் எனவும் அறிவித்தார். முதலில் அது முற்றிலும் உதவித்தொகை எனும் தோற்றம் அளித்தாலும் பின்னர் இது கடன்தான் எனவும் அதற்கு 5 சதவீத வட்டி எனவும் இந்தத் தொகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.3000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 17 அன்று அமலாக்கப்பட்டு வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. சில குறிப்பிட்ட தொழில்களை சிறிய கருவிகள் மூலம் உடலுழைப்பு செலுத்தி பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும் எனவும் இதற்காக 18 வகையான தொழில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன எனவும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியம் எனும்  பெயரில் சாதியம்


மேலோட்டமாகப் பார்த்தால் இந்தத் திட்டம் சில பிரிவினருக்கு சுய வேலைவாய்ப்புக்கு ஊக்க மளிக்கும் பயன் தரும் நலத்திட்டம் போல தோற்றம ளித்தாலும் உண்மை அதுவல்ல. இந்த நிதி குறிப்பிட்ட  பிரிவினருக்கு சிறு/குறு தொழில்களை தொடங்க விரும்புபவர்களுக்கு உதவுவது அல்ல. அப்படி இருந்தால் நாம் ஆதரிக்கலாம். ஆனால் “விஸ்வ கர்மா யோஜனா” திட்டத்தின் ஆவணங்கள் குறிப்பிடு வதை பார்த்தால் அதன் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது என்பது தெளிவு.
இந்தத் திட்டம் வழிவழியாக தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் செய்து வரும் தொழில்களில்தான் குறி வைக்கிறது. காலணிகள் செய்தல்/ காலணிகள் தைத்தல்/ முடி திருத்துதல்/ துணி வெளுத்தல்/ மண்பாண்ட்ம் செய்தல் ஆகியவை இந்த திட்டம் குறிப்பிடும் சில தொழில் பிரிவுகள். ஆனால் அது மட்டுமே அல்ல. இந்த ஆவணத்தின் 1.1 பத்தி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“இந்தத் திறமைகள் அல்லது தொழில்கள்
தலைமுறை தலைமுறையாக குடும்பங்க
ளுக்குள் அல்லது ஏனைய உதிரி உடல் உழைப்
பாளிகளுக்கு  குரு-சிஷ்யன் தன்மையில் போதிக்
கப்படுகிறது.”

நவீன தொழில்களோ அல்லது திறமைகளோ அல்ல; மாறாக பரம்பரை வழியில் அதாவது குல வழியில் தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் செய்து வந்த தொழில்கள் பற்றிக் குறிப்பிடப் படுகிறது. குரு-சிஷ்யன் பாணியில் உள்ள நடை முறை மகிமைப்படுத்தப்படுகிறது. இந்த பிற் போக்குத்தனமான அம்சத்தை மேலும் வலுப்படுத்த ஆவணத்தின் வழிகாட்டுதல்களின் 2.2.1. பத்தி கீழ்க் கண்டவாறு கூறுகிறது:

“இந்தத் திட்டத்தின் மூலம் தரப்படும் உதவிகள்
என்பது இத்தகைய ‘கலாச்சார நடைமுறைகளை
யும்’ ‘தலைமுறை திறமைகளையும்’ ‘குரு-சிஷ்ய 
பாரம்பரியத்தையும்’  பாதுகாப்பதற்கும் வலுப்
படுத்துவதற்கும் பயன்படும் என்பது மட்டுமல்ல; அந்த பிரிவினருக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் இந்தத் திட்டம் தரும்”

என்ன அமலாக்கப்படுகிறது எனில், நவீன தொழில்களில் நவீன முறையில் சுய வேலை வாய்ப்பு திட்டமோ அல்லது தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டமோ அல்ல. மாறாக பிற்போக்குத் தனமான சாதியப் பிளவுகளின் அடிப்படையில் “பாரம்பரியமான” முறையில் “பாரம்பரியமான” குலத் தொழில்களை அமலாக்க முனைப்பு செய்யப்படு கிறது. இதுதான் அவர்களின் உண்மை நோக்கம் என்பது  எளிதில் மிகத்தெளிவாக  வெளிப்படுகிறது எனில், இந்தத் திட்டம் பொருந்தும் 18 தொழில்களும் தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் கடந்த காலங்களில் செய்த அல்லது இன்னும் செய்யும் தொழில்களாகவே உள்ளன. ஒரு தொழில் கூட முற்படுத்தப்பட்ட பிரிவினருடையது இல்லை. இவர்களின் உள்நோக்கம் மேலும் எதில் அம்பல மாகிறது எனில், இத்தகைய குலத்தொழில் என்பது “கலாச்சார நடைமுறை” எனவும் இவை தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அடை யாளத்தையும் அங்கீகாரத்தையும் தரும் எனும் கேலிக்கூத்தான கூற்றுகள் மூலம் ஆகும்! இந்தத் திட்டத்தின் பயனாளிகளை “தலித்/ பழங்குடி/ பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு” மட்டும் என குறுக்குவ தன் மூலம் இது அப்பட்டமான சாதியப் படிநிலை அடக்குமுறைகளை ஆதாரமாகக் கொண்ட மநுவாத வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட முயலும் கொடூர, ஆனால் பயனற்ற முயற்சி ஆகும். 

இந்தத் திட்டம் குலத்தொழிலைதான் குறிப்பிடு
கிறது என்பது ஆவணத்தின் 4(iii)ஆவது பத்தி தரும் அழுத்தம் மேலும் அம்பலமாக்குகிறது:

“இந்தத் திட்டம் என்பது பதிவு செய்யும் நாளன்று எவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்க ளுக்கு மட்டுமே குறிப்பாக பொருந்தும்” 

தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பெரும்பான்மையான இளம் தலைமுறையினர் சாதிய அடிப்படையில் உள்ள குலத்தொழிலை கை விட்டு நவீன தொழில்கள் அல்லது சேவைத்துறைகளில்  நிபுணர்களாகவும் திறமையான ஊழியர்களாகவும் மாற எப்பொழுதுமே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை மோடி அரசாங்கமும் அதற்கு வழிகாட்டும் சங் பரிவாரமும் நன்றாக அறியும். இளம் தலை முறையின் இந்தக் கனவை சிதைத்திட “விஸ்வகர்மா யோஜனா” திட்டத்துக்கான தகுதி 4(ii) பிரிவில்  கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்படுகிறது:

“பதிவு நாளன்று இந்தத் திட்டத்தில் சேர குறைந்த
பட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.”

இது ஒரு சதிவலையில் மாட்டும் முயற்சி ஆகும். ஏனெனில் இந்த வயதில்தான் +2 கல்வி முடித்து விட்டு உயர்கல்விக்கு இளைஞர்கள் தயாராகும் காலம். தமது கனவுகளுக்கு வடிவம் தரும் தருணம். இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் ஒட்டு மொத்த அழுத்தத்தை நோக்கினால் தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த இளைய தலை முறையினரின் லட்சியக் கனவுகளுக்கு இத்தகைய தகுதி முன்நிபந்தனைகள் மிகப்பெரிய குரோதமான அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்பதை அறியலாம்.

ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்
இத்தகைய கருத்துகளும் திட்டங்களும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. நாம் மறக்க கூடாத வரலாறு அது. “விஸ்வகர்மா யோஜனா” திட்டம் பல வழிகளில் 1953இல் அன்றைய தமிழ்நாடு முதல மைச்சராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த மோசமான, இழிவான “குலக்கல்வித் திட்டத்தை” நினைவுபடுத்துகிறது. “மதராஸ் மாநிலத்தில் கிராமப்புறப் பள்ளிகளில் மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்” என அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட  இந்தத் திட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் முதல் அரை நாள் பள்ளிகளில் இருப்பார்கள். மீதி அரை நாள் இந்த மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்ட குலத்தொழிலை செய்தால்  அந்த குலத்தொழிலில் பயிற்சி பெறுவர். இந்தத் திட்டம் “அரை நாள் பள்ளிக்கு; அரை நாள் சாதிக்கு” என அன்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ராஜாஜியின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அன்று மாநில சட்டமன்றத்தின் முதன்மை எதிர்கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் திட்டத்தை கண்டித்து நிராகரித்தது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான சமூக- பொருளாதாரக் கொடுமைகளை தூக்கிப் பிடிக்க செய்யப்படும் அகோரமான முயற்சி இது என கட்சி விமர்சித்தது. குழந்தைகளை தமது பெற்றோரின் குலத்தொழிலை செய்ய நிர்ப்பந்திப்பது மூலம் அவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதையும் சமூக  பாதுகாப்புடன் கூடிய நியாயமான வேலை வாய்ப்புக ளைப் பெறுவதையும் இந்தத் திட்டம் தடுக்கும் எனவும் கட்சி விமர்சித்தது. இத்தகைய வாய்ப்புகளை அன்று ஒரு சிறு கூட்டம் வளைத்துக் கொண்டிருந்தது. 

குலக்கல்வித் திட்டம் மூலம் ராஜாஜி அரசாங்கம் தேசத்தையும் மாநிலத்தையும் தொழில் சமூகத்துக்கு முந்தைய சாதிய வேறுபாடுகள் ஆழமாக இருந்த காலகட்டத்துக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்வ தாக கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தது. அன்றைய எதிர்க்கட்சி தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் சட்டமன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வலுவாக வாதிட்டார். நிலப்பிரபுத்துவ- காலனிய முறையை மாற்றி ஆரோக்கியமான சுதந்திரமான சமூக திட்டமிடலுடன் கூடிய உற்பத்தித் திறன் கொண்ட நவீன பொருளாதாரமே இன்றைய தேவை என சட்டமன்றத்தில் வாதிட்டார். கல்வி என்பது அறிவியல் அடிப்படையில் அறிவியலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மேலும் தோழர்கள் எம்.கல்யாண சுந்தரம், அன்று தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் பய்யனூரை பிரதிநிதித்துவப்படுத்திய கே.பி.கோபா லன், ஆந்திராவை சேர்ந்த நாகிரெட்டி ஆகிய கம்யூ னிஸ்ட் உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை உறுப்பினர் வி.ஆர். கிருஷ்ணய்ய ரும் ராஜாஜியின் திட்டத்தை சட்டமன்றத்தில் வன்மை யாகக் கண்டித்தனர்.

திராவிடர் கழகம்/ திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இயக்கங்களும் இந்த திட்டத்தை வன்மையாக எதிர்த்தன. இந்தத் திட்டம் சாதிய முறையை வலுப் படுத்தும் எனவும் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள  சமூகத்தினர் குலத்தொழிலைவிட்டு வேறு சிறந்த பணிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் எனவும் பெரியார் வாதிட்டார். 

குலக்கல்வித் திட்டத்துக்கு எதிராக மக்களின் கோபாவேசம் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. அதே சமயத்தில் இந்த பிற்போக்குத்தனமான குலக்கல்வி திட்டத்துடன் சேர்ந்து ராஜாஜி 6000 பள்ளிகளையும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் மூடினார். ராஜாஜிக்கு பின்னர் காமராஜர் முதல்வரான பிறகு குலக்கல்வித் திட்டம் அகற்றப்பட்டது மட்டுமல்ல; புதிய பள்ளிக ளும் திறக்கப்பட்டன.

புதிய கல்விக் கொள்கையின் பாதையில் “விஸ்வகர்மா யோஜனா”
மத்தியில் ஆளும் பிற்போக்குத்தனமான இந்துத் துவா சக்திகள் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமலாக்க விரும்புகின்றன. இந்தக் கொள்கை எந்த ஒரு நவீன கல்விமுறையின் அடிப்படைக் கருத்துக்கும் எதிரானது. பாடப்புத்தகங்கள் அறிவியலுக்குப் புறம்பான முறையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான பத்தாம்பசலித்தனமான கருத்துகள் பாடநூல்களில் திணிக்கப்படுகின்றன. இந்த மோசமான புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றும் வழியில்தான் “விஸ்வகர்மா யோஜனா” திட்டமும் பயணிக்கிறது. தலித்/ பழங்குடி/ பிற் படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் நவீன கல்வியையும் திறமைமிக்க வேலைவாய்ப்புக்கான  ஊக்கம் மற்றும் கனவையும் சிதைக்க முனைகிறது.  

+2 பூர்த்தி செய்த பல மாணவர்கள் நிதிநிலைமை காரணமாக உயர் கல்வியை தொடர முடியவில்லை என்பதையும்  இதன் விளைவாக அவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனவரி 29/2023 அன்று வெளியிடப்பட்ட 2020-21 உயர்கல்வி பற்றிய அகில இந்திய ஆய்வு கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி சேர்ப்பு விகிதம் அனைத்து சமூகப் பிரிவின ருக்கும் அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்து கிறது. தலித் பிரிவினருக்கு 23.1%/ பழங்குடி இனப்பிரி வுக்கு 18.9% ஆக இது உள்ளது. OBC பிரிவுக்கு 35.8% ஆக உள்ளது. இது 2012-13 காலகட்டத்தில் இருந்த 32.2% லிருந்து அதிகரித்துள்ளது.

ஆனால் தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வியில் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் எண்ணிக்கை இல்லை. மேற்கண்ட அதே ஆய்வுதான் கல்வியில் பொது முதலீடு குறைந்துள்ளது என்பதையும் அதன் தொடர்ச்சியாக தனியார் கல்வி விரிவடைந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக குறைவான வசதி உடையவர்கள் உயர் கல்வியில் சேர முடிய வில்லை. இது தேசம் முழுதும் உள்ள நிலை. கல்லூரி களில் 65 சதவீதம் தனியாரிடமும் 21.4 சதவீதம் மட்டுமே அரசின் வசமும் உள்ளது. அரசாங்கக் கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் வாய்ப்பு  35 சதவீதம் மட்டுமே. எனவே பெரும்பான்மையான வர்களுக்கு கல்விக்காக பெரும் செலவை செய்ய வேண்டியிருப்பதால் வசதி குறைந்தவர்களுக்கு உயர் கல்வி என்பது தூரத்துக் கனவாகவே உள்ளது. ஒன்றிய அரசு தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் உயர் கல்வியில் அதிகம் இணைய வேண்டும் என விரும்பினால் கல்வியில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். உயர் கல்வியை  இலவசமாகத் தர வேண்டும். மாறாக தனியார் கல்வி அதிகரித்து கொண்டுள்ளதையே நாம் பார்க்கிறோம்.

கோல்வால்கரின் நிகழ்ச்சி நிரல்!
உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்க திட்டங்கள் தீட்டுவதற்குப் பதிலாக மோடி அரசாங்கம் பின்னோக்கி செல்கிறது. “விஸ்வகர்மா யோஜனா” திட்டத்தை அமலாக்க முனைந்துள்ளது. இதன் மூலம் சாதிய முறைகளை உறுதிப்படுத்தவே முனைகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னாள் பிரச்சாரகரான பிரதமர் மோடி நீண்ட நாட்களுக்கு முன்னதாக முன் வைக்கப்பட்ட கோல்வால்கரின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை இந்தத் திட்டத்தின் வாயிலாக அறிவித்ததில் ஆச்சரியமில்லைதான்!

நமது அரசியல் சட்டத்தை விமர்சித்து 30.11.1949-இல் ஆர்எஸ்எஸ் பத்திரிகை ஆர்கனைசரில் கோல்வால்கர் கட்டுரை எழுதினார்:

“நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே மனுவின் சட்டங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்றைய தேதி வரை மநுஸ்மிருதியில் எழுதப்பட்ட சட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள நிர்வாகங்களை ஆர்வ
மூட்டி வருகின்றன. மநுஸ்மிருதியை தாமாக முன்
வந்து ஏற்றுக்கொள்வதும் அதனை இசைவு கொள்வ
தும் உலகெங்கும் நடக்கிறது. ஆனால் அரசியல் சட்டத்தை உருவாக்கும் நமது “நிபுணர்களுக்கோ” மநுஸ்மிருதி ஒன்றுமே இல்லை என எண்ணம் உள்ளது.”

70 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்ட பின்னர் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். கூட்டம் கோல்வால்கரின் பிற்போக்குத்தனமான இந்தக் கருத்துகளை இன்றும் அமலாக்க முயல்கிறது. “விஸ்வகர்மா யோஜனா” அந்த முயற்சியின் ஒரு பகுதி. இந்த நாட்டின் மக்கள் ஏன் மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கு “விஸ்வகர்மா யோஜனா” இன்னொரு காரணம் ஆகும்.