உக்ரைனைத் தங்கள் அடிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் திட்டம் நிறைவேறக்கூடாது என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரைன் பிரச்சனை பற்றி அக்கட்சியின் தலைவர் கென்னடி சுகானோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வார்சா உடன்பாடு தகர்ந்த பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன என்பது தெரிந்த ஒன்றாகும். யூகோஸ்லேவியாவை அழித்ததில் அமெரிக்காவின் மோசமான உருவத்தைப் பார்க்க முடிந்தது. அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் உக்ரைனை அடிமையாக்க நினைக்கிறார்கள். அந்தத் திட்டம் நிறைவேறக்கூடாது.
கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதேவேளையில், உக்ரைன் மக்களின் நலன்களோடும் அப்பட்டமாக முரண்படுகிறது. சர்வதேச அளவிலான போட்டியில் எப்படியாவது முன்னணியில் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. வாஷிங்டனின் கொள்கை பற்றி உலக மக்கள் அறிந்திருக்க வேண்டும். உலகம் முழுவதும் போருக்கு எதிரான இயக்கங்கள் தந்த அனுபவங்களை நினைவு கொள்ள வேண்டும்.
உக்ரைனில் உள்ள கொள்கைகள் அங்குள்ள தேசிய வெறியேற்றும் அமைப்புகளால் முடிவு செய்யப்படுகின்றன. உக்ரைன் மக்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது அதிதீவிரக் கொள்கைகளைத் திணிக்கிறார்கள். இதற்குப் பணிந்து போன செலன்ஸ்கி, தன்னை ஜனாதிபதியாகத் தேர்வு செய்த மக்களின் நலன்களைக் காவு கொடுத்து விட்டார். டான்பாசில் அமைதி மற்றும் அண்டை நாடான ரஷ்யாவுடன் நல்லுறவு என்பதையே உக்ரைன் மக்கள் விரும்பினார்கள். இரண்டு விஷயங்களிலும் சக குடிமக்களை செலன்ஸ்கி ஏமாற்றிவிட்டார்.
இந்த சூழலில் டான்பாஸ் மக்களைப் பாதுகாக்க ரஷ்யா ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அகதிகளுக்கும், லுகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் குடியரசுகளின் பொது மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அனைத்து உதவிகள் மற்றும் ஆதரவைத் தர வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான உத்தரவாதம் சோசலிசம், சமூக முன்னேற்றம் மற்றும் சமூக நீதியின் பாதையில்தான் என்பதில் கட்சி உறுதியாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.