காரகாஸ், நவ.16- உலகில் பெட்ரோலியம் அதிகமாக இருக்கும் நாடுகளான வெனிசுலாவும், ஈரானும் இணைந்து தங்கள் மேல் சட்டவிரோதமாக விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தடைகளை உடைக்க முடிவு செய்துள்ளன.
ஓபெக் (பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) நாடுகளில் வெனிசுலாவும், ஈரானும் முக்கியமான உறுப்பினர்களாவர். உலகிலேயே மிக அதிகமான பெட்ரோலிய இருப்ப வெனிசுலாவில்தான் உள்ளது. ஆனால், அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் சிக்கல்கள் உள்ளன. அதோடு தனது உற்பத்தி மற்றும் சுத்திகரிப்புப் பணிகளை செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியமும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
ஈரான் மீதும் அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்திருக்கிறது. கிட்டத்தட்ட வெனிசுலாவும், ஈரானும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் இந்த இரு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்திருக்கின்றன. அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியான ஒருங்கிணைப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கு வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி சாவேஸ் அடித்தளம் அமைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கு வந்த நிகோலஸ் மதுரோ, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
ஜூன் 2022ல் இரு நாடுகளும் ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத்திட்டன. 20 ஆண்டுகளுக்கான இந்தத் திட்டத்தில் வெனிசுலாவின் சுத்திகரிப்பு நிலையங்களைப் பராமரிக்கும் பணிக்கு ஈரான் உதவி செய்யும் அம்சமும் உள்ளது. வெனிசுலாவிற்கு நான்கு எண்ணெய் வாகனங்களைத் தரவும் ஈரான் முன்வந்திருக்கிறது. வாராந்திர விமானப் பயணங்களும் தொடங்கியுள்ளன. இரு தலைநகரங்களுக்கிடையில் தொடங்கப்பட்டுள்ள இந்த விமானப் பயணம் நல்ல முறையில் இயங்குவதால் கூடுதல் விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப் போகிறார்கள்.
எண்ணெய்க் கப்பல்களையும் வெனிசுலாவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெட் நிறுவனத்தோடு வெனிசுலா உடன்பாடு போட்டிருந்தது. உக்ரைன் நெருக்கடியால் அமெரிக்கப் பகுதியில் ரோஸ்நெட் நிறுவனத்தை இயங்க விடாமல் அமெரிக்கா செய்து விட்டது. இதனால் ஈரானுடனான உடன்பாட்டில் வெனிசுலா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பெட்ரோலியப் பொருட்களையும் ஈரான் மூலமாக வர்த்தகம் செய்யப் போகிறார்கள். இதற்கான பெரிய திட்டங்களை உருவாக்கி அமெரிக்காவின் தடைகளை உடைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுப் பொருளாதார ஆணையம்
வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஒரு கூட்டுப் பொருளாதார ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. வெனிசுலாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோன் வேலஸ்குவேஸ் தலைமையில் ஒரு குழு ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதந்தரமாக வாழ வேண்டும் என்ற எங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் பெரும் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். பெரும் சவால்களும் உள்ளன. இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது மற்றும் பரஸ்பர உதவி ஆகியவை கனவுகளை நனவாக்க உதவும்" என்றார்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயிரம் கார்கள் வெனிசுலாவில் இறக்குமதியாகியுள்ளது. மேலும் வாகனங்களை வாங்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் ஈரான் மூலமாக ஆசிய நாடுகளுடனான வர்த்தகம் என்று பல முனைகளில் வெனிசுலா திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவோ, சீனா-ரஷ்யா-கியூபா-வெனிசுலா-ஈரான் என்ற அச்சு உருவாவதாகக் கூறியுள்ளது.