world

img

சீனாவில் நடைபெற்ற விமான விபத்தில் 132 பேர் உயிரிழப்பு: சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகர் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஹீஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப்பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 21) உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணித்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள் , ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகள் மட்டுமே மூட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விமான தரவுகளையும், விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை விமானத்தின் முதல் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாவது கருப்புப் பெட்டி மீட்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், விமானத்தின் முதல் கருப்புப் பெட்டி ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கருப்புப் பெட்டியை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.