மாலே, மே 4- தென் ஆசிய நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாலத்தீவில் வெப்பமயமாதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மாலத்தீவுகளில் சுமார் 1,200 தீவுகள் உள்ளன. இயற்கை சீற்றம் என்பது ஒவ்வொரு நாளும் மக்களால் பேசப்பட்டு வரும் பொருளாக இருக்கிறது. கடல் மட்டம் உயர்வதால் சில தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இயற்கை சீற்றங்களால் திடீர், திடீரென்று மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தீவுகளாக இருப்பதால் நிவாரண உதவிகள் உடனடியாகக் கொண்டு சேர்க்கப்படுவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. வெப்பமயமாதல் உலகளாவிய நெருக்கடி என்றாலும், பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரணத்தைத் தருவதில் மாலத்தீவுகள் பின்தங்கியே இருக்கிறது.
மாலத்தீவு சந்திக்கும் இரண்டாவது பிரச்சனையாக, சர்வதேச அளவில் இயங்கும் மத ரீதியான தீவிரவாதக் குழுக்களுக்கு இங்கிருந்து ஏராளமானோர் அனுப்பப்படுவதேயாகும். டிசம்பர் 2019 கணக்குப்படி தீவிரமான இயக்கமான ஐ.எஸ். அமைப்பில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் மாலத்தீவுகளில் இருந்து இணைந்து செயல்படுகிறார்கள். இராக் மற்றும் சிரியாவில் உள்ள போர் மண்டலங்களுக்கு செல்வதற்கு 423 பேர் முயற்சித்திருக்கிறார்கள். இவர்களில் 173 பேர் இந்த இரண்டில் ஏதாவது ஒரு போர் மண்டலத்திற்கு சென்றடைவதில் வெற்றி பெற்றுள்ளனர். மாலத்தீவின் மக்கள் தொகை 5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். விகிதாச்சாரப்படி மக்கள்தொகையோ ஒப்பிட்டுப் பார்த்தால், அதிகமான அளவில் தீவிரவாத அமைப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை மாலத்தீவில்தான் அதிகமாக இருக்கும். பெருந்தொற்றால் மாலத்தீவின் சுற்றுலாத்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி சுற்றுலாத்துறையில் இருந்தே ஈட்டப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களை ஈர்க்கும் ஒன்றாக மாலத்தீவுகள் உள்ளது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தியாவையே சார்ந்து இருக்கிறார்கள். வருமானம் ஈட்டக்கூடிய மற்றொரு துறையாக மீன்பிடித்தல் உள்ளது. இந்தத்துறையின் வருமானம் தற்போது உயர்ந்திருப்பதால் பொருளாதார நெருக்கடியால் மாலத்தீவுகள் பாதிக்கப்படவில்லை. சுற்றுலாத்துறையும் சாதாரண நிலையை விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகிக்கும் அரசியல்
இந்தப் பிரச்சனைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு விவாதங்களால் மாலத்தீவின் அரசியல் சூடேறியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஆளுங்கட்சித் தலைவர்களில் ஒருவருமான முகமது நசீத் மக்களிடையே இன்றும் செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். 2018 ஆம் ஆண்டில் தேர்தல் நடக்கும் நேரத்தில் அவர் கட்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டார். மீண்டும் அது நடந்தால் அவர் எத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்று தெரியவில்லை. 2021 ஆம் ஆண்டில் நசீத் மீது கடுமையான தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதல் மீதான விசாரணை பெரிய அளவில் நகரவில்லை. அவரை யார் தாக்கினார்கள் என்று இதுவரையில் தெரியவில்லை. நசீத்தின் ஆதரவாளர்களோ, இதுவரையில் மூன்று தாக்குதல்கள் அவர் மீது நடந்துள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. ஆளும்கட்சியாக மாலத்தீவு ஜனநாயகக் கட்சி இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி இப்ராகிம் முகமது சோலிஹ் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். நசீத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சோலிஹ் உருவானார். அப்போது அவர் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார். எதிர்க்கட்சியான மாலத்தீவு முற்போக்குக் கட்சி முன்னாள் ஜனாதிபதி யாமீனின் தலைமையில் இயங்குகிறது. இந்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துகிறார்கள். இந்தியாவே வெளியேறு என்ற முழக்கத்தை இவர்கள் முன்வைத்துள்ளனர். இதற்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி சோலிஹ் மீது சீன ஆதரவாளர் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் மாலத்தீவு மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளதோ, இல்லையோ, எதிர்க்கட்சியின் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. அவர்கள் உற்சாகத்துடன் அரசியல் பணிகளைப் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாகவே இதை மையமாக வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் அங்கு பெரும் அளவில் செய்திகளாக மாறுகின்றன. சமூக வலைதளங்களில் ஏராளமான விவாதங்களை இது உருவாக்குகிறது. வெறும் பிரச்சாரமாகவே இது இருந்து வந்தாலும் ஒரு சில இடங்களில் இந்தியர்கள் மீது தாக்குதல்களும் நடந்திருக்கிறது.
ஆளும்கட்சியோ பிளவுபட்டிருக்கிறது. நசீத் மற்றும் சோலிஹ் இடையில் அக்கட்சியினர் பிரிந்து கிடக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டில் நசீத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சோலிஹ் கட்சியின் வேட்பாளராக ஆகும்போது, கட்சியின் முடிவை நசீத் ஏற்றுக் கொண்டார். இம்முறை அவ்வளவு எளிதாக நசீத் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரம்ஜான் மாதத்திற்குப் பிறகு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. கட்சியின் பிடி யார் கையில் என்பது இந்தத் தேர்தல்களுக்குப் பிறகு தெரிந்துவிடும். கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் லத்தீப் எந்தப்பக்கமும் சாயாமல் இருந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையாகுமா?
இலங்கையோடு ஒப்பிடும்போது மாலத்தீவின் பொருளாதாரம் நன்றாக உள்ளது. இரண்டு நாடுகளும் நிறையக் கடன்களை வாங்கிக் குவித்தன. இலங்கையில் நிலைமை மோசமாகி, ஆட்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று மக்கள் போராடும் நிலை உருவாகிவிட்டது. மாலத்தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, 2022 ஆம் ஆண்டில் மிக வேகமான வளரும் ஐந்து பொருளாதாரங்களில் மாலத்தீவுகளும் இருக்கும் என்று ஐ.எம்.எப் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை தெரிவித்துள்ளன. இருந்தாலும் எச்சரிக்கை தேவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சவால்கள் நிறைந்த அரசியல் களம் என்றாலும், பெரும் அச்சுறுத்தல் என்று கருதப்படும் வெப்பமயமாதல் அரசியல் விவாதங்களில் அதிகமாக இடம் பெறவில்லை.
செய்தி ஆதாரம் பிரண்ட் லைன் மற்றும் தி பிரிண்ட்