‘கட்சிக்கு வச்சிக்கோ...’ என்று தந்தாளே எங்கள் தாய்!
எங்கள் முகவை (ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம்) கிராமியக்கலைக் குழுவின் மூத்த உறுப்பினர் தோழர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) ஜுன் 14 சனிக்கிழமை காலமானார். 1980-ம் ஆண்டு கொல்லங்குடி (தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது) பொதுக்கூட்டத்தில் பேச நான் சென்றபோது, நாட்டுப்புறவியல் முனைவர் பட்ட மாணவர் கே.ஏ.குணசேகரனையும் அழைத்துச் சென்றேன். அவர் பாடல் சேகரிப்பிற்காக என்னுடன் மாவட்டம் முழுவதும் சுற்றினார். கொல்லங்குடி தோழர்களிடம் கேட்டபோதுதான் கருப்பாயி அம்மாவைக் காட்டினர். அம்மாவை எங்களோடு சாப்பிடவைத்து பாடல் பாடும்படி கூறினேன். கே.ஏ.ஜியை டேப்ரிகார்டரில் பதியும்படி கூறினேன். அம்மா முதலில் “வாகான ஆலமரம்” என்ற பாடலைப் பாடினார். பின்பு அவருக்குப் பிடித்த பழனி முருகனைப் பற்றிய பாடல். “சந்தனம் பால் மணக்குதே/ ஏ அம்மடியம்மா” என்ற பாடலைப் பாடினார். பின்பு சில கும்மிப்பாடல்களைப் பாடினார். பின்பு மதுரை அலுவலகம் வருமாறு பணம் கொடுத்து வந்தேன். முகவை கலைக்குழுவில் கே.ஏ.குணசேகரன், கோட்டைச்சாமி, கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோரை குழுவுடன் இணைத்தேன். “சந்தனம் பால் மணக்குதே” என்ற மெட்டில் “பெண்குலம் எழுந்துவிட்டதே-- ஏ அம்மடியம்மா பெரும்படை சேர்ந்துவிட்டதே” என்ற நான் எழுதிய மாதர் சங்கப்பாடலை அருமையாகப் பாடுவார். மதுரையில் நடந்த சிபிஎம் அரசியல் மாநாட்டில் முகவை கலைக்குழு பாடல்களை தோழர் இ.எம்.எஸ் கேட்டுவிட்டு அம்மாவை தனியே பாராட்டினார். மேலும் இந்தக் கலைக்குழுவை திருவனந்தபுரம் அழைத்துச் சென்று நிகழ்ச்சி நடத்தி இ.எம்.எஸ் பாராட்டி அனுப்பி வைத்தார். சினிமா இயக்குநர் பாண்டியராஜன் அம்மாவை அழைத்துப் போய் “ஆண்பாவம்” போன்ற சில படங்களில் நடிக்கவைத்தார். ஒருநாள் காலையில் மதுரையில் எங்கள் வீட்டுக்கு அம்மா வந்தார். “தோழரு தோழரு” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார். என் துணைவியாரிடம் பழங்கள் வழங்கிவிட்டு மடியிலிருந்து பணத்தைக் கட்டாக எடுத்தார். பாண்டியராஜன் பத்தாயிரம் கொடுத்ததாகவும், செலவுபோக எட்டாயிரம் இருப்பதாகவும், அதைக் கட்சிக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினார். நான் வாங்க மறுத்து “அதைப் பத்திரமா பேரன் கிட்ட குடுத்து சாப்பாட்டுக்கு வச்சிக்கோ” என்றேன். “இன்னும் நடிக்க வரச் சொல்லியிருக்காங்க” என்றார். “கிடைக்கும் பணத்தை யாருக்கும் தராதே, இனிமேல் உன்னால் கூலி வேலைக்குப் போக முடியாது” என்றேன். வீட்டில் உணவருந்திவிட்டு என் துணைவியாரை வணங்கிவிட்டுச் சென்றார். 1993-க்குப் பின்பு எனது தொடர்புகள் அறுந்துவிட்டாலும், தோழர் காளீசுவரன், சண்முகம் ஆகியோர் தொடர்ந்து பார்த்தும் விசாரித்தும் வந்தனர். கடந்த ஆண்டு நான் சிவகங்கை சென்றபோது வந்து சந்தித்தார். நான் விரும்பியதால் ஒரு பாடல் பாடினார். தனக்கு ஒரு பெரிய தொகை கிடைத்ததும் “அதைக் கட்சிக்கு வச்சிக்கோ” என்று வந்தாளே தாய்... இவர்களால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எவரும் அழிக்க முடியாது என்கிறேன். இசைத்தாயே! கட்சியின் சார்பில், என் குடும்பத்தின் சார்பில், இதய அஞ்சலி உனக்கு! - எஸ்.ஏ.பெருமாள்