articles

img

களத்துமேடு முதல் களப்போராட்டம் வரை - வீ.அமிர்தலிங்கம்

பெரும் நிலக்கிழார்களின் பண்ணையடிமைகளாய் மாட்டுத் தொழுவத்தில் அடைபட்டு, காடு கழனிகளில் உழைத்து  நிலப்பிரபுக்களின் குடும்பங்களை வளப்படுத்தும் அடிமைச் சமூகமாய் விவசாயத் தொழி லாளர்கள் வாழ்ந்தனர்.  அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பாக வயலுக்குச் சென்று இரவு திரும்பியதும் வயல்களை விட்டு வீடு திரும்பும் அடிமைகளாகவே வாழ்ந்தனர். வீடு நிலம் ஏதுமற்றவர்களாய், கேட்பதற்கு நாதியற்றவர் களாய், முழுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டவர்களாய் இருந்தனர். உடல்நிலை சரியில்லை  என்றாலும் ஆண்டைகளின் நிலத்தில் வந்து வேலை செய்தே தீர வேண்டும். திருமணம் உள்ளிட்ட காரியங்களை வயல் வேலை முடிந்தவுடன் இருள் சூழ்ந்த உடன் தான் ஆண்டைகளின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் வெளி யூருக்கு செல்ல முடியாது. குடும்பம் குடும்பமாய் ஆண்டைகளிடம்  அடைபட்டுக் கிடந்தார்கள்.  வேலை செய்ய மறுப்போர், எதிர்த்து கேள்வி கேட்போருக்கு சாணிப்பாலும், சவுக்கடியும்  மிராசுதார்கள் தண்டனையாக கொடுத்தார்கள். 

கொடுமை தாங்க முடியாமல் மயங்கி கீழே விழும் வரை மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள். கணவன் முன்னே மனைவியையும்,  மனைவி  முன்னால் கணவனையும் இவர்களுக்கு முன்னால் குழந்தைகளையும் நாயை அடிப்பது போல் அடித்தார்கள். கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து கடல் கடந்து சிலோனுக்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பி அவர்களை கட்டி வைத்து அடிப்பார்கள். நிலப்பிரபுக்கள்  தங்களுக்குள் விவசாய தொழிலாளர்களை பண்டமாற்றுப் பொருட்களைப் போல மாற்றிக் கொண்டார்கள். பண்ணையார்கள் வசிக்கும் தெருக்களில் நேரடியாக நடக்க முடியாது.  வயல்காட்டு பக்கமாக சென்று கொல்லைப்புறமாக பண்ணையார்  வீடுகளுக்கு போய் மாட்டுத்  தொழுவத்திலிருந்து கொண்டு வீட்டு வேலை களை செய்ய வேண்டும்.  தோளில் துண்டு போட முடியாது. மேல் சட்டை  போட முடியாது. பெண்கள் ரவிக்கை  அணிய முடியாது.  சாதிய ஒடுக்குமுறை  மிக மோசமாக இருந்தது.  தஞ்சை மாவட்டத்தின் அனைத்து கிராமத்தின் நிலைமையும் இப்படி தான் இருந்தது. 

களப்பால், மன்னார்குடி ஒப்பந்தங்கள்

சுரண்டல் அடிமை வாழ்க்கை முறை சாதியப் பாகுபாடு அனைத்தும் விடுதலை இந்தியாவிலும்  1952 வரை நீடித்தது. தோழர் பி.சீனி வாசராவ் தென்பரை கிராமத்திற்கு வரும்வரை நிலப் பிரபுத்துவம் கோலோச்சியது. 1943 முதல் 1952 வரை 10 ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்து விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பாய், சங்கமாய் செங்கொடியின் பின்னால் திரண்ட பின்பு தான் , 1944இல்  களப்பால் ஒப்பந்தம் போடப்பட்டு சவுக்கடிக்கும் சாணிப் பாலுக்கும் முடிவு  கட்டப்பட்டது.  தினக்கூலி 2 லிட்டர் நெல், அறுவடைக்கு கலத்திற்கு 3 லிட்டர் நெல்  கூலியாக கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக 1944இல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மன்னார்குடி ஒப்பந்தம்  உருவாக்கப்பட்டது. இதில் தான் அரசு முத்திரை பதித்த மரக்காலில் கூலி அளக்க வேண்டும் என்றும் தினக்கூலி 3 லிட்டர் நெல் தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னாளில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிபதி தீர்ப்பின்படி  31/2  லிட்டர் கூலி  உயர்வு பெறப்பட்டது.  28-10-1948இல் மாயூரம் ஒப்பந்தத்தில் ஆண்களுக்கு ஒரு மரக்காலும், பெண்களுக்கு முக்கால் மரக்காலும் கூலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

தஞ்சைக்கு மட்டும்...

1948இல் கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1953 இல் தான் தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்யப்பட்டது. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் விவசாய வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு குறைந்தபட்ச கூலி அறிவிக்க வேண்டும் என்ற போராட்டம் கீழ தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக நடைபெற்றது.  தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் தனி கூலியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூலம் தான் இத்தகைய போராட்டங்களை நடத்தி வந்தோம்.  இருப்பினும் 1956இல் தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கம் என்று விவசாயத் தொழிலாளர் களுக்கான அமைப்பை உருவாக்கி செயல்படுத்தினோம்.  கீழத் தஞ்சை  மாவட்டம் முழுவதும் கூலிக்கான போராட்டம், வேலை நிறுத்தம், ஊர்வலம்,  கோரிக்கை மாநாடுகள் என்று இடைவிடாது சங்கம் போராடியது ‌  அதற்கு பிறகு 28-11-1959இல் தான் தஞ்சை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்ச கூலி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.   உணவு, இருப்பிடம், வீட்டு வாடகை, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி,  மருத்துவம்,  உடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட கூலி அமைய வில்லை. அதற்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 

நிலச்சீர்திருத்தச் சட்டம்

உபரி நிலங்கள் மீட்கவும், குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்படு வதை தடுக்கவும், குடியிருப்பு மனைகளை உடமையாக்கவும், நிலக் குவியலை தடுக்கவும் 1961இல் நிலச்சீர்திருத்தத்துக்கான இயக்கம்  நடத்தப்பட்டது.  இதனால் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள்  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பயனாகத் தான்  1958 நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961இல் திருத்தம் செய்யப்பட்டு குத்தகை விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். விவசாய தொழிலாளர்கள் குடியிருப்பிலிருந்து அகற்றப்படுவது தடுக்கப்பட்டது.  இக் காலத்தில் தான் நிலப்பிரபுக்கள், அவர்களின் அடியாட்கள், ஆதிக்க சக்திகள், ஆளும் அரசாங்கத்தின் அடக்குமுறை கருவியான காவல்துறை, மாவட்ட நிர்வாகங்கள், சிறைத்துறை அனைத்தும் கூட்டு சேர்ந்து கொடுமைகள் இழைத்தனர். களப்பால் குப்பு,  வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்,  மணலூர் மணியம்மை, சாம்பவனோடை சிவராமன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தியாகம் செய்துதான் நிலப்பிரபுத்துவ கொடுமையிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டனர்.   தோழர்கள் பி.எஸ்.தனுஷ்கோடி, மனலி கந்தசாமி, கோ.வீரய்யன், பாரதிமோகன் நேரடியான களப் போராட்டத்தில் உருவான தலைவர்கள். இவர்களின் சமரசமற்ற  வர்க்க போராட்டங்கள் தான் விவசாய தொழிலாளர்களின் அடிமை முறையை ஒழித்தது.  கூலி உயர்வு கேட்டதற்காகவும், செங்கொடியை இறக்கிவிட்டு நெல் உற்பத்தியாளர்கள் சங்க கொடியை ஏற்றுவதற்கு மறுத்ததற்காகவும் கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் ராமையாவின் குடிசைக்குள் அடைக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்கள். கிராமம் முழுவதும் தீக்கு இரையாக்கப்பட்டது.  வெண்மணிக்கு பிறகு தான் பொதுச் சமூகங்களின் மனச்சாட்சி உலுக்கப்பட்டது. 

சட்டப்பூர்வ வேலைநேரம்

அதிகாலையில் வேலைக்கு சென்று, சூரியன் மறைந்து, இருள் கவ்விய நேரத்தில் தான் நிலத்தை விட்டு மேடேற முடியும்.  அழும் குழந்தைக்கு பால் தர வேண்டும் என்றால் கூட பண்ணையார் அல்லது  அவர்களின் மேஸ்திரி அனுமதித்தால் மட்டுமே பால் கொடுக்க முடியும்.  பால் கொடுக்க அனுமதிக்கப்படாத பெண்களுக்கு பால் கட்டிக்  கொண்டு காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவது, குழந்தைகள் சீரழிவது எதைப்பற்றியும் ஆதிக்க சக்திகள் கவலைப்பட வில்லை. இதற்கு எதிராக போராடியதால், 3-3-1976இல் உழவுக்கு 5 மணி நேரம், மற்ற வேலைகளுக்கு 7 மணி நேரம் வேலை என்பது விவ சாய வேலைகளுக்கான வேலை நேரம் என்பது சட்டப்பூர்வமானது.  இத்தகைய சூழலில் தான் நெருப்பாற்றில் நீந்திய விவசாயத் தொழிலாளர்களின் இயக்கம் 1981 மே 30_31இல் திருத்துறைப்பூண்டியில் மாநில சங்கமாய், முதல் மாநாடு மூலம் உருவெடுத்தது. 1987இல் தஞ்சையில் 2ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. 1992 ஏப்ரல் 8_9 தேதியில் திருச்சி லால்குடியில் 3வது மாநில மாநாடு நடைபெற்றது.  இந்த 10 ஆண்டுகளில் கூலி, வேலை, நிலம், உணவுக்கான போராட்டங்  களை நடத்திட மாநாடு தீர்மானங்கள் நிறைவேற்றி செயல்படுத்தியது.  1997 ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் 4ஆவது மாநில மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுவடை  எந்திரங்களை எதிர்த்துப் போராடவும் சமூக நலத் திட்டங்கள் அமலாக்கம் செய்யவும் வலி யுறுத்தி போராட மாநாடு முடிவெடுத்து வலுவான போராட்டங்களை திருச்சி, விழுப்புரம், கடலூர், நாகை உள்பட மாநிலம் முழுவதும் வீச்சாக நடை பெற்றது. 

கோலப்பன் குழு பரிந்துரை

இத்தகைய போராட்டம் காரணமாக தமிழ்நாடு அரசு  27_08_1997 ல் கோலப்பன் தலைமையில் குழு அமைத்தது நமது தலைவர்கள் கோ.வீரய்யன், எஸ்.திருநாவுக்கரசு இருவரும் கோலப்பன் குழுவை சந்தித்து தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்தும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சமூக நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கி அறிக்கை அளித்தனர். இந்த பின்னணியில் தான் தமிழ்நாடு அரசுக்கு கோலப்பன் குழு 44 சிபாரிசுகளை அறிக்கையாக தந்தது. கோலப்பன் குழு சிபாரிசுகளை அமலாக்க வேண்டும் விவசாய தொழிலாளர்களுக்கான நல வாரியம் உருவாக்கி சமூக நலத் திட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதற்குப் பிறகுதான் 28-10-1999  அன்று விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு வேலை நேரம் 6 மணி நேரமாகவும் பெண்களுக்கு வேலை  நேரம் 5 மணி நேரமாகவும் குறைத்து கூலியை உயர்த்தி அறிவிப்பு செய்தது.   2002 ஜூலை 20,21,22. கருரில் ஐந்தாவது மாநாடு வீட்டு மனை பட்டா, சமூகநலத் திட்டங்களையும் அமலாக்கக் கோரி போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. 

இக் காலத்தில் தான் 2006இல் விவசாயத் தொழிலாளர்களுக்கு தொழி லாளர்கள் நல வாரியத்தை கலைஞர் அரசு உருவாக்கி, கல்வி, திருமணம்,  ஓய்வூதியம்,  மருத்துவம், இறப்பு, விபத்து ஆகிய சமூக நல திட்டங்களை யும் அமலாக்க அறிவிப்பு செய்து செயல்படுத்தினர். பின்னாளில் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக அரசு நல வாரியத்தை முடக்கிபோட்டது. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் சமூகநலத் திட்டங்கள் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.  2007 ஜனவரி 6,7,8 நாகையில் கூடிய 6ஆவது மாநாடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 2010 ஏப்ரல் 15 16 தேதிகளில் வேலூரில் நடைபெற்ற ஏழாவது மாநாட்டில் பொதுவிநியோகத்தை பலப்படுத்துவதற்கான   போராட்டங்களை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியது.  2013 ஆம் ஆண்டு டிசம்பர் 19, 20, 21இல் தேனியில்  நடைபெற்ற  எட்டாவது மாநாடு நிலம் உணவு வேலை பாதுகாப்பு உத்திரவாதப்படுத்து வதற்கான போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்தது. 2018 மே  28, 29, 30 இல் திருவாரூரில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில  மாநாடு ஊரக வேலை திட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், பேரூராட்சி பகுதியில் வாழும் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டத்தை நிறைவேற்ற வைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியது.  இதன் விளைவாக 2021 செப்டம்பரில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   

நாசமாக்கும் நரேந்திர மோடி அரசு

மானியம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் சிதைத்துள்ளது.குறிப்பாக ஊரக வேலைத் திட்டத்தில் ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நான்கு சதவீத நிதியை 1.75 சதவீதமாக வெட்டி சுருக்கி கிராமப்புற ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.   திட்டத்தை ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடாக மாற்றியுள்ளது.திட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களை நாடாளுமன்ற திருத்தத்தின் மூலமாக செய்வதற்கு மாறாக தான் அடித்த மூப்பாக திட்டத்தினுடைய பல விதிகளை திருத்தி திட்டத்தை நாசப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில்  10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது.புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு சில சில புதிய மக்கள் நலத் திட்டங் களை நிறைவேற்றியது பாராட்டுக்குரிய அம்சமாகும். இருப்பினும் அறி விக்கப்பட்ட, திட்டங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் புதுக்கோட்டையில்  நடைபெறும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்  பத்தாவது மாநில மாநாடு  விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கான வாழ்வாதார கோரிக்கை களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க மேலும் வலுமிக்க அமைப்பாக உருவாக்குவதற்கான திட்டமிடலை செய்ய இருப்பதுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி நடைபெறுகிறது. *    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு வரும்  பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.வேலை திட்ட நாட்களை 200 நாட்களாகவும் தினக் கூலியை ரூபாய் 600 ஆகவும் உயர்த்தி  வழங்கிட வேண்டும்.

*தமிழ்நாடு அரசு அனைவருக்கும் ரூபாய் பத்து லட்சம் செலவில் வீடு  கட்டி தர வேண்டும். *விவசாயத் தொழிலாளர்களுக்கான தனித்துறையையும்- நல வாரியத்தையும்  அரசு அறிவிக்க வேண்டும். *தேர்தல் கால வாக்குறுதிப் படி ஊரக வேலைத்திட்ட நாட்களை 150 நாட்களாகவும்  உயர்த்திட வேண்டும். * மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி சுயமரியாதை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் தொழிலாளர்களை பாதுகாக்க தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் நிபந்தனையற்ற சிறு வணிக கடன் வழங்க வேண்டும். * பொதுவிநியோகத்தை பலப்படுத்தி அத்தியாவசியப் பண்டங்கள் அனைத்தையும்  இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன் புதுக்கோட்டையில் கூடுகிறோம். முதல் மாநாட்டில் 5 மாவட்டத்திலிருந்து செயல்பட துவங்கி, இன்று 38 மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 லட்சம்  உறுப்பினர்களோடு இயங்குகிறோம். அமைப்பை மேலும் மேம்படுத்திட, அடுத்தகட்ட கள நடவடிக்கைகளை  திட்டமிட உள்ளோம்.  பிப்ரவரி 4 மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பேரணி பொதுக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் முன்னாள் எம்பி.,  அகில இந்திய பொதுச் செயலாளர் பி வெங்கட், சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விதொச மாநிலத் தலைவர்கள்  வீ.அமிர்தலிங்கம், எம்.சின்னதுரை, எஸ். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனைத்து கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பங்கேற்போம்!