டோக்கியோ, ஏப்.11- அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு, ஜப்பான் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றத்தை உருவாக்கி அல்லது பதற்றம் இருப்ப தாகப் பரப்பி விட்டு, ஆயுதங்களை பிற நாடுகளின் தலையில் கட்டும் வேலையை அமெரிக்கா செய்து வருகிறது. அந்நாட்டின் பகாசுர ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை சம்பாதிக்கின்றன. சில நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையும் சூறையாடுகிறார்கள். சீனாவைக் காரணம் காட்டி பயமுறுத்தி ஜப்பானுக்கு பல லட்சம் கோடி டாலர்களில் ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஆளும் கூட்டணி தயாரித்து நாடாளுமன்றக் குழு முன்னால் வைத்தது. மொத்தம் 114 லட்சம் கோடி யென் மதிப்பிலான அறிக்கையைத் தயார் செய்திருந்தார்கள். தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அந்த அறிக்கைக்கு ஒப்புத லையும் பெற்றிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சி களான தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் கொமேய் கட்சி ஆகியவற்றின் ஆதரவையும் ஆளுங்கட்சி பெற்றது. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பான் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, ஷின்சென்குமிக் கட்சி மற்றும் ஒகினாவா மாகாணக்கட்சி ஆகியவை இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
ராணுவத்திற்கு 6.8 லட்சம் கோடி யென் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டைச் செய்திருக் கிறார்கள். கடந்த ஆண்டில் வெறும் 2 லட்சம் கோடி யென் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால், நிதி ஒதுக்கீடு பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று மடங்குக்கு மேல் ஒதுக்கீட்டை ஆளும் கூட்டணி அதிகரிப்பதற்கு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. அமெரிக்க-ஜப்பான் - ஆஸ்திரேலியக் கூட்டணி உருவானதால், ஆயுதங்களை வாங்குவதையும் அதிகரித்திருக் கிறார்கள். ராணுவத்திற்கான 6.8 லட்சம் கோடி யென் ஒதுக்கீட்டிற்குத் தனியாக நிதிநிலை அறிக்கை யும், எத்தகைய ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று முன்மொழிவுகளும் தரப்பட்டுள் ளன. அதில் கிட்டத்தட்ட அனைத்து ஆயுதங் களுமே அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்பு நிறு வனங்களிடம் இருந்தே வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். நீண்ட தொலைவு சென்று தாக்கும் வல்லமை கொண்ட அமெரிக்கத் தரப்பு டோமாஹாக் ஏவுகணைகளுக்கு மட்டும் 21 ஆயிரத்து 130 கோடி யென் ஒதுக்கி யிருக்கிறார்கள்.
ஒரு ஏவுகணைக்கு சுமார் 52 கோடி யென் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தனியாக ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டிருக்கிறது. இத்தகைய ஆயுதங்களை வாங்குவதை விட்டு, அதை மக்கள் நலன் களுக்காகச் செலவிட்டால், சமூக நல நடவடிக்கை களை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு ஏவுகணை வாங்குவதை நிறுத்தினால், 90 குழந்தைகள் படிக்கக்கூடிய ஒரு தொடக்கப்பள்ளியை உருவாக்கிடலாம். 400 ஏவுகணைகளை வாங்கப் போகிறார்கள். இதில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம். மூன்று ஏவு கணைகள் வாங்குவதை நிறுத்தினால் 120 மூத்த குடிமக்கள் தங்கக் கூடிய நலக்கூடம் ஒன்றை உருவாக்கிடலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. நடப்பாண்டில் மட்டுமல்ல, வரக்கூடிய ஆண்டுகளிலும் லட்சக்கணக்கான கோடி யென்னைச் செலவு செய்ய ஜப்பான் அரசு திட்ட மிட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 6.8 லட்சம் கோடி யென் என்பது, ஐந்தாண்டு செலவுத் திட்டத்தின் முதல் தவணை என்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் 43 லட்சம் கோடி யென் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் போகிறார்கள். மக்கள் மீதான சுமை அதிகரிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எச்சரித்திருக்கின்றன.