articles

img

அன்று வாணிகத்தலம்! இன்று வேட்டைக்காடு! -ப.முருகன்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை படைத்தவர் சீத்தலைச் சாத்தனார் எனும் பெருமகனார். இவரை ‘தண்டமிழ் ஆசான்’ என்றும் போற்றுவர். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றும் குறிப்பிடுவர். சங்க காலத்தில் சாத்தனார் என்ற புலவர் கணிசமான பாடல்களைப் பாடியுள்ளார். பிற்காலத்திலும் பல சாத்தனார்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர். அதனால் இவரைச் சிறப்பாகக் குறிக்கவே ‘கூலவாணிகன்’ என்றனர்.

புத்த தத்துவத்தில் ஆழ்ந்த ஞானமும்  தமிழ்ப்  புலமையும் கொண்டிருந்த இவர் தானிய (கூல)  வாணிகத்திலும் ஈடுபட்டிருந்தார் என்று கூறு கின்றனர். மதுரையில் வாணிகம் செய்தார் என்றால் அவர் காலத்திய மதுரை எந்தப் பகுதி ?  இன்றைய மதுரையில் கூலவாணிகர் தெரு இருக்கிறது. இது தவிர வேறு எங்காவது மதுரை யைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது பெயர் உள்ளதா உள்ளது. 

மாங்குளம் - மீனாட்சிபுரம் தொல்லியல் மலைப்பகுதிக்கும் அழகர் கோவில் - கிடாரிப் பட்டி மலைப்பகுதிக்கும் இடையில் கூலாணி பட்டி  என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரின் பழங்காலப்  பெயர் ‘கூலவாணிகன்’ பட்டியாக என்று இருந்தி ருக்கக் கூடும். 

ப.முருகன்

எப்படி?

அழகர்கோவில் - கிடாரிப்பட்டி மலையில் உள்ள கல்வெட்டுகளில் தான் மதிரை, மத்திரை என்று ஊர்ப்பெயர் உள்ளது. அது மட்டுமின்றி பொன், உப்பு, துணி, சர்க்கரை,இரும்பு உள்ளிட்ட  வணிகம் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள்  உள்ளன. சமணர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி 2300 ஆண்களுக்கு முன் வணிகப்பெரு வளாக மாகத் திகழ்ந்ததை தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன.

இதற்கு மாங்குளம் - மீனாட்சிபுரம் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

மாங்குளம் கல்வெட்டு ‘வெள்ளறை நிகமம்’ என்று குறிப்பிடுவது வணிகக்குழுவினரையே என்கின்றனர் தொல்லியலார். ‘நிகமம்’ என்பது இப்போது புழக்கத்தில் உள்ள நிகாம் என்கிற சொல்லையே குறிக்கிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனும் பி எஸ் என் எல்-இல் உள்ள நிகாம் தான் அது.

வெள்ளறை நிகமம் என்பதில் வெள்ளறை தற்போது ‘வெள்ளரிப் பட்டி’ என்று அழைக்கப்படு கிற பகுதியாகும். இன்றைக்கும் கூட இந்தப் பகுதி யில் உள்ள முதியவர்கள் அங்குள்ள கண்மாயை  வெள்ளறக்கண்மாய் என்றே சொல்வார்கள். வெள்ளறை எனும் கிராம வணிகக்குழுவினர் செய்து கொடுத்த பள்ளி எனும் பொருள் தரும், ‘வெள் அறை நிகமதோர் கொடி ஓர் - எனும் கல்வெட்டு உள்ளது.

இங்குள்ள கல்வெட்டுகளில் தான் பாண்டி யர்களின் சிறப்புப் பட்டங்களான செழியன், வழுதி போன்றவை இடம்பெற்றுள்ளன. நெடுஞ் செழியன் என்றே இருப்பது  இன்னும் சிறப்பு. இந்த கூலாணி பட்டியானது  ஆனைமலை, வெள்ளரிப்பட்டி , மாங்குளம் பகுதிகளை கிடாரிப்  பட்டியோடு இணைக்கிறது.

அழகர் கோவில் - கிடாரிப்பட்டி மலை, திண்டுக்கல் -மதுரை, நத்தம் -  மதுரை என இரு வழிப்பாதை மையமாக இருந்துள்ளது. இதனை மிகப்பெரும் வணிகப் பெருவழி எனச் சொல்லலாம் என்று தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். ஆனைமலை, வெள்ளரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம் மலைகளிலும் ( வணி கப்பெருவழியின் தொடர்ச்சி) உள்ள கல்வெட்டுக் கள் இதே கருத்தை உணாத்துகின்றன என்று, மதுர வரலாறு சமணப் பெருவெளியின் ஊடே நூல் குறிப்பிடுகிறது.  பசுமைநடை அமைப்பின் வெளியீடான இதில் இது தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த கூலாணி பட்டியானது, இப்போது ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கண்களில்  பட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறி விப்பில் இடம் பெற்றுள்ள ஊர்கள் என கூலாணி  பட்டியும் மேலூரும் உள்ளன. ஆனால் இந்த ஏலப்பகுதி அறிவிக்கையில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் மண்டலம் என்று குறிப்பிட்டுள்ளது. கண்மறைப்பு வேலைகளில் ஈடுபடுவதும் உண்  மையை மறைத்து உள்ளடி காரியங்களைச் செய்வதும் பாஜக அரசுக்குப் பழக்கமானது தானே.

வெறும் 1 விழுக்காடு அளவே உள்ள டங்ஸ்ட னுக்காக 5 ஆயிரம் ஏக்கர் (2015 ஹெக்டேர்) பரப்பை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ஏலம் விட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு. இந்த 5 ஆயிரம் ஏக்கர் பரப்புக்குள் தான் அழகர்கோவில் - கிடாரிப்பட்டி மலை, மாங்குளம் - மீனாட்சிபுரம் மலை, அரிட்டாபட்டி மலை உள்ளிட்ட தொல்லியல் தரவுகள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியச் சின்னங்கள் நிறைந் துள்ளன. அதனால் இவற்றை அழித்துவிட நினைத்துத்தான் ஒன்றிய அரசு - நாயக்கர் பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை வேதாந்தாவின் துணைநிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கூட்டுச்  சேர்ந்து விட்டார்கள்.

அவர்களைத் தடுத்து நிறுத்துவது தமிழ் மக்களின் கடமை. கூல வாணிகன்பட்டியை கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதிக்கலாமா? அரிட்டாபட்டி, கழிஞ்சமலை பகுதிகள் பல்லு யிர் பாதுகாப்பு பகுதியாக நாட்டிலேயே முதல் முறையாக அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும். ஆனாலும் கூட அந்தப்பகுதிகளையும் சேர்த்தே பெரும் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாரம்பரி யம் என்றாலே வேத- சனாதன - இந்துத்துவா பாரம்பரியம் தான் என்று நிலைநாட்டத் துடிக்கும்  பாஜக, அதை விட உயர்வான இன்னொரு பாரம்பரியம், பண்பாடு இருப்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க குணத்துடனே செயல்படு கிறது. அதற்கு உதாரணம் தான் இந்த டங்ஸ்டன்  சுரங்க ஏலம்.

ஒற்றைத் தன்மையை திணிக்க வும் பன்மைத்  தன்மையை அழிக்கவும் செய்யும்  சதி இது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் உயிர்ப்பன்மைத் தன்மையை ஒழிக்கும் முயற்சிக்கும், கார்ப்பரேட்டுகளின் வரை முறையற்ற கொள்ளைக்கும் வழிவகுக்கி றது இந்த ஏலம். தமிழ்நாட்டில் இயற்கைக்கும் மனிதர்களுக் கும் மாசுபாட்டை ஏற்படுத்தி அதை எதிர்த்த மக் களை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 உயிர்களைக் காவு வாங்கிய கொலைகாரக் கம்பெனியின் துணை நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்திருப்பது தமிழ் மக்களை மேலும்பழி வாங்கும் செயலன்றி வேறென்ன?

இந்த சுரங்கம் அமைக்கும் 5 ஆயிரம் ஏக்  கர் பரப்பில் உள்ள மக்கள், கால்நடைகள், மலைகள், ஏரி, குளங்கள், விவசாய நன்செய்,  புன்செய் நிலங்கள் இத்யாதி பற்றி கார்ப்ப ரேட் கூட்டுக்களவாணி - இந்துத்துவா ஆட்சியா ளர்களுக்கு என்ன கவலை? ராமர் பெயரைச் சொல்லி  அரசியல் நடத்துபவர்களுக்கு உண்மை யான பக்தி இருந்தால் ‘அழகர்கோவில் பாதிக்கப் படுமே’ என்றெண்ணியாவது  இந்தத்திட்டத்தை நிறைவேற்றத் துணிந்திருக்க மாட்டார்கள். கபடதாரிகளான இவர்களுக்கு முக்கியம் கார்ப்பரேட் முதலாளிகள்தானே தவிர கடவுள் அல்ல. ஆனால் அவர்களின் சதியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.