articles

img

பண மோசடி தடைச் சட்டத்தைக் கிழித்தெறிந்து, அமலாக்கத்துறையின் அதிகாரங்களைப் பறிப்போம்!

நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கை எழுப்பி இருக்கிறது. இது, அமலாக்கத்துறை மற்றும் அதன்  பண மோசடி தடைச் சட்டத்தின் அதிகார வரம்பெல்லை சம்பந்தப்பட்டதாகும். தேர்தல் அறிக்கையானது, “பண மோசடி தடைச்  சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்திடும் விதத்தில் பொருத்தமான சட்டப்பிரிவுகளுடன் மாற்றிய மைக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறையிடமிருந்து சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. நாட்டில் ஜனநாயகமும்,  எதிர்க்கட்சிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இதனைக் காலத்தே செய்யவேண்டியது அவசியமாகும். 

முதல்வர்கள் கைது

பணமோசடித் தடைச் சட்டத்தை, அமலாக்கத் துறையினர், எண்ணற்ற  எதிர்க்கட்சியினரைக் குறி வைத்துத்தாக்குவதற்கு, எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம்  பார்த்து வருகிறோம். மக்களவைக்கான தேர்தல் அறி வித்துள்ள நிலையில், ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் என்னும் இரு முதலமைச்சர்கள் பண மோசடித் தடைச் சட்டத்தின் ஷரத்துக்களைப் பயன்படுத்தி, அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பண மோசடித் தடைச் சட்டம் என்பது அதன் ஒரிஜினல் நோக்கத்திலிருந்து முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தை வலுவான முறையில் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்காக பொருத்தமான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று 1998இல் ஐ.நா. பொது மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தை அடுத்து, 2005இல் இந்தச் சட்டம் முதலில் நிறை வேற்றப்பட்டது.

அதீத அதிகாரங்கள் திணிப்பு

எனினும், காலம் செல்லச் செல்ல இந்தச் சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இந்தச் சட்டம் விரிவாக்கப்பட்டது. இதில் சில திருத்தங்கள் 2009இலும் 2012இலும் ஐமுகூ அரசாங்கத்தால், இந்தச் சட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்றும் விதத்தில் கொண்டுவரப்பட்டன. ஆயினும் 2018இல் பாஜக அரசாங்கம் இந்தச் சட்டத்தை மிகவும் கொடுங் கோன்மைமிக்கதாக மாற்றிவிட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எதி ராகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தொடர்ந்து மேலும் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பல குற்றங்கள் மற்றும் இதர சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல குற்றங்களும் பணமோசடித் தடைச் சட்டத்தின்கீழான குற்றங்களின் அட்டவணை யின் பகுதிகளாக மாறியுள்ளன. இதன் மூலம், அமலாக்கத்துறையானது அதீதமான அதிகாரங் களைப் பெற்றுள்ளது. உண்மையில் அமலாக்கத் துறை பெற்றுள்ள இந்த அதிகாரங்களுக்கும் போதைப்  பணப் புழக்கம் அல்லது பண மோசடிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  

நீதிபதி கன்வில்கர் அமர்வின் ஒப்புதல் கெடு நிகழ்வானது

பண மோசடித் தடைச் சட்டத்தில் மிகவும் அரு வருக்கத்தக்க அம்சம் என்னவெனில், கைது செய்யப் பட்டவரை பிணையில் விடுவது சம்பந்தமானதாகும். நம் நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபர், குற்றவாளி என மெய்ப்பிக்கப்படும்வரை அவர் அப்பாவியாகத்தான் கருதப்பட வேண்டும் (presumed innocent) என்ப தாகும். ஆனால் இந்தச் சட்டத்தின் 45ஆவது பிரிவு, பிணை மனுவை விசாரித்திடும் நீதிபதி, குற்றஞ் சாட்டப்பட்டவர் அப்பாவி என திருப்தியுற்றால்தான் அவரைப் பிணையில் விட முடியும் என்று கூறுகிறது. இவ்வாறு, தான் அப்பாவி என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரைச் சார்கிறது. இந்தச் சட்டத்தைக் கொடுங்கோன்மை மிக்க சட்டமாக மாற்றுவதற்கு வழிசெய்திடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வாயம் அப்படியே ஏற்றுக்கொண்ட தானது கெடு நிகழ்வாகும்.

லஞ்ச ஒழிப்பு சட்டமும் இந்திய தண்டனைச் சட்டமும் அமலாக்கத்துறை வசம்

பொது ஊழியர்கள் லஞ்சம் பெறுவது சம்பந்தமாக வும் மற்றும் அவர்கள் மேற்கொண்டிடும் பல தில்லு முல்லுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக லஞ்ச  ஒழிப்புத் தடைச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இப்போது அந்தச் சட்டமும் பண மோசடித் தடைச்  சட்டத்தின் அட்டவணைகளுக்குள் கொண்டுவரப் பட்டிருக்கிறது. இது, அமலாக்கத்துறையினரை, இக்கொடுங்கோன்மை சட்டத்தின்கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அல்லது  அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது.      லஞ்ச ஒழிப்புத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கு களைப் பொதுவாக, மத்தியக் குற்றப் புலனாய்வு (சிபிஐ) பிரிவினரே நடத்தி வந்தனர். இப்போது அவற்றை யும் அமலாக்கத்துறையினர் கையாளத் தொடங்கி விட்டனர். இப்போது குற்றமுறு சதி (criminal conspiracy), கொலை செய்ய முயற்சி, மிரட்டி பணம்  பறித்தல், ஆள் கடத்தல் போன்ற இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களிலும்கூட அம லாக்கத்துறையினர் தலையிடத் தொடங்கிவிட்டார்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர சட்டங்களிலும் கூட அமலாக்கத்துறையினர் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள்.  

சட்டத்துக்குப் புறம்பான கருவியான அமலாக்கத்துறை

நிதியமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையின் கீழ் ஒரு முகமையாக செயல்படத் துவங்கிய அம லாக்கத்துறைக்கு இதுநாள் வரையிலும் மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாண்டு வந்த  தில்லி காவல் சட்டம் போன்றவற்றைக் கையாள்வதற்கு அதி காரம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது பண மோசடித் தடைச் சட்டத்தின் மூலம் கிடைத்த அதி காரங்களைக் கொண்டு எல்லா சட்டப் பிரிவுகளையும் கையாளக்கூடிய ஒரு சட்டத்திற்குப் புறம்பான கருவி யாக (lawless instrument) அது மாறி இருக்கிறது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தில் போலீஸ் அதிகாரிகள் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததைப்போலல்லாமல், அமலாக்கத் துறை அதி காரிகள் என்பவர்கள் இந்திய வருவாய்த் துறை (Indian Revenue Service) மற்றும் பல சிவில் பணிகள் (civil services) தொடர்பான அதிகாரிகளே கவனித்து வரு கிறார்கள். இவ்வாறு, இவர்கள் காவல்துறையினருக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் போலீஸ்  அதிகாரிகள் அல்ல

உதாரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறையினர் பதிவு செய்யும் வாக்குமூலங் களை அமலாக்கத்துறையினர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்திட முடியும். ஆனால், இந்தியத் தண்ட னைச் சட்டத்தின்கீழ் போலீஸ் அதிகாரிகள் அவ்வாறு தாக்கல் செய்திட முடியாது.  உண்மையில், இவ்வாறு அமலாக்கத்துறையினருக்கு அதிகாரம் வழங்கி யிருப்பதை, ‘அவர்கள் போலீஸ் அதிகாரிகள் அல்ல’  என்று கூறி உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று ஏற்றுக் கொண்டுள்ளது.  அமலாக்கத்துறையின் பங்களிப்பு என்பது ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல்வாதிகளை வேட்டையாடு வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தேர்தல் பத்தி ரங்கள் திட்டம் எவ்வாறெல்லாம் செயல்பட்டு வந்தது என்பது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள விவ ரங்கள் இதன் கறுப்புப் பக்கத்தையும் வெளிச்சத்திற் குக் கொண்டு வந்திருக்கிறது. அமலாக்கத் துறை, சில நிறுவனங்களிடம் சென்று அவற்றை மிரட்டி, கட்டா யப்படுத்தி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக- விற்கு பணத்தை நிரப்ப உதவி செய்திடப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாஜக-விற்குப்  பணத்தை வழங்குவதற்காக, அரசு நிறுவனம் ஒன்றே பிளாக்மெயில் மற்றும் மிரட்டிப் பணம் பறித்திடும் வேலைகளில் அப்பட்டமாகப் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. இவ்வாறு ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமலாக்கத்துறையினரின் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்

எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இது தொடர்பான முன்மொழிவினை மிகவும் பொருத்தமான முறையில் அளித்திருக்கிறது. முதலாவதாக, பணமோசடி தடைச் சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும். சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் போதை மருந்துகள் மற்றும் போதைப் புழக்கத்தில் பயன்படுத்தப்படும் பணம் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று நிறை வேற்றப்பட வேண்டும். இச்சட்டம் இதில் பயன்படுத்தப் படும் பணம் குறித்து கறாராக செயல்பட வேண்டும். இரண்டாவதாக, அமலாக்கத் துறையினரின் அதி காரங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும். அது புலனாய்வு மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டிருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இதன் பணிகள் என்பவை சர்வதேச அளவில் போதை மருந்துகள் புழக்கத்தில் விடப்படுவதைக் கண்காணிக்கும் அரசுத் துறையாக முன்பு இருந்ததைப்போலவே மாற்றியமைக்கப்பட வேண்டும். இது பெற்றிடும் தகவல்கள் அனைத்தும் சட்டத்தை அமல்படுத்தும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமை களையும் மீட்டெடுத்திட இவ்விரண்டு பணிகளையும் மேற்கொண்டிட வேண்டும்.

ஏப்ரல் 3, 2024
- தமிழில்: ச.வீரமணி