விலையாய்ப் பெற்றதா விடுதலை?-பலர்
விலையாய்க் கொடுத்தனர் தன்தலை!
மலையுடன் மோதியேப் பெற்றனர்-போனது
மயிரல்ல உயிரை விட்டனர்!
தூக்குக் கயிற்றிலே தொங்கினார்-கடும்
தோட்டா துளைத்திட ஏங்கினார்!
செக்கை இழுத்தே வீங்கினார்-உடல்
சிதறிடக் கசையடி வாங்கினார்!
ஆண்டுகள் பலவாய்ச் சிறையிலே-அவர்
ஆயுள் போனது குறைவிலே!
மாண்டவர் எண்ணோ கணக்கிலை!-அவர்
மாபெரும் தியாகத் பெருமலை!
உப்பைக் காய்ச்சியே போரிட்டார்-அந்நியர்
உரிமைத் துணிகளுக்குத் தீயிட்டார்!
கப்பல் ஓட்டியே களமிட்டார்!-அந்நியர்
கட்டளை ஒத்துழைக்க மறுத்திட்டார்!
பரங்கியர் வெளியேறக் கூடினார்-அவர்
பதறிட உணர்வால் பாடினார்!
கரங்களில் கொடியை ஏந்தினார்-அதைக்
காத்திட இன்னுயிர் சிந்தினார்!
கண்ணீர் செந்நீர் பாய்ச்சினார்-மூச்சுக்
காற்றை பறித்தே சாய்த்தினார்!
எண்ணரும் விடுதலைப் போரிட்டார்-அதால்
எரிதழல்ப் பகையின் வேரிட்டார்!
பெற்ற விடுதலைக் காத்திடு!--நாட்டைப்
பிணித்த மதவெறிப் போக்கிடு!
ஒற்றுமைக் காட்டியே போரிடு!-வீணர்
ஒழிந்திடும் வழியைத் தேடிடு!