articles

வழியைத் தேடிடு! - கோவி.பால.முருகு

விலையாய்ப் பெற்றதா விடுதலை?-பலர்
    விலையாய்க் கொடுத்தனர் தன்தலை!
மலையுடன் மோதியேப் பெற்றனர்-போனது
    மயிரல்ல உயிரை விட்டனர்! 

தூக்குக் கயிற்றிலே தொங்கினார்-கடும்
    தோட்டா துளைத்திட ஏங்கினார்!
செக்கை இழுத்தே வீங்கினார்-உடல்
    சிதறிடக் கசையடி வாங்கினார்!

ஆண்டுகள் பலவாய்ச் சிறையிலே-அவர்
    ஆயுள் போனது குறைவிலே!
மாண்டவர் எண்ணோ கணக்கிலை!-அவர்
    மாபெரும் தியாகத் பெருமலை!

உப்பைக் காய்ச்சியே போரிட்டார்-அந்நியர்
    உரிமைத் துணிகளுக்குத் தீயிட்டார்!
கப்பல் ஓட்டியே களமிட்டார்!-அந்நியர்
    கட்டளை ஒத்துழைக்க மறுத்திட்டார்!

பரங்கியர் வெளியேறக் கூடினார்-அவர்
    பதறிட உணர்வால் பாடினார்!
கரங்களில் கொடியை ஏந்தினார்-அதைக்
    காத்திட இன்னுயிர் சிந்தினார்!

கண்ணீர் செந்நீர் பாய்ச்சினார்-மூச்சுக்
    காற்றை பறித்தே சாய்த்தினார்!
எண்ணரும் விடுதலைப் போரிட்டார்-அதால்
    எரிதழல்ப் பகையின் வேரிட்டார்!

பெற்ற விடுதலைக் காத்திடு!--நாட்டைப்
    பிணித்த மதவெறிப் போக்கிடு!
ஒற்றுமைக் காட்டியே போரிடு!-வீணர்
    ஒழிந்திடும் வழியைத் தேடிடு!