திருப்பரங்குன்றம், ஜன. 27- “அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் கை நீட்டாமல், உழைக்கும் மக்களின் ஐந்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரையிலான நன்கொடை களால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்தப்படும்” என கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பெருமையுடன் தெரிவித்தார்.
மக்களின் பங்களிப்பு அபாரம்
திருப்பரங்குன்றத்தில் ஞாயிறு மாலை நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மதுரை புறநகர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் 27 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “தெருவோர காய்கறி விற்பவர்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை, ஆட்டோ தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற தொகையை வழங்கி ஆதரித்துள்ளனர். இந்த மக்கள் ஆதரவே எங்கள் பலம்” என்றார்.
குடியரசு தின சிந்தனை
76வது குடியரசு தினத்தில் நாட்டின் நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், “76 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட வில்லை. சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் இன்னும் கனவாகவே உள்ளது. மோடி அரசு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என பெருமை பேசினாலும், அடித்தட்டு மக்கள் இன்னும் அவதிப்படு கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.
தேசிய அளவிலான அச்சுறுத்தல்கள்
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கம் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டம். இது மாநில சுயாட்சி உரிமைக்கு எதிரானது” என்று எச்சரித்தார்.
மணிப்பூர் பிரச்சனை
“மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக இனக்கலவரம் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி அந்த மாநிலத்தை கூட சென்று பார்க்கவில்லை. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், சொந்த நாட்டு மக்களின் துயரத்தை காண மறுக்கிறார்” என்று விமர்சித்தார்.
மாநாட்டு ஏற்பாடுகள்
ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில்:
- 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு
- 10,000 செந்தொண்டர்கள் அணிவகுப்பு பேரணி
- 5 லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்பு.
எதிர்கால இலக்குகள்
“2021ல் கண்ணூரில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவின்படி, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் விளைவாகவே இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. வரும் மதுரை மாநாட்டில்: - பாஜக எதிர்ப்பு அரசியல் உத்திகள் - தேசிய அளவில் இடதுசாரி மாற்றத்திற்கான வழிமுறைகள் - பொதுத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் - மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்” என தோழர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். “கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதும் இடதுசாரி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான திட்டமிடல் களமாக இந்த மாநாடு அமையும்” என்று அவர் நம்பிக்கை யுடன் தெரிவித்தார்.