articles

img

சாவித்திரி பாய் பூலே பெயரில் பெண்களுக்கான நூலகம்

      பெண்களுக்கென்றே தனி நூலகம் ஜார்கண்ட் மாநிலம் கும்ளா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்து நூலகத்தின் ஊழியர்களும் பெண்களே! இது அந்த மாநிலத்தின் முதல் பெண்கள் நூலகமாகும்.

     அரசு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற்றுவரும் பெண்கள் பயன் பெறும் வகையில் ஜார்கண்ட் மாநிலம் கும்ளா நகரில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.நானூறு பேர் அமர்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு  ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்காகப் போராடியவரும் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியருமான சாவித்திரிபாய் பூலே அவர்களின்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

    பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்களின் படிப்புக்காக முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு இத்தகைய சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

   முழுவதும் இணையவசதியுடன் கூடிய,பல தலைப்புகளில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும்  தேவையான 7000 புத்தகங்களுடன் இரண்டு தளங்களாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவிகள் குழு விவாதம் நடத்த தனியாக இரண்டு அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தடையற்ற  மின்சாரம்  வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நூலகத்தை 13 மணிநேரம் மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  

    போட்டித் தேர்விற்கான புத்தகங்கள் மட்டுமின்றி தேர்விற்கு பயிற்சிப்பெறும் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கவும், அவர்களின் சுகாதாரம் மற்றும்  மனநிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு  மாதவிடாய்,  இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குறித்தான விழிப்புணர்வு  வகுப்புகள் நடத்தும் வசதிகளோடு இந்த நூலகம் திட்டமிட்டப்பட்டுள்ளது என கும்ளா நகர துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    மேலும் போட்டித்தேர்வுகளுக்கு பெண்கள் பயமின்றி தயாராகி வாழ்க்கையில் முன்னேற பெண்களுக்கான  வசதியான சூழலை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க இந்த முயற்சி வழிவகுக்கும் என்றும், நூலகத்திற்கு மாதக்கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், இந்த நூலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஏற்கெனவே தில்லியில் கராலா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பெண்கள் நூலகத்தை மாணவிகள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.