கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையர் உஷா கூறியதாவது:- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி தீவிர குறட்டையால் தூங்க முடியாமல் தென்தெரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (29) என்பவர் சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி ஞானவேல் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் முத்துக்குமார், சாந்தி சரண்ராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினர்.
கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (27) என்பவரை பரிசோதனை செய்தபோது அவரது மூக்கு வழியாக பூஞ்சைக் காளான் கண்ணுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அவருக்கு எண்டாஸ்கோப்பி மூலம் காது, மூக்கு, தொண்டை மருத்துவ குழுவினர்கள் அறுவை சிகிச்சை செய்து பூஞ்சை காளானை அகற்றி குணப்படுத்தி சாதனை படைத்தனர்.
தற்போது ராஜேஷ் என்ற சிறுவனின் மூக்கிலிருந்து மூன்று சிறிய பேட்டரிகளை அகற்றியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குறட்டையால் பாதிக்கப்பட்ட எட்டுப் பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறட்டைக்கு அறுவைச் சிகிச்சை செய்ததில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. இந்த மருத்துவமனையில் நடப்பாண்டில் 386 பேருக்கு காது, மூக்கு, தொண்டை சிறப்பு அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது
தமிழக அளவில் தரவரிசைப் பட்டியலில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூன்றாமிடம் பிடித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்ததில் பிரசவத்திற்கு சிகிச்சை அளிப்பதில் முதல் தரவரிசை பட்டியலில் இந்த மருத்துவமனை உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார் என்றார்.