around-world

img

உரத்த குரலில் பேசினால் உயிரினங்கள் அழிந்து போய்விடுமா?

சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஒலி மாசு மிக ஆபத்தான ஆனால் மனிதன் இன்றும் அதிகம் உணராத ஆரோக்கியப் பிரச்சனை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நகரப்பகுதியில் இன்று நாம் கேட்கும் மிகக் குறைந்த ஒலி கூட இதய நோய், உடல் ஒருங்கிணைப்பு ஆற்றல் குறைபாடு, வளர்ச்சி தாமதம் மற்றும் டிமென்சியா வகை மறதி நோயை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் மட்டும் இல்லாமல் எல்லா உயிரினங்களும் ஒலி மாசினால் பாதிக்கப்படுகின்றன என்று இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களை விட மற்ற உயிரினங்கள் ஒலி உணர் திறன் அதிகம் உள்ளவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. நிலப்பகுதியை விட கடல்வாழ் உயிரினங்களையே ஒலி மாசு மிக மோசமாக பாதிக்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் ஒலியின் மூலமே பார்க்கின்றன. உணர்கின்றன. ஒளியை விட வேகமாக கடல் ஆழத்திற்குப் பயணம் செய்கின்றன. திமிங்கலங்கள் இரையைக் கண்டறிய, வழியறிய, தகவல் தொடர்பு செய்ய மற்றும் இணை சேர ஒலியையே பயன்படுத்துகின்றன.
கடலடிச் சோதனைகள்...
ஆனால் ஒலி மாசு எல்லா கடல்வாழ் உயிரினங்களையும் பாதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தாமதப்படுத்தப்படும் வளர்ச்சி, தடுக்கப்படும் இனப்பெருக்கம், நீடித்த வளர்ச்சி, வழி மாறிப்போகும் வலசைப் பாதைகள், அதிதீவிர ஒலி எல்லாம் சேர்ந்து உயிரினங்களைக் கொல்கின்றன. ஒரு மைல் தூரத்தில் நிலநடுக்க ஆய்விற்காக கடலில் நடத்தப்படும் வெடிகுண்டு ஓசைகூட கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியின் அடிப்படையாக இருக்கும் விலங்கு மிதவை (Zoo plankton) உயிரினங்களை கொன்றுவிடுகிறது. படகுகளின் இயந்திர ஓசை மீன்களின் கருமுட்டை களை பாதிக்கிறது. மனிதன் எழுப்பும் ஓசை கூட குட்டிமீன்களைக் கருச்சிதைவடையச்செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நீர்வாழ் தாவரங்கள் ஒலியை கேட்கும் திறனுடையவை. நிலத்தில் இருக்கும் காடுகள் போலவே கடற்புற்கள் கார்பனை உறிஞ்சும் தொட்டிகளாக (Carbon sinks) செயல்படுகின்றன. இதன் மூலம் இவை பூமியின் காலநிலையை நிலைப்படுத்த பெரும் பங்கு வகிக்கின்றன. ஒருகாலத்தில் உலகக் கடலோரப்பகுதிகளில் கடல் புல்வெளிகள் நிறைந்திருந்தன. இவை கடல்வாழ் உயிரிகளுக்கு உணவளித்தன. வசிப்பிடமாக அமைந்தன. மண் அரிப்பைத் தடுத்தன. ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவின. கடல் தரையை நிலைப்படுத்தி மாசுகளை வடிகட்டின. பசிபிக் பெருங்கடல் தீவுகளில் இருக்கும் இவை பெரியவை. பல மருந்துகளின் கருவூலமாகத் திகழ்ந்தன. வேட்டையாடுதலுக்கான இடமாக இருந்தன. நோய்களைக் குணப்படுத்தும் இயற்கையின் சிகிச்சைமையங்களாக இருந்தன.
ஓசை கேட்டால் மரணம்?
பாசிடோனியேசி ஓஷியானிகா (Posidoniaceae oceanica) என்ற உலகின் மிகப்பெரிய கடல் புல்வெளி காலனி மத்திய தரைக்கடலுக்கு அப்பால் ஐபிஸா (Ibiza) என்ற இடத்தில் உள்ளது. 200,000 ஆண்டு வயதை நெருங்கி வரும் இதுவே இன்று பூமியில் உள்ள மிக பழமையான உயிரினம். கடந்த சில பத்தாண்டுகளாக அமேசான் காடுகள் அளவிற்கு இருந்த கடற்புல்வெளிகள் அழிக்கப்பட்டுவிட்டன. காலநிலை மாற்றம், மாசு, படகுத்துறைகள், கடற்சுவர் மற்றும் துறைமுக நிர்மானம், குடி நீரை கடல்நீரில் இருந்து பிரித்தெடுக்கும் நிலையங்கள் வெளியேற்றும் உவர்த்தன்மை அதிகம் உடைய நீர் போன்றவை இதற்குக் காரணம். இந்த பட்டியலில் ஒலி மாசையும் சேர்க்கவேண்டும் என்று இது பற்றி ஆராய்ந்த கேட்டோலோனியா (Catolonia)பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வாளர்கள் மத்திய தரைக்கடல் புற்களை நிலநடுக்க சோதனைக்கான குண்டை வெடிக்கச்செய்து ஓசை ஏற்படுத்தி ஆராய்ந்தனர். அவற்றில் காணப்படும் ஊட்ட சத்துகளை உறிஞ்ச உதவும் பூஞ்சைகள் (symbiotic fungi) பாதிக்கப்பட்டதால் புற்கள் மோசமாக சேதமடைந்தன.   தாவரங்கள் மட்டும் இல்லை. ஒலியைக் கேட்க எந்த வசதியும் இல்லாத உயிரினங்கள் கூட ஒலிமாசினால் பாதிப்படைகின்றன. குறைந்த வளர்ச்சியுடைய கடல்வாழ் தாவரங்களில் உள்ள அமிலோப்ளாஸ்ட் (amyloplasts)என்ற உறுப்பு ஒலி அதிர்வுகளை உணர்கின்றன. இவை உணவு சேகரிக்க, ஈர்ப்பு விசைக்கேற்ப வேர்களை கடலடித் தரையில் ஊன்றி வளர உதவுகின்றன. இந்த நுண் உறுப்புகள் நீராளி ஆக்டோபஸ் (Octopus) மற்றும் இரால்களில் ஸ்டேட்டோசிஸ்ட் (statocyst)என்று அழைக்கப்படும் உறுப்புகள் போன்றவை. ஸ்டேட்டோசிஸ்ட்கள் மூலம் இந்த உயிரினங்கள் நீரில் ஏற்படும் மிக நுண்ணிய ஒலி மற்றும் நுண் அதிர்வுகளை கேட்கமுடியும். நீராளியில் இவ்வுறுப்புகள் அவற்றின் தலை மற்றும் கைகளில் படுக்கைவாட்டு வரிசையில் அமைந்துள்ளன. இவற்றின் உதவியாலேயே காதுகள் இல்லாமல் இவை குறைவான ஒளி இருக்கும் ஆழ்கடல் பகுதியிலும் இரை இருக்குமிடத்தையும் எதிரி இருக்குமிடத்தையும் துல்லியமாக அறிந்துகொள்கின்றன. இவை கைகள் மூலம் கேட்கின்றன.
நீங்கள் பேசுவதை தாவரங்கள் கேட்கின்றன
இதுபோலவே தாவரங்கள் அவற்றின் உடல் மூலம் ஒலிகளைக் கேட்கின்றன. இத்திறன் இருள் நிறைந்த கடலின் ஆழமான பகுதியில் வாழ்வதற்கேற்றவாறு பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் கடல் மாசடைவதால் இந்த திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. கடல் நீருக்கு அடியில் எழுப்பப்படும் பெரிய ஓசைகள் இவற்றின் இத்திறனை சேதப்படுத்துகின்றன அல்லது அழித்துவிடுகின்றன. இந்த பாதிப்புகள் இதைவிட குறைவான அளவில் நிலத்தில் ஏற்படும்போது தரைவாழ் உயிரினங்களின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது. பெரும் ஓசையுடன் ஒரு சைரன் ஒலி முழங்குவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த ஓசை உங்களை செவிடாக்கிவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செரிமானத்தைப் பாதிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். குழப்பத்தில் ஆழ்த்தி உங்களை நடக்க முடியாமல் செய்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். முன்னால் உள்ள வழி எது என்று தெரியாத அளவிற்கு ஒலி மாசு உங்களை பாதித்துவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் பெருகிவரும் கடல் ஓசைகளால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் இன்றைய ஆபத்து. பட்டென்று ஒரு இடத்தில் ஏற்படும் பெரும் ஓசை இந்த உயிரினங்களை செயலற்றதாக்குகிறது. சேதப்படுத்துகிறது. கொல்கிறது.
ஒலி ஓசையாகும்போது
இந்த கண்டுபிடிப்பு நமது கடல்கள் இன்று சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. கரைக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் கடலடி சுரங்க நிர்மானம், எண்ணெய், வாயு, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைப்புகளின் கட்டுமானம், கடல் போக்குவரத்து போன்றவை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இந்த வகை மாசிற்கு குறைவான முக்கியத்துவமே தரப்படுகிறது. கடலில் ஏற்படுத்தப்படும் ஒலியின் அளவு பற்றி சர்வதேச வரையறைகள் எவையும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் இது பற்றிய ஆய்வுகள் கடல்சார் தொழிற்துறை, கப்பல் போக்குவரத்து போன்றவற்றால் ஏற்படும் ஒலிமாசைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக நீரியல் மேலாண்மைப் பிரிவு இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு நம்மை விலங்குகள் மற்றும் தாவரங்களின் உலகிற்கு நெருக்கமானவர்களாக்குகிறது என்பதைப் பற்றி எடுத்துக்கூறும் “வாழ்க்கையின் ஓசைகள்” (Sounds ofLife) என்ற நூலின் ஆசிரியருமான கரண் பேக்கர் (Karen Bakker) கூறுகிறார். இயற்கை படைத்த ஒலி என்பது ஒரு அற்புத ஆற்றல். ஆனால் அதை முறைப்படி பயன்படுத்தாவிட்டால் அதனால் அழியப்போவது கடல்வாழ் உயிரினங்கள் மட்டும் இல்லை. மனிதகுலமும்தான் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.