articles

உணவுப் பாதுகாப்பு: எதற்கும் தயாராவோம்! -வழக்கறிஞர் கா. கணேசன் ஆலோசகர், வான்முகில் அறக்கட்டளை

இன்றைய சூழலில் உலகெங்கிலும் தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 வாழ்வுரிமையை உத்தரவாதப்படுத்துகிறது. இவ்வாழ்வுரிமையில் உணவுக்கான உரிமையும் அடங்கும். இன்று (ஜுன் 07) உலகம் முழுவதும் “உலக உணவு பாதுகாப்பு தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வொரு ஆண்டும் இதே நாளினை வெவ்வேறு கருப்பொருளில் அனுசரிக்கிறது. இந்த ஆண்டு “உணவுப் பாதுகாப்பு: எதற்கும் தயாராவோம்” (Food Safety: Prepare for the unexpected) என்ற கருப்பொருளை அறிவித்திருக்கிறது.

நோய்களும் பாதிப்பும்

உலகெங்கிலும் உணவுப்பழக்கம் தொடர்பான சுமார் 600 மில்லியன் நோய்கள் ஏற்படுவதால், பாதுகாப்பற்ற உணவு தனிமனித ஆரோக்கியத்திற்கும், சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 4,20,000 மக்கள் சுகாதாரமற்ற, அசுத்தமான உணவை சாப்பிட்டு மரணிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உணவு மூலம் பரவும் நோய்த் தாக்குதலுக்குள்ளாகி 1,25,000 பேர் இறந்து போவதாகவும் கண்டறிந்துள்ளது. பாக்டீரியா ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் 1.3 மில்லியன் மக்கள் நேரடியாக இறந்து போகும் நிலை இருப்பதாக தெரிவிக்கிறது.

உணவு மூலம் பரவும் நோய்கள் பொதுவாக தொற்று அல்லது நச்சுத்தன்மை கொண்டவையாக இருக்கிறது. பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது இரசாயன பொருட்கள், அசுத்தமான உணவு அல்லது தண்ணீரின் மூலம் நம் உடலுக்குள் நுழைவதால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. உணவு மூலம் பரவும் நோய்கள் தனிநபர்களை பாதிப்பதோடு நிற்காமல், சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் தடுக்கின்றன. இவை தேசிய பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. உணவு வர்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது. இது உலகளவில் மொத்த வருடாந்திர வர்த்தகத்தில் தோராயமாக 10% என கணக்கிடப்படுகிறது. பாதுகாப்பான உணவு என்பது சிறந்த ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, வர்த்தகம் மற்றும் ஒவ்வொரு நாட்டின் சர்வதேச நற்பெயருக்கும் முக்கியமானதாகும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 என்ற புதிய சட்டம் 2011 முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த “உணவுக் கலப்படத் தடைச்சட்டம் 1954” (Prevention of Food Adulteration Act 1954) உள்ளிட்ட எட்டு விதமான சட்டங்களுக்கு மாற்றாக ஒன்றிய அரசினால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய அம்சம், உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரங்களை வகுத்து, அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றை வரைமுறைப்படுத்துவதும், இது தொடர்பான பிரச்சனைகளை அணுகுவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை நிறுவுவதுமே  யாகும். ஆனால், நடைமுறையில் பெருகிவரும் நகரமய மாக்கல், பெருகி வரும் உணவு நிறுவனங்களுக்கு ஏற்ப தொடர் கண்காணிப்பு நடைமுறையும், பரிசோதனைகளும் இல்லா நிலையில் உணவுப் பாதுகாப்பின் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.

உலக உணவுப் பாதுகாப்பு நாள்

உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு பங்களிக்கும், உணவினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், அதனைக் கண்டறிந்து நிர்வகிக்கவும், கவனத்தை ஈர்க்கவும், நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே ஜுன் 7 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் “உலக உணவுப் பாதுகாப்பு நாள்” அனுசரிக்கப்படுகிறது. 

நம் அனைவரின் கடமை

ஐக்கிய நாடுகள் அவை “உணவு பாதுகாப்பு என்பது நம் அனைவரின் கடமை”  (Food safety is everyone’s business) என அறிவித்திருக்கிறது. உணவுப்  பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற வேண்டும். உணவுப் பாதுகாப்பிலும், அதன் தரத்தை  உறுதிப்படுத்துவதிலும் ஆட்சியாளர்கள், அரசு  அலுவலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், நுகர்வோர் என அனை வருக்கும் பொறுப்புண்டு. தெருவோரக் கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை செய்யும் தொழிலில் சுயநேர்மை இருக்க வேண்டும். அறநெறி தாங்கி செயலாற்றும் உரிமையாளர்களாக இவர்கள் மாற வேண்டும். இதுவே நம் தட்டில் உள்ள உணவு பாதுகாப்பானதாகவே இருக்கும் என்பதை உறுதி செய்ய ஒரே வழி.