world

img

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கி  சூடு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது நடந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவருமானவர் ஷின்ஸோ அபே. இவர் மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று பேசிக்கொண்டிருக்கும்போதே  திடீரென கீழே சரிந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கீழே விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஜப்பானின் பிரபல செய்தி நிறுவனமான NHK அவர் சுடப்பட்டதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில்,"ஜப்பானின் முன்னாள் பிரதமர் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு துப்பாக்கிச் சத்தத்தை நமது செய்தி நிருபர் கேட்டிருக்கிறார். அதன் பிறகே முன்னாள் பிரதமர் கீழே சரிந்தார். மேலும் ஷின்ஸோ அபே-க்கு ரத்தப்போக்கும் இருந்தது. எனவே, அவர் சுடப்பட்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் அபே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு இந்தியா சார்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "நமது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்ஸோ அபேயின் மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். சர்வதேச அளவில் அவர் சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்தியா-ஜப்பான் உறவுகளை உலகளாவிய கூட்டணி நிலைக்கு உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தார். முழு இந்தியாவும் ஜப்பானுடன் வருந்துகிறது மற்றும் இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை (ஜூலை 9) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

;