articles

img

போராடும் பெண்களைத் தாங்கிப் பிடிக்கட்டும் சமூகம்! - - ச.ஹேமலதா -

வெளிப்பாடு என்ற சிறுகதையில் எழுத்தாளர் அம்பை எழுதுகிறார் ““பாதுகாப்பும் ஒரு அடக்குமுறை தான். நீ வீட்டில் இருந்தால் உன்னை நான் காப்பாற்ற முடியும் வெளியே வந்து நான் சுவாசிக்கும் காற்றை நீ உள்ளெழுத்த உடனேயே அபாயம் உன்னைச் சூழ்கிறது”” என்று. இந்த சமுதாயம் பெண்ணை கட்டி வைத்திருக்கிறது. அதே கதையில் சமையலறையை கட்டி அழும் ஒரு பெண் ஒரு வருடத்திற்கு 7300 தோசைகள், 40 வருடங்களில் இரண்டு லட்சத்து 92 ஆயிரம் தோசைகள்; இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொறியல்கள், குழம்பு, எவ்வளவு முறை சோறு வடித்து இருப்பாள், எத்தனை ‘கிலோ அரிசி சமைத்து இருப்பாள்’ என்று அம்பை பேசுகிறார்.  1970களின் கடைசியில் எழுதப்பட்ட கதை இது. இந்த நிலை இன்னமும் பெரிதாக மாறிவிடவில்லை தானே ! மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணிகளில் ஆண்களை விடவும் பெண்களே சிறப்பாக பணி புரிவதாக ஒரு புள்ளி விவரம் சுட்டுகிறது. ஆனால் பெண் மேலாளர்களோ, பெண் நிர்வாக அதிகாரிகளோ ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளனர். குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்ற வரையறைகளுக்குள் இருப்பதால் இது போன்ற பணிகளில் பணி புரிய பெண்கள் முன்வர இயலாமல் உள்ள சூழலே இன்றளவும் நீடிக்கிறது.  பதவி உயர்வு போன்ற சூழல்களில் கூட வீட்டில் இருந்து சென்றபடி பணி புரிய உகந்த சூழலில் பணியமர்த்தப்படாவிடில் பதவி உயர்வை பெண் கள் சற்றும் யோசிக்காமல் உதறும் நிலை தொடர்ந்து வருகிறது. இது வெறுமனே பெண்கள் மட்டுமே தொடர்பான பிரச்சனை அல்ல என்பதையும் சமூகம் சார்ந்த சிக்கலாக உள்ளது என்பதையும் நாம் உள்வாங்கி அதை சரி செய்வதற்கான முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு பெண்ணின் கல்வி எவ்வாறு அவளது தலைமுறைக்கு பயன்படுவதாக மாறுகிறதோ, அதைப்போலவே அவளது பொருளாதார வளர்ச்சி, எதையும் எதிர் கொள்ளும் துணிவு, சிக்கல்களை கையாளும் நுண்ணறிவு அனைத்துமே அவளது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிவார்ந்த செயல்பாடுகளாகக் கடத்தப் படுகிறது. படித்ததோடு நில்லாமல் தன் படிப்பறிவை, பட்டறிவாக மாற்றிக்கொள்ள போராடும் பெண்களை இந்த சமூகம் தாங்கிப் பிடித்து வளர்த்து விட வேண்டும். அதுவே சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியாக மாறும்.