articles

img

தேசத்தைக் காக்க ஒன்றிணைவோம்! பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவோம்!

கண்ணூர், ஏப்.6- இந்தியாவில்  பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா ராஜ்ஜியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வரும் பாஜகவை அரசியல் அரங்கிலிருந்து தனிமைப்படுத்தி வீழ்த்துவோம்; அதற்காக நாட்டின் அனைத்து இடதுசாரிகள், மதச்சார்பற்ற  ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம் என்று சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம், கண்ணூரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநாட்டில் துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இடதுசாரி ஒற்றுமையை காப்போம்!

இன்றைய அரசியல் பின்னணியில், உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்த்து முறியடித்திடவும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசையும், அதன் அரசமைப்புச்சட்டத்தையும்  பாதுகாத்திடவும் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த விதத்தில் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா அவர்களுக்கும், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்திட உறுதிபூண்டு வாழ்த்துக்களை அனுப்பியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

புரட்சி பூமி கண்ணூர்

பல்வேறு நாகரிகங்களும், பல்வேறு கலாச்சாரங்களும் பின்னிப்பிணைந்த கண்ணூரில் நாம் இந்த மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறோம். இது, கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிறந்த இடமாகும். மத நம்பிக்கை யாளர்கள், தாங்கள் வணங்கும் கடவுளிடம் ஆசி பெறு வதற்காக அடிக்கடி ‘தீர்த்த யாத்திரை‘ செல்வார்கள். அதே போன்றே புரட்சியாளர்கள் கண்ணூர் வந்து, வீரத் தியாகிகள் கய்யூர் மற்றும் கரிவெள்ளூர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தாவிட்டால், அவர்களைத் தரிசித்து கண்ணூரின் புரட்சிகர இயக்கத்திலிருந்தும், பாரம்பரியங்களின் வலிமையிலிருந்து உத்வேகத்தைப் பெறாவிட்டால்  அவர்களுடைய ‘தீர்த்த யாத்திரை’ நிறைவடையாது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது பினராயி கிராமம்தான். அப்போது நடை பெற்ற மாநாட்டில் பி.கிருஷ்ணபிள்ளை, இஎம்எஸ் நம்பூதிரி பாட், ஏ.கே.கோபாலன் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உன்னதத் தலைவர்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்ற மாநாடு  அதுவாகும். கம்யூனிஸ்ட் கட்சி, கண்ணூரில் சிரக்கள் என்னு மிடத்தில் இருந்துதான் தோழர் பி.கிருஷ்ணபிள்ளையைச் செயலாளராகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. அப் போது கடும் அடக்குமுறையை எதிர்த்துநின்று, கட்சி தடை செய்யப்பட்டபோது, தலைமறைவாகச் சென்று செயல்பட்டது.

இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற அர்ப்பணிப்புமிக்க தோழர்களால்தான், கேரளா வில் இன்றையதினம் ஒரு வலுவான அரசியல் சக்தியாக  கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்தோங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் விடுதலைப்  போராட்டமும், அர்ப்பணிப்புமிக்க பல்வேறு போராட்டங் களும் இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கான வலுவான சக்தியாக கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தை மாற்றியமைத்திட கூடிய அளவிற்கு, மக்களின் நம்பிக்கையைபெற்றுள்ளது. இத்தகையதொரு வளமான வரலாற்றையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரியத்தையும் “கண்ணூர்: சிவந்தபூமி” (“Kannur:the Red Land”) என்னும்  புத்தகமாக மாநாட்டின் அமைப்புக்குழு தொகுத்து வெளி யிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் உள்ள விவரங்கள், கேரளாவிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு வலுவான கம்யூனிஸ்ட் தளமாக இப்பகுதி வளர்ந் தோங்கி இருப்பதைக் காட்டுகிறது. சோசலிசத்தை நோக்கி  முன்னேறுவதற்கான சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்து வம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டங் களை அடையாளப்படுத்திடும் இடமாகத் திகழ்கிறது கண்ணூர்.

கோவிட் பாதிப்பு

கடந்த 22ஆவது அகில இந்திய மாநாட்டுக்கும், இம்மாநாட்டுக்கும் இடையேயான நான்காண்டுகளில், ஈராண்டு காலம் கோவிட்-19 பெருந்தொற்றால் உலகமே கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சீர்குலைந்தது. கோவிட்-19 பெருந்தோற்று உலகைத் தாக்குவதற்கு முன்பே, உலகப் பொருளாதாரமும், இந்தியப் பொருளா தாரமும் மந்த நிலைமையை நோக்கிச் செல்வதற்கான  அடையாளங்களைக் காட்டத் துவங்கின. கோவிட் பெருந் தொற்று இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கின. கொள்ளை லாபம் ஈட்டுவதையே குறியாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவம், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு  அளிப்பதில் படுதோல்வி அடைந்த தை இந்த சமயத்தில் நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு நேரெதிராக, சோசலிச நாடுகள் இப்பெருந்தொற்றை எதிர்த்து முறியடிப்பதில் வெற்றி பெற்றதையும், அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்  சென்றதையும் நம்மால் பார்க்க முடிந்தது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இப்பிரச்சனையை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டு, நாட்டிலும் உலக அளவிலும் பாராட்டுதல்களைப் பெற்றது. மாறாக  நாட்டின் இதர பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றும், பொருளாதார மந்தமும்  கடும் தாக்குதலை ஏற்படுத்தி, மக்க ளை பசி-பட்டினி, வறுமை, கல்வி பறிப்பு முதலான வற்றிற்கும், உழைக்கும் மக்கள் மிகவும் கொடூரமான முறையில் சுரண்டப்படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.

இக்கால கட்டத்தில், 2020இல் உலக மெகா கோடீஸ் வரர்களின் மொத்த செல்வக்குவிப்பு, 10.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உச்சத்திற்குச் சென்றுள்ளது.  பத்து உலகப் பெரும் பணக்காரர்களின் செல்வம் 2021இல் 413 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள  முதல் 10 பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 57 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள். அடிமட்டத்தில் உள்ள பாதி மக்கள்தொகையின் பங்கு என்பது வெறும் 13 சதவீதம் மட்டுமேயாகும். 

அரசியலில் வலதுசாரி திருப்பம்

கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக முதலாளித்துவ நாடுகள், திவாலாகிப்போன  நவீன தாராளமயக் கொள்கையைப் பின்பற்றுவதன் காரணமாக, பல நாடுகளில் அவை வலதுசாரி அரசியலைப் பின்பற்று வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவுவாத சிந்தனைகளை ஊட்டுவதையும், அவர்கள் மத்தியில் நிறவெறி, இனவெறி, மதவெறி, சாதிவெறி, பிராந்திய வெறி ஏற்றப்பட்டு அவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைச் சீர்குலைத்திடுவதையும் பார்க்கிறோம். இந்தியாவில் அது இந்துத்துவா வெறி தீவிரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.   வலதுசாரி அரசியலை திணித்திடுவதற்கு எதிரான  மக்கள் எதிர்ப்பும் உலகில் அதிகரித்துக் கொண்டிருப்பதை யும் பார்க்கிறோம். குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இடதுசாரிகளும், முற்போக்கு சக்திகளும் வலதுசாரி ஆட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருப்பதையும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இடதுசாரிகளின் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

உலகளாவிய மேலாதிக்கத்திற்கான பேராசை

அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகில் கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டபின்னர், உலகையே தன் மேலா திக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கிறது. அது, சீனாவைக்  ‘கட்டுப்படுத்துவதற்கான’ தன்னுடைய முந்தைய முயற்சிகளிலிருந்து இப்போது சீனாவைத் ‘தனிமைப் படுத்துவதைக்’ குறியாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக தன்னுடைய அனைத்துக் கூட்டணி நாடுகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் மோதல்

இன்றையதினம் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி 42 நாட்களாகின்றன. உண்மையில் இது ரஷ்யாவுக்கும் அமெரிக்கா/நேட்டோவிற்கும் இடையேயான போராகும். உக்ரைனை நேட்டோ உறுப்பு நாடாக மாற்றி, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் நேட்டோ படையினரில் 1 லட்சத்து  75 ஆயிரம் பேரை நிறுத்தி வைத்ததன் விளைவே, இந்தப் போருக்கான முக்கிய காரணமாகும். இந்தப் போர்  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த யுத்தமானது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்திடும். இந்த போரும், இந்த போர் தொடர்பாக ஐ.நா.-வில்  ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் போது வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொள்ளும் நிலை யினை இந்தியா எடுத்திருப்பதும் மோடி அரசாங்க மானது இன்றைய உலக நிலையில் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனற்ற தன்மையைக் காட்டியிருக்கிறது. இந்தியா, ஒரு சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை உயர்த்திப்பிடித்து,  தன்  சொந்த நலன்களைப் பாதுகாத்திட வேண்டும். இப்போதா வது அது ‘குவாட்’ (QUAD) போன்ற அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் தலைமையிலான கூட்டணி நாடுகளிடமிருந்து தன்னை துண்டித்துக் கொள்வதற்கு, பரிசீலனை செய்திட வேண்டும்.

இந்துத்துவா - கார்ப்பரேட்  கள்ளக் கூட்டு!

கடந்த நான்காண்டுகளில், குறிப்பாக, 2019இல் பாஜக  அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்பு, இந்தியாவில் உள்ள நாம் பாஜக அரசாங்கத்தால் பாசிச ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் மிகவும் மூர்க்கத்தனமான முறை யில் பின்பற்றப்பட்டு வருகிறது. பலமுனைகளில் மக்கள்மீது  தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்துத்துவா வெறியர்கள்-கார்ப்பரேட்டுகளின் கள்ளப்பிணைப்பு வலுப்படுத்தப்பட்டு, நவீன தாராளமயக் கொள்கைகள் வெறித்தனமாகப் பின்பற்றப்படுவதோடு, வெட்கமேது மின்றி கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட  கோடானுகோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படு கின்றன, நாட்டின் சொத்துக்கள்  அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன.  தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கையூட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கின்றது. எதேச்சாதிகாரம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரிக்கப்படும் அரசமைப்புச்சட்டம் 

இவர்களின் நடவடிக்கைகள் மூலமாக, அரசமைப்புச் சட்டத்தின்; மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடி யரசின் அடிப்படை அம்சங்கள் திட்டமிட்டு படிப்படியாக அரித்து வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மதச்சார் பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொரு ளாதார இறையாண்மை என்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்கு முக்கிய தூண்களும் கடும் தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அரிக்கப்பட்டுக் கொண்டிருக்  கின்றன. பாசிச ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை  அமலாக்க வேண்டுமானால், இவர்களுக்கு இப்போதிருந்து வரும் கூட்டாட்சி மாண்பு மறுதலிக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி  அமைப்பு முறை தேவையாகும். இதனை எய்துவதற்காக இவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப் பட்ட சுயேச்சையான அமைப்புகளான நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஒன்றியக் குற்றப் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை முதலான அனைத்தையும் அரித்துவீழ்த்திடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது ஒன்றுதான் குறிக்கோள். அதனால்தான் இவர்கள் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது பற்றி கவலைப்படவில்லை. அதனால் மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, ஏராளமானவர்கள் இறந்தது குறித்தோ சற்றும் கவலைப்படவில்லை. அதன் காரண மாகத்தான் கொரோனா பெருந்தொற்றால் இறந்தவர் களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

மக்கள் மத்தியில் இந்துத்துவா அடையாளத்தைக் கொண்டுசெல்வதில் ஆர்எஸ்எஸ்/பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய சமூகத்தினரிடையே வெறுப்பை யும், விஷத்தையும், வன்முறையையும் பரப்புவதன் மூலமாக மதவெறித் தீயைக் கூர்மையானமுறையில் விசிறி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடையே மதவெறித் தீயை விசிறிவிடுவது ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறிக் கொள்கைக்கு அவசியமாகும். இத்தகைய சூழ்நிலையில், சிறந்ததொரு வாழ்க்கைக் கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதற்கும், இந்தியக் குடியரசு மற்றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களைப் பாது காப்பதற்கும், பாஜக-வைத் தனிமைப்படுத்துவதும், அதனை முறியடிப்பதும் அவசியமாகும்.   ஆர்எஸ்எஸ்/பாஜக-வை தேர்தல்மூலமாக மட்டும் தனிமைப்படுத்துவதனைச் செய்திட முடியாது. ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிராக அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலமுனைகளில் முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வதன் மூலமே அதனைச் செய்திட முடியும். இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான நடவடிக்கைகள் குறித்து கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு விவாதித்திடும்.  

சுயேச்சையான பலத்தை அதிகரிப்போம்!

கட்சிக்கு முன்னுள்ள முழுமுதற் கடமை மற்றும் முதன்மையான பணி என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தை கணிசமான அளவிற்கு அதிகரித்திட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

  • அதன் அடிப்படையில், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலம், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும்.
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு ஒரு மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரி-ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும்.
  • பாஜகவை முறியடித்திடுவதற்காகவும், அதன் இந்துத்துவா மதவெறிக்கு எதிராகவும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான முன்னணியை அமைத்திட வேண்டும்.

எந்த சமரசமும் கூடாது

பாஜகவைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட வேண்டும் என்பதற்காக அனைத்துஇடதுசாரி, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று அறை கூவி அழைக்கிறோம். மதச்சார்பின்மையைப் பிரகடனம் செய்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் சமயத்தில் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திடும் விதத்தில் பாஜக-விற்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டி யது அவசியமாகும். இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மை,  ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்திட தாங்கள் எந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை காங்கிரஸ் மற்றும் சில மாநிலக் கட்சிகள் தெளிவு படுத்திட வேண்டும். இதில் சமரசப்போக்கு மேற்கொள்வது என்பது இத்தகைய கட்சிகள் நாளடைவில் காணாமல் போய்விடும் என்பதையே அனுபவம் நமக்குக் காட்டி யிருக்கிறது. இந்துத்துவா மதவெறியை மதச்சார்பின்மை யை எவ்வித சமரசமுமின்றி உயர்த்திப்பிடிப்பதன் மூலம் மட்டுமே எதிர்த்து முறியடித்திட முடியும்.

கேரளா முன்னுதாரணம்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் எவ்விதச் சமரசமுமின்றி மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிப்பதற்கும், அனைத்து  மக்களுக்கும் அவர்களின் சாதி, மத, இன பேதமின்றி யும், ஆண்-பெண் வித்தியாசமின்றியும், அனைவரையும்  எப்படிச் சமமாக மதித்து நடத்துவது என்பதற்கும் முன்னு தாரணமாகத் திகழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.  அதே சமயத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்கு ஆதரவான மாற்றுக் கொள்கையை  அமல்படுத்துவது  எப்படி என்பதற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் மனிதவளக் குறியீடுகளில் கேரளம் உயர்ந்து நிற்பதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி எழுப்பு வதற்கான முயற்சிகளை வலுப்படுத்திட, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்திட, இடது-ஜனநாயக முன்னணியை வலுப்படுத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டிருக்கிறது. இந்துத்துவா மதவெறிக்கு எதிராக,  விரிவான அளவில் மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த  முன்னணியைக் கட்டி எழுப்புவதன் மூலம், மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்திட வும், நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திடவும் கூட்டாக உறுதி பூண்டிட நாட்டுப்பற்று மிகுந்த அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

- தமிழில்:ச.வீரமணி