இப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து நிறையவே பேசப்படுகிறது. எதிர்க்க ட்சிகளின் பல்வேறு தலைவர்கள், ஒரு வரையொருவர் தொடர்ந்து சந்தித்து வருவதன் பின்ன ணியில் இத்தகைய பேச்சு சூடு பிடித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின்போது, அதானி குழுமத்தின் ஊழல்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அதன்மீது கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர்களை அமலாக்கத்துறையினரும், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தினரும் கைது செய்வதை எதிர்த்தும் 18 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஒன்றுபட்டுப் போர்க்குரல் எழுப்பிய பின்னணியில் இவ்வாறு ஒற்றுமைக்கான முயற்சிகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன.
அவசியத்தை உணர்ந்து...
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றம் ஒன்றில் மான நஷ்ட வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதன் காரணமாக, மக்களவை உறுப்பி னர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், இத்தகு ஒற்றுமைக்கான குரல் அனைவராலும் வெளிப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கைது செய்யப்படுவதைப் பார்ப்பவர் கள், தாங்களும் எதேச்சதிகார ஆட்சியின்கீழ் இது போன்று விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு, கைது செய்யப்படக்கூடும் என்று கருதத் தொடங்கி யிருப்பதன் காரணமாக, ஜனநாயகத்தைப் பாது காப்பதற்கான போராட்டத்தை அனைவரும் ஒன்று பட்டு நின்று, முனைப்புடன் முன்னெடுத்துச்செல்வது அவசியம் என்பதை உணரத் தொடங்கி இருக்கி றார்கள்.
எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்
ஆனாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அடைவதற்கான வழி குறித்து எண்ணற்ற அரசியல் விமர்சகர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் முன் மொழியப்படும் ஆலோசனைகளை ஆராயும்போது, அவை தெளிவான சிந்தனை இல்லாதிருப்பதையும், சில எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் இருப்பதையும் காட்டுகின்றன. இவர்கள் முன்வைத்திடும் மிகவும் எளிதான சிந்தனை என்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனை வரையும் ஒரே மேடையில் அமர வைத்து, அகில இந்திய எதிர்க்கட்சிகள் முன்னணியை உருவாக்கிட வேண்டும் என்பதாகும். மற்றொரு வீணான முயற்சி என்பது தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சி களின் சார்பிலும் ஒரே தலைவரை முன்னிறுத்துவது என்பதாகும். இவர்கள் கூறும் மற்றொரு யோசனை என்பது ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவாக இருக்கி றதோ அந்தக் கட்சி கூறும் கட்டளைகளுக்கு அங்கே யுள்ள இதர சிறிய அளவிலான எதிர்க்கட்சிகள், அது தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது அந்த மாநிலத்தில் உள்ள கட்சியாக இருந்தாலும் சரி, அது ஒத்துப்போக வேண்டும் என்பதாகும். இதன் மூலம் பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள்.
இந்த ஆலோசனைகள் அனைத்துமே ஸ்தல மட்டத்தில் உள்ள எதார்த்த நிலைமைகளுக்கு சம்பந்தம் இல்லாதவைகளாகும். எதிர்க்கட்சிகளின் பல்வேறு குணாம்சங்கள் மற்றும் சிக்கலான தன்மை களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததேயாகும்.
தவறான சிந்தனை...
முதலாவதாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கூட்டணி வடிவத்திலோ அல்லது அனைத்து எதிர்க் கட்சிகளின் முன்னணி என்ற பெயரிலோ அகில இந்திய அளவில் அமைத்திட முடியாது என்பது தெளிவான தாகும். அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக-விற்கு எதிராக ஒருவரை மட்டும் நிறுத்தினால் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்கிற குறுகிய தேர்தல் கண்ணோட்டத்திலிருந்து இத்தகு பிழையான சிந்தனை துளிர்விட்டிருக்கிறது. இது ஒரு வெற்று விருப்பமான சிந்தனையேயாகும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு, நாட்டில் தற்போது நம்முன் உள்ள தேசிய அளவிலான முக்கியமான பிரச்சனைகள் குறித்து - ஜனநாயகத்தின் மீது பல முனைகளிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப்பட்டி ருப்பது, அரசமைப்புச்சட்டத்தை அரித்து வீழ்த்திக் கொண்டிருப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து, மத்தியப் புலனாய்வு முகமைகளான அம லாக்கத்துறை மற்றும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ)ஆகியவற்றை ஏவுவது, கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப்புதைத்திடும் விதத்தில் மாநில அரசுகளின் உரிமைகள் மீது திட்டமிட்டு தாக்கு தல்கள் நடத்திக்கொண்டிருப்பது, கல்வியில் இந்துத் துவா சித்தாந்தத்தை நுழைத்துக்கொண்டிருப்பது மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக - ஓர் ஒன்றுபட்ட நிலைப் பாட்டை பிரதானமாக முன்னிறுத்திட வேண்டும்.
உயிர்நாடிப் பிரச்சனைகள்
இவை அனைத்தும் நாட்டின் எதிர்காலம் குறித்த மிகவும் அடிப்படையான மற்றும் உயிர்நாடியான பிரச்சனைகளாகும். இந்துத்துவா எதேச்சதிகாரத்தை எதிர்ப்பதிலும், ஜனநாயகம்-மதச்சார்பின்மை-கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கான போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் எந்த அள விற்கு எதிர்க்கட்சிகள் முன்வருகின்றன என்பதைப் பொறுத்தே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதித்துப் பார்த்திட முடியும். மேலும் பிரதமரும், ஒன்றிய அரசாங்கமும் நாட்டிற்குப் பதிலளிக்கக்கூடிய விஷயங்கள் மேலும் பல இருக்கின்றன. அதானி ஊழல் தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளி யான பின்னர் அது தொடர்பாக எவ்விதமான விவா தத்தையும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள முடியா மல் தடுத்து நின்றது, நாடாளுமன்றத்தில் அதானி யின் பெயரைக்கூட தன் உரைகளில் கூறாமல் நரேந்திர மோடி தவிர்த்தது, அதானி ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு மறுத்தது ஆகிய வற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக ளின் ஒற்றுமை ஏற்பட்டது. இதனை நாடாளுமன்றத் திற்கு வெளியேயும் கொண்டுசென்றாக வேண்டும்.
ஒற்றுமைக்கான சாத்தியம்
அதானி ஊழல் சம்பந்தமாக பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வைப்பது, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர், சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் தொடர்பாக வெளி யிட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையிலும் எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை உருவாக்கிட முடியும். இந்த சமயத்திலும்கூட, கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிராக மாநில உரிமைகள் மீது ஒன்றிய அர சாங்கம் ஏற்படுத்திவரும் தாக்குதல்களுக்கு எதிராக, பாஜக அல்லாத மாநில முதல் அமைச்சர்களின் கூட்டத்தை, நடத்திட முடியவில்லை. இது ஒன்றிய அர சாங்கத்திற்கு எதிராக அனைத்து பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் ஒற்றுமை யின்மை இருப்பதைக் காட்டுகிறது. ஜனநாயகம்-மதச்சார்பின்மை-கூட்டாட்சித் தத்து வம் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அடிப்படையில் முக்கியமான கொள்கைப் பிரச்சனைகள் மீது ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத்து எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டி எழுப்பினால் அது, இப்போ துள்ள ஒன்றிய அரசாங்கத்திற்கு எதிராக, ஒன்றுபட்ட மாற்றைச் சித்தரிப்பதற்கான ஓர் அடிப்படையான மாற்று நடவடிக்கையாக அமைந்திடும்.
எதார்த்தமான வழி...
இந்தத் திசைவழியில், மக்களின் வாழ்வாதா ரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கூட்டுப் பிரச்சாரங்கள், கூட்டுக் கிளர்ச்சி நடவடிக்கைகள் நடந்திட வேண்டும், நடத்திட வேண்டும். இத்தகைய அறைகூவல்களின்கீழ் பல கட்சிகளையும் கூட்டு மேடைகளின் மூலமாகவும், கூட்டு நடவடிக்கைகளின் மூலமாகவும் அணிதிரட்ட வேண்டும். எந்த மாநி லத்தில் இது சாத்தியம் இல்லையோ அங்கெல்லாம், இவற்றை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடலாம். இதுவே, எதார்த்தமான வழியாக இருந்திடும். ஏனெனில் சில கட்சிகள் அகில இந்திய அளவிலான அறைகூவலுக்கு செவிமடுக்கும் அதே சமயத்தில், தங்கள் மாநிலத் தில் அதனைக் கூட்டாக அமல்படுத்திட முன்வருவ தில்லை. மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மாநில அளவில் பாஜக-விற்கு எதிரான வாக்குகள், அதிகபட்ச அளவில் சிதைந்திடாமல் ஒருமுனைப் படுத்திட உதவக்கூடிய தேர்தல் உத்திகளாக அமைந் திடும். தற்போது தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களில் பாஜக-விற்கு எதிராகப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்ல, எதிர்க்கட்சிகளிடையே விரிவான அளவில் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது.
கூட்டு நடவடிக்கையும் நம்பகத்தன்மையும்
ஜனநாயகம்-மதச்சார்பின்மை-கூட்டாட்சித் தத்து வம் ஆகிய முக்கியமான பிரச்சனைகளில் எதிர்க்கட்சி கள் ஒன்றுபட்டு நிற்குமானால், மக்களின் பிரச்சனை கள் மீது கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கிடுமா னால், இது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மீதும் நம்ப கத்தன்மையை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். மக்கள், பாஜக-விற்கு மாற்றாக இதனைக் கருதத் தொடங்கிடுவார்கள். மக்களவைக்கான தேர்தல் நடை பெறும்போது, இத்தகைய எதிர்க்கட்சிகளின் ஒன்று பட்ட நடவடிக்கைகள் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உதவிடும். அதனால்தான், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்ப திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் சமயத்தில், அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனைகளுடன் ஒன்றுபட்டு நிற்கவும், தற்போதைய இந்துத்துவா மோடி அரசாங்கத்திற்கு எதிராக, மிகவும் தெளிவான விதத்தில், மாற்றுக் கொள்கையை முன்வைத்து, ஒன்று பட்ட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பாஜக- விற்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல், அதற்கு எதிராகப் போராடிவரும் எதிர்க்கட்சிகள் பக்கம் விழுவதற்கு, வாய்ப்பாக அமைந்திடும்.
ஏப்ரல் 19, 2023,
தமிழில் : ச.வீரமணி