காரகாஸ், அக்.29- வீடில்லாத குடிமக்கள் வெனிசுலாவில் இருக்கக்கூடாது என்ற அம்சத்தை முன்வைத்து வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி அரசு இதுவரையில் 42 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. நிர்ணயித்த இலக்கை முன்கூட்டியே அடைந்து விடுவோம் என்று அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. 42 லட்சமாவது வீட்டை வழங்கும் நிகழ்ச்சியில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "பெருமழை பெய்தபோது ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். அவர்களுக்கு மீண்டும் வீடுகளைக் கட்டித் தருவது என்ற திட்டமாகத்தான் இது உருவானது. ஆனால், தற்போது வீடில்லாமல் இருந்தவர்களும் பயனாளிகளாக இணைக்கப்பட்டனர். படுமோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த பலரும் தற்போது அரசு கட்டிக்கொடுத்துள்ள நல்ல வீடுகளில் குடியேறியிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "புரட்சியின் இலக்குகளில் வீடில்லாதோருக்கு வீடுகளை வழங்கும் திட்டம்தான் மிகவும் முக்கியமானதாகும். நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ, மிகவும் தேவையோடு இருக்கும் குடும்பங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் தந்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கையை யாரும் இழந்துவிட வேண்டாம். கனவுகளை நிறைவேற்றும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம். 50 லட்சம் வீடுகள் என்ற இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.