world

img

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

மாஸ்கோ, ஆக.21- ஆகஸ்ட் 10 அன்று ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்பட்ட லூனா-25 என்ற விண்கலம் கட்டுப்பாடற்று சுழன்று நிலவின் மேற்பரப்பில் மோதியதாக ஆகஸ்ட் 20 அன்று அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளியே படாத ஆழமான பள்ளங்களில் உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற தனிமங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இவ்விண்கலன் ஆகஸ்ட் 21 அன்று தரையிறங்கும் எனவும்  நிலவின் தென் துருவத்தில் இறங்கும் முதல் விண்கலம் என்ற பெயரை தக்கவைக்க இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  மேலும் உறை நீர் மற்றும் தனிமங்கள் இருப்பதை கண்டறியும் பட்சத்தில் அதில் இருந்து ஆக்சிஜன், ராக்கெட் எரிபொருள் தயாரிக்க முடியும் என்றும் அவற்றின் மூலம் விண்வெளித்துறையில் தனது இருப்பை மீண்டும் ரஷ்யாவால் நிலை நாட்ட முடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது 1976 வரை நிலவை ஆய்வு செய்ய லூனா என்ற பெயரில் தொடர்ந்து 24 விண்கலங்களை நிலவிற்கு வெற்றிகரமாக அனுப்பி நிலவு குறித்தான ஆய்விற்கு பாதை அமைத்து வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. சோவியத் ஒன்றியம் தகர்வுக்குபின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனது வெற்றியை நிலைநாட்ட ரஷ்யா முயற்சித்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து பொருளாதாரத் தடைகளால் நாட்டின் விண்வெளித் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் விண்வெளியில் அதன் தொடர்ச்சியான திறன்களை நிரூபிக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. துவக்கத்தில் ஒரு சிறிய நிலவு ரோவரை லூனா-25 சுமந்து செல்வதாக இருந்தது. ஆனால், எடையை குறைப்பதற்காக அந்த யோசனை கைவிடப்பட்டது.  இந்நிலையில் ‘‘அசாதாரண சூழ்நிலையின் காரணமாக’’ ஆகஸ்ட் 19 அன்று லூனா-25 உடனான தொடர்பை இழந்ததாக ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. லூனா-25 விண்கலம் தொடர்பை இழந்தது என்றும் சுற்றுவட்டப்பாதையில் கட்டுப்பாடில்லாமால் சுழன்று நிலவின் மேற்பரப்பில் மோதி விட்டது எனவும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  விண்வெளித்துறையில் ரஷ்யாவை வல்லரசாக மாற்ற முக்கியமான திட்டமாக லூனா-25 இருந்தது. இதுவரை சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களை வெற்றிகரமாக தரை இறக்கி உள்ளன. 

இதுவரை நிலவிற்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் நிலவின் மத்திய ரேகைக்கு அருகில் மட்டுமே தரையிறங்கின. ஏனெனில் அங்கு விண்கலம் செயல்படத் தேவையான பிற உபகரணங்கள் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகின்றன. மேலும் அப்பகுதியில் இரவு நேரத்திலும் வெளிச்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தரையிறங்குவது எளிதாக இருந்தது. நிலவின் சுழல் அச்சு சூரியனுக்கு கிட்டத்தட்ட சரியான கோணத்தில் இருக்கிறது. எனவே துருவப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் பட்டாலும் அங்குள்ள பள்ளங்களின் ஆழத்தை அடைய முடியாது. இதனால், நிலவின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்கள் சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாமல் மிக குளிர்ந்த நிலையில் உள்ளன. அத்தகைய இடங்களில் தரையிறங்குவது மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவது மிகவும் கடினமானது. தற்போது லூனா-25 நிலவில் மோதியதற்கு நிலவின் இறுதி வட்டப்பாதையை அடைந்த பிறகு கொடுக்கப்பட்ட அதிக உந்துவிசையே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.