world

img

எண்ணெய் விலைக்கு கட்டுப்பாடு: ரஷ்யா கடும் எதிர்ப்பு

பிரஸ்ஸல்ஸ், டிச.5- ரஷ்யாவின் வருமானத்தைக் குறைப்பதற்காக அந்நாட்டுக் கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 60 அமெரிக்கா டாலர் என்ற விலையை ஜி7 நாடுகள் நிர்ணயித்திருப்பதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன. உக்ரைன் மட்டுமில்லாமல், ரஷ்யாவின் எரிபொருளை நம்பியிருந்த அனைத்து ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. எரிபொருள் விலை குறையாவிட்டால் மக்களின் கொந்தளிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இதனால், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தி விட வேண்டும் என்று ஜி7 நாடுகள் முடிவெடுத்தன. இதனால் ரஷ்யாவின் வருமானத்தையும் குறைத்து விட முடியும் என்று நம்புகிறார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரப்போகிறது. வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான தூதர் மிக்கைல் உலியானோவ், "இந்த முடிவு படுமோசமானது என்பதை பல நாடுகள் பின்னாளில் ஒப்புக் கொள்ளும். இந்த ஆண்டு முதல், ரஷ்யாவின் எண்ணெய் இல்லாமல் ஐரோப்பா இருக்கும்" என்கிறார்.

இத்தகைய முடிவை ரஷ்யா எதிர்பார்த்தே இருந்தது. அதனால், இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுடன் தனது தொடர்பை வலுப்படுத்திக் கொண்டது. குறிப்பாக, இந்தியாவும், சீனாவும் இந்த விலைக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 85 அமெரிக்க டாலர் என்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.