அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்து அந்நாட்டை சீர்குலைக்க தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இந்தத் தடையை நீக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவந்த போதிலும் அமெரிக்கா அதை ஏற்காமல் சண்டித்தனம் செய்து வருகிறது. பொருளாதாரத் தடை காரணமாக உணவுப்பொருட்கள் தொடங்கி உயிர்காக்கும் மருந்துகளைக் கூட இறக்குமதி செய்யமுடியாமல் கியூபா தவிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் உலகின் பெரும் வல்லரசு நாடுகள் பலவும் உருக்குலைந்து போன நிலையில் கியூபா அதை வெற்றிகரமாக சமாளித்தது. காரணம் அரசு கட்டுப்பாட்டில் சுகாதாரத்துறை இருந்ததால்தான்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடைகளை கியூப மக்களும் அரசும் இணைந்து தீரத்துடன் எதிர் கொண்டு சமாளித்து வருகின்றனர். சர்வதேசத் தளங்களில் அமெரிக்காவின் வஞ்சகத்தை கியூபா தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. ஒருநாட்டின் மீதான பொருளாதாரத் தடை மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். கியூபா மீது விதிக்கப்பட்ட பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் தடையால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் உயிரை காக்கும் இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கான தேசிய மையத்திற்கு தேவையான மருந்துகள், மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய முடியாமல் கியூபா தவித்து வருகிறது.
பொருளாதாரத் தடையால் மருத்துவமனைகள் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள், விளையாட்டுத்துறை என சகல துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன. கியூபாவுடன் புதிய அத்தியாயம் தொடங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது அறிவித்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவில்லை. இப்படி தொடர்ந்து கியூபாவை அமெரிக்கா பல்வேறு வகைகளில் சித்ரவதை செய்து வருகின்ற நிலையில் அந்நாடு மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் உலகில் பேசப்படும் நாடாக கியூபா விளங்குகிறது. வளர்ந்த நாடுகளே பல பதக்கம் வெல்ல நாக்குத் தள்ளும் நிலையில் ஒருகோடியே 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறிய நாடான கியூபா 2 தங்கம், 1வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 203 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில் 83 நாடுகளே பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதில் கியூபா 32ஆவது இடத்தை பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையே. கடந்த காலங்களை ஒப்பிடும் போது இது கியூபாவிற்கு பின்னடைவு என்றாலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டு மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் குறைந்த வீரர்கள், குறைந்த விளையாட்டு கட்டமைப்புகளை கொண்டு பதக்கம் வென்றிருப்பது மற்ற நாடுகளுக்கு ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டையில் தலைசிறந்த நாடு
வளர்ந்த நாடுகள் பதக்கம் வெல்வது முக்கியச் செய்தி அல்ல. அந்நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் விளையாட்டுக்காக செலவிடப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள வறிய நாடுகள் அல்லது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை தகர்த்து பதக்கம் வென்ற நாடுகளே கொண்டாடப்பட வேண்டியவை. அந்த வகையில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக கியூபா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்து வருகிறது.
உலகில் குத்துச் சண்டைப் போட்டிகளில் கியூபா தலைசிறந்து விளங்குகிறது. ஒலிம்பிக்கில் கியூபா வுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்த வீரர்கள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களாக மாறி யிருந்தால் உலகில் மிகப்பெரிய பணக்காரர்களாக ஆகியிருக்கமுடியும். பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்திருக்க முடியும். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அழைப்பு வந்தபோதும், “தொழில்முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம். தாய்நாட்டுக்கு விளையாடுவதே எங்களுக்கு மிகப்பெரியபெருமை” என்று விளையாட்டை வணிகமாக மாற்ற கியூபா வீரர்களும் வீராங்கனைகளும் மறுத்துவிட்டனர்.
அமெரிக்காவுக்குச் சவால்
கியூபாவுக்கான தேசிய ஒலிம்பிக் கமிட்டி 1926 இல் உருவாக்கப்பட்டது. இது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் 1954 இல்தான் அங்கீகரிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் சோசலிச கியூபா பங்கேற்ற பின்னர் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. கோடைக் கால ஒலிம்பிக்கில் இதுவரை நடை பெற்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தென் அமெரிக்கநாடுகளில் முத லிடத்திலும் கியூபா உள்ளது. தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில், அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா வை விட அதிக பதக்கங்களை வென்றுள்ளதுதான் சோசலிச கியூபாவின் வரலாறு. கியூபா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாத நாடுகளில் அதிக பதக்கங்களை வென்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, ருமேனியா மற்றும் போலந்து வரிசையில் கியூபாவும் இடம் பெற்றுள்ளது.
கியூபாவின் ஒலிம்பிக் சாதனைகள்
1992ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கியூபா 176 பேர் கொண்ட அணியை அனுப்பியது.அந்தப்போட்டியில் 14தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 31 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்து வளர்ந்த நாடுகளை கதிகலங்கச்செய்தது. அந்தப்போட்டியில் பெரும்பாலான தங்கப் பதக்கங்களை குத்துச்சண்டையில் கியூபா வென்றது.
1996இல் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி யில் 9 தங்கம் உள்ளிட்ட 25 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 8ஆவது இடத்தையும் 2000ஆவது ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 11 தங்கம் உள்ளிட்ட 29 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 9ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 70 பேர் கொண்ட அணியை மட்டுமே கியூபா அனுப்பியது. அந்தப் போட்டியிலும் 7 தங்கம் உள்ளிட்ட 15 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14ஆவது இடத்தை கைப்பற்றியது.
கடந்த கால ஒலிம்பிக் போட்டிகளை விட இந்த ஒலிம்பிக் போட்டியில் கியூபா பெற்ற பதக்கங்கள் குறைந்துள்ள போதிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை விட பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 60 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றனர். கியூபா ஒலிம்பிக் வரலாற்றில் 2000ஆவது ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில்தான் அதிகபட்சமாக 229 பேர் கலந்துகொண்டனர்.
அறிவியல் தொழில்நுட்பம் விளையாட்டுத் துறையையும் மாற்றிவருகிறது. நவீன கண்டு பிடிப்புகள், விளையாட்டு சாதனங்கள் வீரர்களின் பயிற்சிக்கு உதவுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் இத்தகைய சாதனங் களை கியூப வீரர்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். மன வலிமையும் சோசலிச சித்தாந்தமும் தான் கியூபா அணியினரை உயிர்ப்புடனும் உற்சாகத்துடனும் வைத்துக்கொண்டிருக்கிறது. கியூபாவின் குழந்தை, இளைஞன், தொழிலாளி, விஞ்ஞானி, மருத்துவர், ஆசிரியர், அறிவுஜீவி ஆகியோரின் போராட்டம் கியூப வீரர்களின் வெற்றியில் பிரதிபலிக்கிறது. எனவே சோசலிச கியூபாவின் வெற்றி பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட மிக உயரமானது.
சாதனையின் உச்சம் தொட்ட வீரர்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிலும் கியூபா வீரர்கள் சாதனை படைத்தனர். அந்நாட்டின் மல்யுத்த ஜாம்பவான் மிஜைன் லோபஸ் ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் லோபஸ், தன்னுடைய 5ஆவது தங்கப்பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிகப்படியாக 4 தனிநபர் தங்கங்களை வென்றிருந்த அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (வட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) என மிகவும் அரிதான சொற்ப வீரர்களின் வரிசையில் கியூபாவின் மிஜைன் லோபசும் இணைந்து விட்டார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, “ நான் மீண்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய வருகிறேன். தனிநபர் பிரிவில் ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரராக என் விளையாட்டு வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியிருந்தார். அதைச் செய்தும் காட்டிவிட்டார்.
சாதனையுடன் ஓய்வு
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய மிஜைன் லோபஸ், இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 5 முறை தங்கம் வெல்லும் முதல்வீரர் மற்றும் தொடர்ச்சியாக தனிநபர் பிரிவில் 5முறை தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். போட்டிக்குப் பிறகு தன்னுடைய ஷூவை கழற்றி மேடையில் வைத்த மிஜைன் லோபஸ், தங்கம் வென்ற மேடையிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்தார். 5ஆவது தங்கம் வென்றது குறித்து பேசிய லோபஸ், “வார்த்தைகளால் வருணிக்கமுடியாத மிகப்பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. இதைத்தான் என் வாழ்க்கையில் நான் செய்துமுடிக்க ஏங்கிக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் எனது நாட்டிற்காக வும் ஒலிம்பிக்கில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டதில் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இத்தனை ஆண்டுகள் என் குடும்பத்தினருடன் சேர்ந்து கடினமாக உழைத்ததற்கு எனது வாழ்நாளில் மிகப்பெரிய வெகுமதி கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றி” என்று மகிழ்ச்சி பொங்க டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ சில நிமிடங்களிலேயே 7 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் டிவிட்டர் பயனர்கள் அவரை பாராட்டி ஆயிரக்கணக்கில் பதிவிட்டுள்ளனர். வீடியோவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “அவர் ஒரு முழுமை யான வரலாறு” என்று புகழ்ந்துள்ளார். மற்றொருவர், “சிலர் உண்மையான சாம்பியனாகப் பிறந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது பயனர், “அட! லெஜெண்டின் படங்களின் வரிசையில் இவரது புகைப்படத்தையும் நீங்கள் காணலாம். இனிய நினைவுகளுடன் ஓய்வு பெறுங்கள் “ என வாழ்த்தியுள்ளார்.
முக்கியமான விஷயம் “கியூபாவாக இருப்பதில் பெருமிதம் கொள்வது, கியூபா எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் அந்நாட்டிற்காகக் கொடுப்பது. ஒவ்வொரு ஒலிம்பிக் மற்றும் உலகப் பதக்கமும் அந்த உணர்வைக் கொண்டுள்ளது.” என்கிறார் மிஜைன் லோபஸ். நீங்கள் ஒரு கியூபன் மற்றும் ஒரு முன்மாதிரியான புரட்சியாளர்” என்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச்செயலாளரும் அந்நாட்டின் ஜனாதிபதியுமான மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸ் கூறியுள்ளது பொருத்தம் தானே!