உச்சநீதிமன்றத்தில் அநாகரிகத் தாக்குதல்: ஜனநாயகத்திற்கு எச்சரிக்கை
கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியன்று உச்சநீதி மன்றத்தில் நடந்த அநாகரிகச் செயல் இந்திய ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு, சமூகநீதி ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களை நம் மனதில் ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயல வில்லை.
70 வயதை கடந்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் “சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக் க்கொள்ள முடியாது” என்று கூச்சலிட்டுக்கொண்டே தன் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்துகொண்டிருந்த தலைமை நீதியரசர் பி.ஆர். கவாய் அவர்களை நோக்கி எறிந்ததை ஒரு சாதாரண நீதிமன்ற அவமதிப்பு நிகழ் வாகக் கருதி கடந்து செல்லமுடியாது.
செருப்படியின் கலாச்சார அர்த்தம்
நமது “கலாச்சார”ப்படி செருப்பைக் கழற்றி ஒரு வரை அடிப்பது அல்லது ஒருவர்மேல் எறிவது என்பது ஒரு தனிமனிதனுக்கு நாம் செய்யும் உச்சபட்சமான அவமானம். அந்தத் தாக்குதலின் நோக்கம் ஒருவரை உடல்ரீதியாக காயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக அது ஒரு தனிமனிதனின் சுயமரியாதையை கொச்சைப்படுத்துவதற்காக. பொதுவாக தன் தகுதியை மறந்து கொடுமையான ஈனச்செயலை செய்தவர்களுக்குத்தான் நமது முன்னோர்கள் “செருப்படி” என்ற இந்த தண்டனையை பயன்படுத்தி னார்கள். இந்த தண்டனை பெரும்பாலும் “கீழ் சாதிக்காரர்களுக்கு” மட்டுமே விதிக்கப்பட்டது என்ப தையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். நாம் இன்று “வரலாற்று நாயகர்கள்” என்று கொண்டாடுகின்ற மகாத்மாவும், தந்தை பெரியாரும் கூட ஆதிக்க சக்திகளால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்த நேரங்களில் நம் மாபெரும் தலைவர்கள் அந்த தரம்கெட்டவர்களின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டனரோ அதே வழியில் நமது தலைமை நீதிபதியும் தனது சித்தம் கலங்காமல், அவர் வகிக்கின்ற பொறுப்பின் மாட்சி மையும் கண்ணியமும் குறைந்துவிடாமல் இந்த சம்ப வத்தைக் கடந்து சென்றார். ஆனால் நமது சமூகம் அந்தச் சம்பவத்தை அப்படிக் கடந்துபோகமுடியாது.
நீதியரசர் கவாயின் பின்னணி
நீதியரசர் கவாய் சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டுகால வரலாற்றில் தலித் சமூகத்திலி ருந்து வருகின்ற இரண்டாவது தலைமை நீதிபதி. அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகக் கண்ணோட் டத்தை தங்களது மரபணுக்களில் கொண்டிருக்கும் பாரம்பரியமான குடும்ப மரபில் வந்தவர். அவரது தந்தையார் ராமகிருஷ்ண சூரியபான் கவாய், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய தோழர். 1956 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் பவுத்த மதத்தை தழுவியபோது அவரோடு சேர்ந்து பவுத்த மதத்தை தழுவியவர். அந்த வகையில் நீதியரசர் கவாய் பவுத்த மதத்தை சார்ந்த முதல் தலைமை நீதிபதி எனும் பெருமையைப் பெற்றுள்ளார். “இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தான். புல்டோசர் ஆட்சி அல்ல. அதனை ஒரு நாளும் அனு மதிக்கமாட்டேன்” என்று ஆணித்தரமாக தீர்ப்பினைத் தந்து புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நீதியரசர் கவாய். தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் வேறு எந்த அரசு பொறுப்பினையும் பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்த மானஸ்தர்.
வன்முறைக்கான தூண்டுதல்
சில நாட்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்ற புராதன ஜாவேரி இந்து ஆலயத்தில் சிதிலமடைந்து இருக்கும் விஷ்ணுவின் சிலையை மீண்டும் சரிசெய்து தரவேண்டும் என்று தொட ரப்பட்ட வழக்கில் நீதியரசர் கவாய் சொன்ன சில வார்த்தைகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டது என வலதுசாரி சமூக ஊடகங்கள் கடுமை யாக அவரை விமர்சனம் செய்தன. “உச்சநீதி மன்றத் திற்குள் சென்று தலைமைநீதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்கும்போது அவரது தலையினை உடைக்கவேண்டும்” என்றெல்லாம் வலதுசாரி மத வெறியர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நூற்றுக்கணக்கானோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“இறைவன் சொன்னார்” என்ற தப்பிக்கும் வழி “
இறைவன் சொன்னார். நான் செய்தேன்” என்று கிஷோர் சொல்லும்போது, முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அயோத்தி ராமர் கோவில் வழக்கில், “இறைவன் இரவில் சொன்னார். அதனை அப்படியே தீர்ப்பாக எழுதிவிட்டேன்” என்று சொன் னது நினைவுக்கு வருகிறது. அதைப்போல நமது பிரதமரும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கு இறை வனே தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார் என்று சொன்னார். தங்களது செயலுக்கு எவ்விதமான நியாயத்தை யும் தரமுடியவில்லையென்றால் ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுவதுதான் பொறுப்பிலிருந்து தப்பிப் பதற்கான ஒரே வழி என்பது தெரிகிறது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தலைமை நீதி பதியை நீதிமன்றத்திலேயே செருப்பால் தாக்க முயற் சித்துவிட்டு “ஆண்டவன் சொன்னான். நான் செய்தேன்” என்று சொன்னால், அதனை அப்படியே விட்டுவிட முடியுமா?
துணிவு எப்படி வந்தது?
தலைமை நீதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அநாகரிகத் தாக்குதலைவிட, இந்த மாதிரி யான ஒரு அநாகரிகத் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற மனநிலையும், விளைவுகளைப்பற்றிக் கவலைப் படாமல் அந்த அசிங்கத்தை செய்யும் துணிவும் எப்படி வந்தது என்பதுமே முக்கியமானது. மகாத்மா வின் படுகொலைக்குப் பின்னர் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் சொன்ன கருத்துக் களை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானது. காந்தியடிகளின் படுகொலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நேரிடையான தொடர்பு உண்டா என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை யென்றாலும், இதைப்போன்ற மாபாதகம் நடப்ப தற்கு அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும், பிரச்சா ரங்களும், அவர்கள் முன்னெடுத்த வெறுப்பு அரசிய லும் முக்கியக் காரணம் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் என்று தெரிவித்தார். இன்று நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், இந்து மகா சபா போன்ற வலதுசாரி மதவாத அமைப்புகள் விதைத்துவரும் துவேஷமும், வெறுப்பும் மதநல்லி ணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் அடியோடு அழிக்கும் ஊழித்தீயாக பரவி வருகின்றன.
அரசின் மௌனமும் சதியும்
இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சியினர் கடுமையா கக் கண்டித்தனர். பிரதமர் ஒரு நீண்ட மவுனத்திற்குப் பின் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வார்த்தை களில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இப்ப டிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது பிரதமரே தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று அரசின் ஆதரவையும், தனது உடனிருப்பையும் தெரிவித்தி ருக்கவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி சொன்ன ஒரு கருத்தினை ஒதுக்கிடமுடியாது. இந்தச் சம்பவத்தை ஒரு முஸ்லிம் வழக்குரைஞர் செய்திருந்தால் இதற்குள் நாடே ரணகளமாக மாறியிருக்கும். அந்த நபரின் வீட்டை புல்டோசர் இடித்துத் தள்ளியிருக்கும். சம்பவம் நடந்த மறுநாள் வழக்குரைஞர் கிஷோர் பாஜகவின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவரோடு நீண்ட நேரம் இருந்த செய்தியும், வீடியோ பதிவும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. நம்மைப் பொறுத்தவரை கிஷோர் என்பவர் எய்யப் பட்ட அம்பு மட்டுமே. அவரை எய்த சதிக்கூட்டம் எது என்பதுதான் முக்கியம். ஒரு தலித் நீதியரசர் மீது செருப்பினை எறிய அதே சமூகத்தை சார்ந்த ஒரு தலித் வழக்குரைஞரை தயார் செய்ததுதான் “அவர்களது” சாமர்த்தியம்.
எதிர்காலம் என்ன?
நாம் கவலைப்படுவதெல்லாம், அரசியல் சாசன சட்டத்தின் காவல் அரணாகவும், அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பா கவும் இருக்கின்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்றத்தின் வளாகத்திற்குள் ளேயே இந்த நிலை என்றால், இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்பதே! “தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என்பதை மட்டும் இப்போது மனதில் வைப்போம்.