world

img

ஜப்பான் : பாதியாகக் குறைந்த விவசாயிகள் எண்ணிக்கை

தங்கள் நாட்டில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 17 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக ஜப்பான் விவசாயத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத்தில் ஈடுபடும் பெரு நிறுவனங்களில் பணிபுரியும் விவசாயிகளின் எண்ணிக்கையும் சேர்த்து 9 லட்சத்து 75 ஆயிரத்து 100 என்று அண்மையில் எடுத்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களாகும். 2005 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்து 80 ஆயிரமாக இருந்திருக்கிறது. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்குவதால், அதன் விவசாய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பொறுப்பில் இருந்து வரும் அரசுகள், குறிப்பாக தாராள ஜனநாயகக் கட்சியின் அரசு, உணவு இறக்குமதி மற்றும் அதன் தொடர்பான கொள்கைகளை தளர்த்தி வந்துள்ளன. இந்தக் கொள்கை மாற்றங்களால் சிறிய மற்றும் நடத்தர விவசாயிகள் மற்றும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, கொரோனா பெருந்தொற்றும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிசி மற்றும் பால் ஆகியவற்றின் விலைகள் சரிந்து வருவதைத் தடுக்க எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. சாதாரண விவசாயிகள் நலனில் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது.

விவசாயிகளின் பிரச்சனைகளை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கிறது.  அண்மையில் நடந்த மேலவைத் தேர்தலிலும் அதை ஒரு தேசியப் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார்கள். நாட்டின் தேசியக் கொள்கையானது, விவசாயத்தைக் குடும்பங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், நாட்டின் உணவு இருப்பில் தற்சார்பை எட்டும் வகையிலும் இருக்க வேண்டும் என்று தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துரைத்தனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தரும் ஆதரவு விலையை மேம்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தேவை என்றும் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள எந்தவிதக் கட்டுப்பாடுமற்ற தாராள வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நாட்டின் உணவு இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.