articles

img

மதங்களை ஒரு தடையா நினைக்க மாட்டேன்! - ஆசிப் மீரான்

மதங்களை ஒரு தடையா நினைக்க மாட்டேன்!

‘நான் கிறிஸ்தவன். ஆனா நான் கிறிஸ்தவனா மட்டுமே இருக்கணும்னு விரும்பலை. சமயங்கள்ல முஸ்லிமா, சமயங்கள்ல ஹிந்துவா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா மதங்களும் என்ன சொல்லுது? எல்லார் கிட்டயும் அன்பா இருக்கச் சொல்லுது. அப்படி இருக்குறதுக்கு நான் ஏன் கிறிஸ்தவனா மட்டும் இருக்கணும்?’ “எனக்கு அன்றாட அப்பத்தைத் தாரும்”னு கடவுள்ட்ட கிறிஸ்தவன் கேக்க ணும். ஆனா, அது அப்படி முடியுமா? அப்ப காலத்துக்கேத்த மாதிரி மாற வேண்டாமா? நான் மதங்களை ஒரு தடையா நினைக்க மாட்டேன். எனக்கு நல்லதுன்னு படுறதை என் சொந்த மூளையால யோசிப்பேன். நான் கிறிஸ்த வன்னு மட்டும் நெனச்சுகிட்டு பார்த்தா  மத்த மதங்கள் சொல்ற விசயங்களை ஏத்துக்க மனசு வராது. அதனால நான் நல்லது எதுன்னு மட்டும்தான் யோசிச்சுப் பார்ப்பேன். அப்படிப்பார்க்கும்போது எனக்கு சரின்னுபடுறதை வச்சு எல்லா மதங்களையுமே நான் ஆராதிக்கிறேன். அப்படின்னாத்தான் எனக்கு ஆசிப் கிட்டயும் அன்பாப் பேச முடியும். சரி தானே?!” சொல்லிவிட்டு லேசான புன்னகை.  தாடியை மெதுவாக நீவி விட்டுக் கொண்டே தனது வேட்டி மடிப்பை சரி  செய்து கொள்கிறார். தூய வெள்ளை யில் கதராடை.  “கடவுளைப்பற்றிப் பேசும்போது பல குழப்பங்கள் இருக்கு. நாம் எந்தக் கடவுளை வணங்குறோம்ங்குறதை நாம் தீர்மானிக்குறதுலயே சிக்கல் இருக்கு. நான் மார்க்சிஸ்ட் கூட்டத்துக்கு போய் பாடக் கூடாதுன்னு சொன்னாங்க. ஏன்னா அவங்க நாத்திகவாதிகள். தெய்வ  பக்தி கொண்ட கிறிஸ்தவன் இந்த மாதிரி  இடங்களில் பாடக்கூடாதுன்னு. அப்ப  நான் அவங்க கிட்ட சொன்னேன்..’ பாருங்கப்பா. உங்களுக்கு கடவுள் சோறு சாப்பிடுறதுக்கு வசதியா ஒரு வேலை தந்திருக்காரு. அதே மாதிரி தான் எனக்குப் பாடுறதை ஒரு வேலையா அமைச்சிருக்காரு. நான் பாடினாத்தான் சம்பாத்தியம். இங்க பாட மாட்டேன் அங்க பாட மாட்டேன்னு சொன்னா கடைசியில நான் வீட்டுலதான் பாடிக்கிட்டிருக்கணும்’னு” இம்முறை சற்று சத்தமாகவே சிரிக்கிறார். ”நான் மொதல்ல பின்னணி பாடு றதுக்காக போனபோது என் பாட்டை  வேற யாரோ பாடிட்டாங்க. நான்  சோர்ந்து போனேன். அப்ப அந்தத்  தயாரிப்பாளர் என்னை ஏமாத்தக் கூடாதுன்னு நாராயண குருவோட கீர்த்தனையைப் பாட வச்சார். அது தான் நான் படத்துக்காக முத தடவை குரல் கொடுத்தது. என்னோட முதல் குரலே குருவோட கீர்த்தனையா அமை யணும்கறதுதான் கடவுளோட நிச்சயமா இருந்திருக்கணும்னு நான் நம்புறேன்” ‘சட்’டென்று தன் மதுரக் குரலில் அந்தக்  கீர்த்தனையை அவர் பாட, கிட்டத்தட்ட நான்கு அடிகள் தள்ளி அமர்ந்திருந்த எனக்குச் சிலிர்த்தது. கானகந்தர்வன் யேசுதாசுடன் துபாயில் சில மணி நேரங்கள் தனியே  அமர்ந்து பேசும் பொன்னான வாய்ப் பொருமுறை எனக்குக் கிடைத்தது. அவருடன் பேசியதில் இருந்து ஒரு பகுதி.