இஸ்ரோ என்கிற ஒரு அமைப்பை தொடங்குவதற்கு வித்திட்டது டாக்டர் விக்ரம் ஏ.சாராபாயால் தொடங்கப்பட்ட இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் தான். அகமதாபாத்தில் உள்ள இந்த ஆய்வகம் தான் இஸ்ரோவின் தாய் நிறுவனமாகும். சந்திரயான்-3 திட்டத்தின் சாதனையில் ஏராளமானவர்கள் பங்கெடுத்துள்ளனர். அதில் ஒருவர் டாக்டர் எம்.சண்முகம். சந்திரயான் மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்களுக்கான அறிவியல் கருவிகளை உருவாக்குவதில் திட்ட துணை இயக்குநராக ஒரு குழுவை வழிநடத்தி வரும் இவர், உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல் கருவிகள் வடிவமைப்பு உட்பட ஆராய்ச்சிகளை பரந்த அளவில் மேற்கொண்டு வருகிறார். தற்போது, அவர் கோளவியல் கருவிகள் மேம்பாடு மற்றும் கிரக அறிவியல் திட்ட உதவித் தலைவராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக இஸ்ரோவின் பெங்களூரு, கேரளா, ஸ்ரீ ஹரிகோட்டா என்று பல மையங்களுக்கும் அடிக்கடி சென்று மாதக்கணக்கில் அங்கேயே தங்கி விடுவது வழக்கம். இவரது பெற்றோர் சொந்த கிராமத்தில் இருந்தாலும் அவரது மனைவி, மகள், மகன் அகமதாபாத்தில் தான் உள்ளனர். நேரம் கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். அவரது சகோதரி தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். ஒன்றிய அரசின் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே சந்திரயான்-1 திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரயான்-2, சந்திரயான் -3 ஆகிய மூன்று திட்டங்களிலும் பணியாற்றிய ஒரே நபர் இவர்தான். அதுமட்டுமின்றி, திட்ட இயக்குநர்கள் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா, வீரமுத்து வேல் என்கிற தமிழர்கள் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார்.
வேலூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு கிராமம் திகுவப்பள்ளி. காட்பாடி தாலுகாவில் உள்ள இந்த ஊர் தான் அவர் பிறந்து வளர்ந்தது. அப்பா முனுசாமி, அம்மா பவுனம்மாள். ஏழை விவசாயக் குடும்பம். சொந்த ஊரில் அன்றைக்கு இருந்த அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பை முடித்தார். அதற்குப் பிறகு, விண்ணம்பள்ளிக்கு தான் செல்ல வேண்டும். அதுவும் அரசாங்கப் பள்ளி தான், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அங்கேயே படித்தார். குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை. குடியாத்தம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்த பிறகு, வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து பொறியியல் பட்டத்தை முடித்தார். தற்போது வானியல், வானியற்பியல், சூரிய இயற்பியல், விண்வெளி மற்றும் வளிமண்டல அறிவியல், அணு, மூலக்கூறு மற்றும் ஒளியியல், இயற்பியல், புவி அறிவியல், கோள் அறிவியல் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் போன்ற பல தளங்களில் அதிநவீன ஆராய்ச்சிகளை நடத்தி வரும் நாட்டின் முதன்மையான அறிவியல் ஆய்வகங்களில் ஒன்றான அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக (பிஆர்எல்) விஞ்ஞானியாக உள்ளார். இஸ்ரோவின் செயற்கைக்கோள்களுக்கு அறிவியல் கருவிகளை உருவாக்கி வரும் டாக்டர் எம்.சண்முகம் உடன் ஒரு நேர்காணல்.
விண்வெளி ஆர்வமே!
சராசரி இளைஞர்களைப்போல நானும் அதிகம் சம்பாதித்து குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்கிற மனநிலையில் தனியார்துறை வேலையில் சேர்ந்தேன். விண்வெளி ஆராய்ச்சி குறித்த தேடல், உந்துதல் தான் என்னை விஞ்ஞானியாக மாற்றியது. சந்திரயான் மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலங் களுக்கு அறிவியல் கருவிகளை உருவாக்குவதில் ஒரு குழுவை வழிநடத்தி வரும் நான், சந்திரயான்-1 திட்டத்தில் உயர் ஆற்றல்களைக் கொண்ட எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் (High Energy X-ray Spectrometer (HEXS) கருவியை முதன் முதலாக வடிவமைத்துக் கொடுத்தேன். அதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் நாங்கள் வடிவமைத்து பொருத்தியிருக்கும் சோலார் எக்ஸ்ரே மானிட்டர் (Solar X-ray Monitor) கருவி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லாமல் நாங்கள் எவ்வாறு வடிவ மைத்து கொடுத்தோமோ அதே நிலையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தையும் இந்த ஆர்பிட்டர் தான் கண்காணித்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் வெற்றிகரமாக பயணித்தது. நிலவில் இருக்கும் கனிமங்கள் என்ன? எவ்வளவு இருக்கிறது? என்பதை துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு தானாக இயங்க கூடிய வகையில் ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Alpha Particle X-ray Spec trometer–APX) என்கிற அதிநவீன அறிவியல் கருவியை நாங்கள் வடிவமைத்து பொருத்தி இருக்கிறோம்.
திக்... திக்... நொடிகள்...!
சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பெங்களூரு மையத்திலிருந்து நேரில் பார்த்து கொண்டிருந்தபோது மெல்ல, மெல்ல 95 விழுக்காடு எட்டியதும், இதயத் துடிப்பு தானாகவே எகிறி விட்டது. நொடிக்கு நொடி, ஒவ்வொரு கட்டத்திலும் எங்கள் மனது பட்டாசு போன்று படபடவென்று வெடித்து கொண்டே இருந்தது. சிறிதும் தவறு கூட நடக்காது என்கிற நிலையை அடைந்து, நிலவின் தென் துருவத்தில் விண்கலம் கால் பதித்த அந்த தருணம் நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லைகளே கிடையாது. மேலும், நாங்கள் வடிவமைத்த கருவி ரோவர் எந்த பாதையில் பயணிக்கிறது? எங்கே செல்கிறது? என்பதை பெங்களூருவில் இருந்து நேரில் பார்த்தது வாழ்நாளில் மறக்கவே முடியாது. இது முதல் படிதான் விண்கலத்தில் இருந்து லேண்டர், ரோவர் இரண்டும் திட்டிட்டபடி பிரிந்ததும் நிலவின் தென்பரு வத்தில் 14 நாட்கள் முழுமையாக ஆய்வு செய்து படம் பிடித்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவுகள் பொது வெளியில் அறிவிக்கப்படும். அப்போது, நிலவு குறித்து இந்தியாவின் கண்டுபிடிப்புகளை பார்த்து உலகமே பாராட்டும். இது முதல் படி தான். விண்வெளி ஆராய்ச்சியில் பன்மடங்கு உயர் ஆற்றல் கொண்ட கருவிகளை வடிவமைப்பதில் நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம். சர்வதேச தரத்தையும் விஞ்சி இருப்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றியை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
மற்றும் ஒரு மைல் கல்...
நிலவுக்கு சந்திரயான் செயற்கைக்கோளை அனுப்பிய இஸ்ரோ, அதன் பின்னர் செவ்வாய் (மார்ஸ்) கிரகத்துக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை மிகக் குறைந்த செலவில் தயாரித்து அனுப்பியது. இரண்டு திட்டங்களும் வெற்றி அடைந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது ஆதித்யா எல் 1. இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமாகும். இதன் மூலம் ஆல்பா கதிர்கள் அல்லது ஆல்பா கதிர்வீச்சு என்று அழைக்கப்படும் ஆல்ஃபா, பீட்டா, காமா என்ற மூன்று வகையான கதிர்வீச்சுகளை (ஆல்பா துகள்கள்) முன்கூட்டியே கவனிப்பது, எந்தெந்த திசையில் இருந்து வருகிறது, சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்வது, சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளி யில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ள வெவ்வேறு திசைகளில் கண்காணிப்ப தற்கும் கருவிகளை மாதிரியாக உருவாக்கி அனுப்பி இருக்கிறோம். உலக நாடுகளே இந்த மிஷன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருக்கின்றன. அடுத்த கட்டமாக, நிலவு எப்படி உருவானது? எப்படி மாறியது? என்பது குறித்தும் நிலவில் கிடைக்கும் கனிமங் களை பூமிக்கு கொண்டு வருவது எப்படி? என்பதை நோக்கி யும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. நிலவில் ரோபோ மூலம் நடத்தும் ஆய்வுகளை காட்டிலும் மனிதர் களை கொண்டு ஆராய்ச்சி செய்வதுதான் துல்லியமாக இருக்கும். அதுவும் வெகு விரைவில் நடக்கும்.
எதிர்காலத் திட்டங்கள்...
பூமியின் சகோதரி கோள் என்று அழைக்கப்படும் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளி (வீனஸ்) கிரகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அதிகம். இதற்காக செயற்கைக்கோளை அனுப்பும் முயற்சி யில் ஈடுபட்டு வரும் இஸ்ரோ, பூமியில் காலநிலை மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்கு இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நிலவில் தரையிறங்கியது போன்று, செவ்வாய்க் கிரகத்திலும் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகளிலும் ஈடுபட்டு வரும் இஸ்ரோ, விண் கோள் களில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து அவற்றை ஆராய்ச்சி செய்யவும் உள்ளது. இந்த பணிகளுக்காக உயர் ஆற்றல் கொண்ட அதிநவீன கருவிகளை அதிகமாக வடிவ மைத்து செயற்கைக்கோள்களில் பொருத்தி அனுப்பும் பணி குழு தலைவராகவும் பணியாற்றி வருகிறேன் என்றார். இறை நம்பிக்கை கடவுள் பக்தி என்பதும் அவரவர் விருப்பம். தனிமனித செயல்பாடு. அறிவியல் ஆராய்ச்சிக் கும் அதற்கும் சம்பந்தமில்லை. விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள் அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒருபோதும் தொடர்பு படுத்தக் கூடாது என்று விரிவாகவும் விளக்கமாகவும் கூறினார்.
தாமதம் எனினும் முதன்மை...
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்திய விண்வெளித் திட்டம் சுமார் 20 ஆண்டுகால தாமதத்து டன் துவங்கினாலும், இன்று வெற்றிகரமாக செயல்படுத்தும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது இந்தியா. வான் மண்டலத்திற்கு உயரே செலுத்தப்படும் விண்கலங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் மூலம் பல கோள்களை நாம் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. பூமியைச் சுற்றிவரும் செயற்கை கோள்களிலி ருந்து விண்வெளியை மிகத்துல்லியமாக நம்மால் காண முடிகிறது. இந்த செயற்கை கோள்களின் உதவியால் மனித இனம், இந்த பிரபஞ்சத்தை நன்றாக அறியவும், பூமியிலுள்ள சாமானிய மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கவும் உதவுகின்றன. இத்தகைய உன்னத பணியை மேற்கொண்டு வரும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி விடை பெற்றோம்.