பினோம் பென், ஜூன் 3- தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா, கொரோனா பெருந்தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டது. கம்போடியாவின் 1 கோடியே 60 லட்சம் மக்களில் 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சுமார் 47 லட்சம் பேர், அதாவது மொத்த மக்கள்தொகையில் 29 விழுக்காட்டினர் 3 முதல் 18 வயது வரையிலானவர்களாவர். கடந்த மூன்று வாரங்களில் ஒரு புதிய தொற்றுகூட இல்லை என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தொற்றை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று திட்டமிடப்பட்டது. பெரும்பாலும் சினோவக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டன.
இந்த இரண்டு தடுப்பூசிகளும் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். குழந்தைகளுக்கு, அதாவது 3 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு, சினோவக் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் உயிரிழப்பைப் பெரும் அளவில் தடுத்ததற்கு இந்தத் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டதே காரணம் என்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியில் வராத குழந்தைகள், மைதானங்களில், தெருக்களில், பூங்காக்களில் மீண்டும் விளையாடி வருகிறார்கள். “பெருந்தொற்றிற்கு முன்பிருந்த நிலைமை வந்துவிட்டது” என்று தனது குழந்தையுடன் மைதானத்திற்கு வந்திருந்த சோசீட்டா என்ற பெண்மணி கூறுகிறார். அவரும், அவரது சிறுவயது மகனும் சீனாவின் சினோவக் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த மருந்தின் தரம், பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். சுகாதாரத்துறையில் பணிபுரியும் உங் புன்ஹெங், “இதுவரையில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் தொற்றவில்லை. சீனத் தடுப்பூசிகள் எங்களை உயிர்களைப் பாதுகாத்தது மட்டுமல்ல, எங்கள் பொருளாதாரத்தையும் மீட்க உதவியிருக்கிறது. சீனா-கம்போடியா இணைந்து கொரோனாவை எதிர்கொண்ட விதம் பிற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை எந்தவிதக் கட்டணமில்லாமல் செலுத்தும் பொறுப்பை அந்நாட்டின் அரசே ஏற்றுக்கொண்டிருந்தது.