தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்துள்ளார். மாணவியின் இந்த தற்கொலை மிகுந்த அதிர்ச்சியை யும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் சந்தி க்கும் பிரச்சனைகளுக்கு போராடும் மன வலிமையை மாணவ - மாணவிகளிடம் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை அடிக்கடி நடைபெறும் மாணவ-மாணவியரின் தற்கொலைகள் வற்புறுத்துகின்றன. மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பணியினை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் முழுமையான பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழலில் பாஜக மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாலேயே மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் பாஜக நடத்தி வருகிறது. இப்பொய்யை வலுப்படுத்தும் வகையில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலையிட்டு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள தானது நிலைமையை பலமடங்கு மோசமாக்கும் சதிவேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது.
அனைவருக்குமான பள்ளி
இப்பள்ளி சுமார் 162 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இந்து, இஸ்லாமியர், கிறித்துவ மதங்களைச் சார்ந்த மாணவ - மாணவிகள் பல்லாயிரம் பேர் படித்து பல பணிகளுக்குச் சென்றுள்ள னர். நடப்பாண்டிலும் இப்பள்ளியில் இந்துமதத்தைச் சார்ந்த 444, கிறித்துவ மதத்தைச் சார்ந்த 219, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த 405 மாணவ - மாணவிகள் படித்துக் கொண்டுள்ளார்கள். இதுவரை இப்பள்ளியில் மதமாற்றம் செய்வது தொடர்பான எந்த புகாரும் எழுந்ததில்லை. ஊர்மக்களிடம் விசாரித்தபோது, மைக்கேல்பட்டி கிராமத்தில் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் சகோதரர்கள் போல வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்த பள்ளியில் எங்கள் வீட்டு பிள்ளைகள் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் படித்து வருகிறார்கள். இதற்கு முன்னால் மதமாற்றம் பற்றி இங்கு பேச்சே எழுந்ததில்லை. இப்போது வரும் செய்திகள் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. யாரோ திட்டமிட்டு இத்தகைய அவதூறு களை கிளப்பி வருகிறார்கள் என கிராம மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மாணவியிடம் பேட்டி எடுத்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டு பாஜக மதமாற்றம் என்கிற இட்டுக்கட்டிய ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இம்மாணவி ஜனவரி மாதம் 9ந் தேதி மாலை பூச்சி மருந்தை குடித்து விட்டதாகவும், ஜனவரி 10ந் தேதி மதியம் 12 மணிக்கு தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் உள்ளூரில் வைத்தியம் பார்த்ததாகவும், ஜனவரி 15ந் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த தாகவும் 16ந் தேதி காலை மருத்துவமனையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 19ந் தேதியன்று மரணமடைந்துள்ளார். மேற்கண்ட 10 நாட்களில் அவர் தனது பெற்றோரிடமோ, சிகிச்சையளித்த மருத்துவர்களிடமோ, உறவினர்களிடமோ தனக்கு பள்ளியில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக தெரிவிக்கவில்லை. மாணவி இறப்பதற்கு முதல்நாள் (18.01.2022) நீதிபதிகளிடம் அளித்த மரண வாக்கு மூலத்திலும் மதமாற்றம் குறித்த எந்த செய்தியும் இல்லை.
வீடியோவின் மர்ம முடிச்சுகள்
இந்நிலையில் மாணவியின் உறவினர் முத்துவேல் என்பவர் மாணவி மரணமடைந்த மறுநாள் 20ந் தேதி வெளியிட்டுள்ள வீடியோவில் மதமாற்றம் தொடர் பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது. முத்துவேல் 17ந் தேதியே இந்த வீடியோவை எடுத்ததாக தெரிவித்துள் ளார். அப்படியானால் மாணவி மரணமடைவதற்கு முன்னால் அவர் அதை ஏன் வெளியிடவில்லை?. மாணவி மரணமடையும் வரை காத்திருந்ததின் மர்மம் என்ன? இதுகுறித்து உடனடியாக அவர் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை?. உரிய அதிகாரிகளிடம் தெரி விக்காமல் சமூக வலைதளத்தில் பரப்பியதன் நோக்கம் என்ன? மேலும் மாணவி லாவண்யா மதமாற்றம் தொடர்பாக அவர் உயிரோடு இருந்த போது சந்தித்த யாரிடமும் குறிப்பிடாத நிலையில் முத்துவேலிடம் மட்டும் கூறினார் என்பது முற்றிலும் நம்பகத்தன்மை யற்றதாக உள்ளது.
வீடியோ எடுத்த முத்துவேல் விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சார்ந்தவர் என்பதும், இவர் மீது பல கிரி மினல் வழக்குகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், இவர் எத்தனை வீடியோ எடுத்தார், அதை யார், யாருக்கு அனுப்பினார் என்ற விபரமும் தெரியவில்லை எனவும், அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்த்தால் மதமாற்றம் என்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு புனையப்பட்டுள்ளது என்பது புரிந்து கொள்ள முடியும். நம்பகத்தன்மையில்லாத ஒரு வீடியோ ஆதாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என நடத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத்தில் “மாணவி லாவண்யா கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததால் பல்வேறு கொடுமைகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை முடிவை தேடியுள்ளார். இந்த கொடுமைகளை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு உண்மையை மூடி மறைக்க முயல்வதாகவும், இந்துக் களுக்கு பாதுகாப்பில்லை என்றும் திசைதிருப்பும் வகை யில் பேசியுள்ளார். மேலும் கட்டாய மதமாற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டுமெனவும் கூச்சலிடு கிறார். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு முன்னால் வந்துள்ள வீடியோ ஆதாரத்தின் உண்மைத் தன்மை பற்றி சிறுவிசாரணை கூட இவர்கள் நடத்தவில்லை.
மாநில பாஜக தலைவர்களின் கூற்றை வழி மொழிந்த, அகில இந்திய பாஜக ஏதோ தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் நடந்துவிட்டது போலவும் அதை விசாரிப்பதற்கு ஒரு குழு அமைத்து உத்தர விட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தின் காரண மாகத்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முடிவாக அறிக்கை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்திய பின்னர் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு புதிதாக விசாரித்து என்ன முடிவுக்கு வரப்போகிறது? இந்த விசாரணைக்குழு எங்கள் கிராமத்திற்குள் வந்து விசாரி ப்பதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது என ஊர் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். ஏற்கனவே உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி இப்பகுதியில் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ள பாஜக-வினர் ஊருக்குள் வந்து விசாரிப்பதின் மூலம் மேலும் பதற்றம் உருவாகும் ஆபத்து உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள் ளனர். இதையும் மீறி விசாரணைக்குழு அங்கு செல்வது நிலைமையை மோசமாக்கவே உதவி செய்யும்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து பல மாணவ-மாணவிகள் தற்கொலையில் மாண்டபோது அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதற்கு கூட பாஜக முன்வரவில்லை. சென்னை ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாரபட்சத்தால் மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்ட போது பாஜக பரிவாரம் வாய்திறக்க வில்லை. இதே தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேஸ்வரத்தில் படித்த விஷால் என்ற மாணவனும், பேராவூரணியை சார்ந்த துளசி என்ற மாணவியும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்கள். இவர்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காத பாஜக-வினர் லாவண்யா மரணத்தில் வரிந்துகட்டி செயல்படுவதன் உள்நோக்கம் என்ன என்பதே கேள்வி.
மதவெறி நடவடிக்கைகளை முறியடிப்போம்
லாவண்யா பூச்சி மருந்து குடித்து 10 நாட்கள் கழித்து மரணமடைந்துள்ளார். இவர் மரணத்திற்கான உண்மையான காரணங்களை கண்டறிய பார பட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்விசாரணையின் அடிப்படையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு தேவை யற்ற குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வீடி யோக்களின் உண்மைத்தன்மையை நீதிமன்ற உத்தர வின்படி தடயவியல் துறை விசாரணை மேற்கொண்டுள் ளது. இத்துடன் வீடியோவை தயாரித்தவர்கள் பொது தளத்தில் பதிவு செய்து மதப்பதற்றத்தை உருவாக்கியது குறித்தும், இதனை அடிப்படையாகக் கொண்டு பாஜக மேற்கொண்டு வரும் மதவெறி நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை வளையங்கள் விரிவுப்படுத்திட வேண்டும்.
கிறிஸ்தவ அமைப்புகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மாணவ - மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட போது இவர்களுக்கு கல்வி உரிமை வழங்கியதில் இந்நிறுவனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். உண்மைக்கு புறம்பாக மதமாற்றம் என்ற புகாரை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் இக்கல்வி நிறு வனங்களை களங்கப்படுத்துவது மட்டுமின்றி இந்நிறு வனங்கள் மேற்கொண்டு வரும் கல்வி பணியினை தடுத்து நிறுத்தும் உள்நோக்கோடு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாகும். ஏற்கனவே அரசு சாரா (என்.ஜி.ஓ) அமைப்புகளுக்கு வெளிநாட்டு உதவி கிடைப் பதற்கான தடை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதால் சில பள்ளி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் தள்ளாடி கொண்டுள்ளன. பாஜக- வின் இத்தகைய நடவடிக்கைகள் பட்டியலின பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மாணவ -மாணவிகளின் கல்வி வாய்ப்பை தட்டிப் பறிப்பதற்கு அனுமதித்து விடக்கூடாது. தமிழகத்தில் தனது மதவெறி அரசியலை முன்னெடுப்பதற்கு பாஜக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் உள்ள மதச்சார்ப்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க முன்வர வேண்டும்.