தங்களுக்குக் கிடைக்கும் வருடாந்திர விடுமுறையான மூன்று வார காலத்தை ஆப்பிரிக்காவுக்குச் சென்று பல உயிர்களைக் காப்பாற்றி சீன மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ஒரு குழுவாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று பல்வேறு சிகிச்சைகளைச் செய்ய சீன மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காகத் தங்கள் வருடாந்திர விடுமுறையைச் செலவழிப்பது என்ற முடிவை எடுத்ததோடு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். எத்தியோப்பியா, கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த தன்னார்வலர்கள் சென்று சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மூன்று வார காலத்தில் ஏராளமான கடினமாக அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. கினியா போன்ற நாடுகளில் சராசரி ஆயுட்காலம் குறைவாகவே உள்ளது. வளர்ச்சி குன்றிய நாடு என்ற வகையில் அதன் பொருளாதாரமும் வளராமலேயே இருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவர்களே அந்த நாட்டில் இல்லை. நரம்பியல் மருத்துவர்களும் வெகு சிலரே கினியாவில் உள்ளனர். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை தராமலேயே விடப்படுகிறது. ஒரு மோசமான மருத்துவ சூழலில் நாங்கள் பணியாற்றினோம் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
பெய்ஜிங்கின் சிங்குவா சாங்குங் மருத்துவமனையின் மருத்துவராக சாவோ ஷூவாங், "எனது முதல் அறுவை சிகிச்சை மிகச்சிறப்பாக நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வெட்டு அங்குள்ளவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் மின்சாரம் இல்லாமல் அறுவை சிகிச்சையைத் தொடர முடியாது. அதனால் எங்களில் சிலர் அலைபேசியில் இருக்கும் விளக்குகளை பயன்படுத்தத் தொடங்கினோம். உண்மையில் யாரையாவது காப்பாற்ற நீங்கள் விரும்பினால் எதையாவது செய்து அவர்களைக் காப்பாற்றுவீர்கள். எத்தியோப்பியாவில் உள்ள குழந்தைகளுக்கு நான் அறுவை சிகிச்சை செய்ய முடியாவிட்டால், அவர்களுக்கு மரணம்தான் காத்திருக்கிறது" என்றார்.
சுவான்வு நகர மருத்துவமனையைச் சேர்ந்த செங் காவோ கூறுகையில் "எங்கள் வருடாந்திர விடுமுறையை இதற்காகச் செலவழித்திருக்கிறோம். இந்தப் பணியை தன்னார்வத்துடன் செய்தோம். இந்த மூன்று வார காலம் எங்கள் வருடாந்திர விடுமுறையை எடுத்துக் கொண்டது. இன்னும் கூடுதலாக மக்களுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். உள்ளூர் மக்களுக்கு சில உதவிகளையும், வாய்ப்புகளையும் எங்கள் முயற்சி வழங்கியது" என்று தெரிவித்தார்.