போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதற்குக் காரணமாக இருந்தவர் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியிலிருந்து விலகினார். புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் வரையில் அவரே இடைக்கால பிரதமராக நீடிப்பார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தனது புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. புதிய தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர்தான் பிரதமராகவும் தேர்வாவார்.
முதல் சுற்றில் எட்டு பேர் போட்டியிட்டனர். பல சுற்றுகளுக்குப் பிறகு, கடைசிச் சுற்றில் போட்டியிடும் இருவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இதுவரையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளே தீர்மானித்து வந்தன. அவர்கள் பங்கேற்ற வாக்களிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கும், 46 வயது நிரம்பிய பெண்மணி லிஸ் டிரஸ்சும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வந்த மோர்டான்ட், கடைசியாக நடந்த சுற்றில் பின்தங்கினார்.
இனிமேல், கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து புதிய தலைவரைத் தேர்வு செய்வார்கள். ஆகஸ்டு 4 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் இந்த வாக்கெடுப்பு நடக்கும். செப்டம்பர் 5 ஆம் தேதி யார் புதிய தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ரிஷி சுனாக்கை விட, லிஸ் டிரஸ்சுக்குதான் ஆதரவு அதிகம் இருக்கிறது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் யூகவ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், தங்கள் வாக்குகள் லிஸ் டிரஸ்சுக்குதான் என்று 62 விழுக்காட்டினரும், ரிஷி சுனாக்குக்கு 38 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடந்தது. இதற்கு முன்பு நடந்த ஐந்து சுற்றுகளிலும் முதலிடத்தில் இருந்த ரிஷி சுனாக், கடைசிச் சுற்றில் பின்தங்குகிறார். ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 137 பேர் ரிஷி சுனாக்கிற்கும், 113 பேர் லிஸ் டிரஸ்சுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.