articles

img

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் - சீத்தாராம் யெச்சூரி

“நம் அனைவருக்கும் தேவையானது, ஓர் அரசியல் பத்திரிகை. அத்தகைய பத்திரிகையின்றி, பொதுவாக சமூக ஜனநாயகத்தைக் கட்டுவதற்கும்,  அடிப்படையாக உள்ள கொள்கை உறுதியுடன் நம்முடைய பிரச்சாரத்தை, கிளர்ச்சியை முறையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கும் முடியாது”.

“தனிநபர் நடவடிக்கை, வட்டார அளவிலான துண்டுப்பிரசுரங்கள், சிறுவெளியீடுகள் போன்ற வடிவங்களுடன் நாம் பொதுவான மற்றும் திட்டமிட்ட முறையில் கிளர்ச்சிகளை நடத்திட நமக்கென்று ஒரு பத்திரிகையின் அவசியமும் இப்போது உருவாகியிருப்பதுபோல முன்னெப்போதும் உருவானதில்லை. அத்தகையதொரு பத்திரிகையின்றி, நாம் நம்முடைய கடமையை - மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவும் அரசியல் அதிருப்தி மற்றும் எதிர்ப்புணர்ச்சியை ஒன்றிணைத்து, ஒருமுகப்படுத்தி,  தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை - முழுமையாகச் செய்து முடிக்க முடியாது.’’

“பத்திரிகையின் பங்களிப்பு என்பது, கட்சியின் சிந்தனைகளைப் பரவச் செய்தல், ஊழியர்களுக்கு அரசியல் கல்வியை அளித்தல் மற்றும் அரசியல் நண்பர்களை அணிசேர்த்தல் ஆகியவற்றுடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. ஒரு பத்திரிகை என்பது ஒரு கூட்டுப்பிரச்சாரகர், ஒரு கூட்டு கிளர்ச்சியாளர் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு அமைப்பாளரும் ஆகும்.’’

“நம் பத்திரிகை என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு தீப்பொறியையும் விசிறிவிடும் சக்திவாய்ந்தது; மக்களின் நேர்மையான சீற்றங்களை ஊதி ஊதி காட்டுத் தீயாக கொழுந்துவிட்டெரியச் செய்யும் பணியையும் செய்வதாகும். இன்றையதினம் அது ஆற்றும் பணி சிறிய அளவினதாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து முறையாக முயற்சி மேற்கொள்ளப்படுகையில்,போராளிகளின்  சேனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவாகி, அதன் முறையான பயிற்சியைப் பெற்றுவிடும்.”

- சோவியத் புரட்சிக்கு வழிகாட்டிய மாமேதை லெனின், பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி மேற்கண்டவாறு கூறுகிறார்

 

ஆனால், இன்றைக்கு டிஜிட்டல்  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், பத்திரிகைக்கு மதிப்பு உள்ளதா? 

 

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது என்பது மட்டு மல்ல, மிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும்,  நம் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள, பத்திரிகையின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கூறியிருப்பது போல, “ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள்தான் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற சிந்தனைகள். அதாவது, உற்பத்தி சக்திகளை ஆளுகின்ற வர்க்கம், அதே சமயத்தில்  தன் நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது. பொருள் உற்பத்திச் சாதனங்களைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறது.’’

ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம், அரசால் மட்டும் அமல்படுத்தப்படுவதில்லை; அதன் பின்னணியில் இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது என்கிறார் கிராம்சி.

உலகமயமும் ஊடகமும்

முதலாளித்துவத்தின் கீழ், கலாச்சாரம் என்பது மூலதனத்தின் ஆட்சியைத் தாங்கி நிற்கிறது. கலாச்சாரத்தின் வடிவங்கள் அனைத்துமே பண்டமயமாக்கல் மூலமாக சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது. முதலாளித்துவத்தின் கலாச்சார சாதனங்கள் அனைத்தும் சமூகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்திருக்கக்கூடிய விதத்தில்தான் இருக்குமே தவிர, சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ற விதத்தில் இருக்காது. இப்பொருள்களின் பரிவர்த்தனை மதிப்பு எப்போதுமே அதன் பயன் மதிப்பின் இடத்தைக் கைப்பற்றிவிடும். உலகமயத்தின் கலாச்சாரம், மக்களைத் தங்கள் வாழ்வின் எதார்த்த நிலையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகிறது. இங்கே கலாச்சாரம் என்பது அழகுணர்ச்சியை நோக்கியதாக இருக்காது, மாறாக தங்கள் வாழ்க்கையை அழுத்திக் கொண்டிருக்கிற வறுமை மற்றும் ஏழ்மை நிலையிலிருந்து தங்களை மறக்கடிக்கக்கூடிய விதத்தில்  தங்களின் கவனத்தைத் திருப்பக்கூடியதாக அல்லது வேறுவழியில் செலுத்தக்கூடியதாக இருந்திடும். அதன் விளைவாக, மக்கள் தங்கள் துன்பதுயரங்களுக்குக் காரணமான காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கு அவர்களுக்கு சக்தியை அளிப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் இருக்கின்ற கொஞ்சநஞ்ச சக்தியையும் வீணடிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.  இதில் முக்கியக் கருவிதான் ஊடகம்.

சமூகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது இன்றைய பெரும் ஊடக முதலாளிகளின் நோக்கமல்ல, மாறாக, சமூகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகும்.  இவர்களால் திணிக்கப்படும் “வெகுஜனக் கலாச்சாரம்” என்பது நம்மை எதார்த்த நிலைமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்க விடாமல்  மழுங்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்படுகின்றன.  அற்பத்தனமானவைகள் குறித்த ஆடம்பரமான விளம்பரங்கள் உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியாதவாறு நம்மை மறக்கடித்து விடுகின்றன. குப்பைக் கூளங்களை எல்லாம் ஏதோ வானத்திலிருந்து வந்த வைரங்கள் போன்று நம்ப வைத்து மக்களின் கழுத்தை அறுக்கின்றன. ஊடகங்கள் மூலம் இவர்கள் கட்டவிழ்த்து விடும் பொழுதுபோக்குக் கலாச்சாரம், மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் அரசியலற்றது என்று கூறப்படினும், அதன் தாக்கம், அதன் பிரச்சாரம் மற்றும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாகக் காட்டுதல், இனவெறி, நுகர்வுவெறி,  எதேச்சதிகாரவெறி, ராணுவ வெறி மற்றும் ஏகாதிபத்தியவெறி ஆகியவற்றை மக்கள் மனதில் விதைக்கக்கூடிய விதத்தில் உள்ள இவர்களது பிரச்சாரம் உண்மையில் அரசியல் சார்ந்ததேயாகும்.

ஓர் உதாரணம்

உலகமயத்தின் கைகளில் உள்ள பெரும் முதலாளித்துவ ஊடகங்கள், சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புகள் மற்றும் அவர்களின் அவல நிலைமைகளை கண்டுகொள்வதில்லை. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் தில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே குழுவினர் மிகச்சிறிய அளவில் உண்ணாவிரதம் இருந்த அதே நாளன்றுதான் நாட்டிலுள்ள அகில இந்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராக,  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான பேரணி/ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.  அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தைத் தூக்கிப் பிடித்த ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள், தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.  இதைவிடக் கேவலமான வேலையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தது. “தலைநகர் தில்லியில் தொழிலாளர்களின் பேரணி/ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து சீர்குலைந்ததாக” அது மிகவும் ‘வருத்தப்பட்டு’ ஒரு சிறிய பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது. இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

பொருளை மட்டுமல்ல...  மக்களையும் உற்பத்தி செய்கிறது

முதலாளித்துவம் குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்ட மார்க்ஸ், அதன் குணம் குறித்து மிகவும் சிறப்பாக வரையறுத்தார்:

“உற்பத்தி  என்பது ஒரு தேவையைத் திருப்திப்படுத்தும் ஒரு பொருளை மட்டும் அளிக்கவில்லை; அது, அப்பொருளுக்கான தேவையையும் அளிக்கிறது. உற்பத்தி என்பது ஆரம்பத்தில்  மக்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்து அளிக்கிறது; பின்னர் அதே உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கான மக்களையும் உற்பத்தி செய்கிறது.” (Production not only provides the material to satisfy a need, but it also provides the need for the material. Production accordingly produces not only an object for the subject, but also a subject for the object.) 

உற்பத்தியின் முதல் கட்டம் மக்களுக்கான பொருள்களை உற்பத்தி செய்வது. அதன் அடுத்த கட்டம் அவ்வாறு உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய அளவில் மக்களின் மனதை மாற்றுவது. இதற்காகத்தான் முதலாளித்துவம் விளம்பரங்களின் மூலமாக கோடிக்கணக்கான டாலர்கள் ஒவ்வோராண்டும் செலவு செய்கிறது. அதேபோன்றுதான் கலாச்சாரத் துறையிலும். விளம்பரத்தைப் பார்ப்பவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய அளவிற்கு மாற்றி விடுவார்கள். இவ்வாறாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாக, முதலாளித்துவம் விரும்பக்கூடிய விஷயங்களை மக்கள் விரும்பக்கூடிய விதத்தில் தங்கள் விளம்பரங்களின் மூலம் மாற்றிவிடுவார்கள். 

ஊடகக் கார்ப்பரேட்டுகளின்  தத்துவார்த்தத் தாக்குதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டில் தத்துவார்த்த தீர்மானம் இவ்வாறு கூறுகிறது:

“ஏகாதிபத்தியம் மற்றும் நவீனதாராளமயம் அறிவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறையில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தத்துவார்த்த யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. உலகமயத்தின் இத்தகைய நடைமுறையும்,  தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதும்  செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களை மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒன்றிணைத்து மெகா கார்ப்பரேட்டுகளாக வளர்த்துள்ளன. மனிதகுல அறிவுத்துறையில் இவ்வாறு ஏகபோக வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், மெகா கார்ப்பரேட்டுகள் தங்களின் ஊடகங்களின் வாயிலாக செய்திகளைத் தங்களுக்குச் சாதகமான முறையில் வெளியிடக்கூடிய விதத்தில் அவற்றின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் இக்காலகட்டத்தில்  மிகவும் முக்கிய அம்சங்களாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிராக அல்லது முதலாளித்துவத்திற்கு மாற்றை முன்வைப்பவர்களுக்கு எதிராக, தத்துவார்த்தத் தாக்குதலை இவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.” 

இத்தகைய உலகமய நடைமுறை விரும்பும் கலாச்சார மேலாதிக்கம் என்பது பொதுமக்களின் ரசனையுணர்வை ஒரேமாதிரி யானதாக மாற்ற விரும்புகிறது. எந்த அளவிற்கு மக்களின் பொது  ரசனையுணர்வு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு  ‘கலாச்சாரப் பொருள்களின்’ எந்திரரீதியான மறுஉற்பத்திக்கான தொழில்நுட்பங் களை வளர்த்தெடுப்பது என்பதும் எளிதாகிறது. வர்க்க மேலாதிக்கத்தின் கண்ணோட்டத்தில், உலகமயத்தின் கலாச்சாரம் மக்களை நாள்தோறும்  எதிர்கொள்ளும் தங்கள் எதார்த்த வாழ்விலிருந்து விலக்கி வைக்கவே விரும்புகிறது.  செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களின் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் மீதான கட்டுப்பாடு  ஆகியவை ஏகாதிபத்தியத்தை அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்களையும் வளர்த்து, செயல்படுத்திடவும் அனுமதிக்கிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்திடும் வெகுஜன  இயக்கங்களைக் கட்டுப்படுத்திடவும், அவற்றின்மீது செல்வாக்கு செலுத்திடவும், தேவைப்படின் அவற்றை நாசவேலை செய்து அழித்து  ஒழித்திடவும் பயன்படுத்தப்படுகின்றன.

அம்பானியின் கைகளில்...

உதாரணமாக, இந்தியாவில் அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (முன்பு ரிலையன்ஸ்  பிக் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமாக இருந்தது) நிறுவனம் இந்தியாவில் மாபெரும் ஊடக  நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன்கீழ் இந்தியாவில் 350 லட்சம் நுகர்வோர் உள்ளனர். இந்தக் குழுமம்  இந்தியாவில் திரைப்படங்களைத் திரையிடுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது.  இந்நிறுவனம் உலகின் பல நிறுவனங்களையும் வாங்கி டிஜிட்டல் துறையில் கால் பதித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ளது. இவ்வாறு ஊடகத்துறையில் மெகா கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாகி, தங்கள் நலன்களுக்கேற்ற விதத்தில் செய்திகளைத் திரித்து  ஒளிபரப்புவதுடன் மட்டுமல்லாமல், பல சமயங்களில் திட்டமிட்டே தவறான செய்திகளையும் பிரச்சாரம் செய்து, சமூகத்திற்குப் பேரழிவினை ஏற்படுத்தி வருகின்றன. ‘பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவது’ (‘paid news’) என்பது ஊடகத்துறையில்  வணிகமயம் எந்த அளவிற்கு விரிவடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கம்யூனிச எதிர்ப்பே  இவர்கள் நோக்கம்

ஆளும் வர்க்க ஊடகங்களின் பிரதான நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே ஆகும். மற்ற கம்யூனிச எதிர்ப்பு தத்துவங்களைப் போலவே இதுவும் வர்க்கங்களை மறுதலிப்பது என்பதும்.  அதன் காரணமாக வர்க்கப் போராட்டமே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்வதே ஆகும்.  இது சமூகத்தைப் பல்வேறு கூறுகளாக - இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மற்றும் சின்ன சின்ன அடையாளங்களாகப் - பிரித்து, இறுதியாக சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகும். 

ஆளும் வர்க்கங்கள் நம்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில் கட்சிப் பத்திரிகை,  ஊடகத்தின் மற்ற வடிவங்களுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, புரட்சிகர சக்திகள் தங்கள் சிந்தனைகளைப்  பரப்பக்கூடிய விதத்தில், சுரண்டப்படும் வர்க்கங்களை அணிதிரட்டக்கூடிய விதத்தில், அவற்றின் மூலமாக அனைத்துவிதமான  சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் சோசலிச சமூகத்தை உருவாக்கக்கூடிய போராட்டத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில்   புரட்சிகர சக்திகளின் கைகளில் ஒரு வலுவான ஆயுதமாக, கட்சிப் பத்திரிகை திகழ வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி