காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைபடம், இஸ்லாமியர்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி அப்படத்திற்கு சிங்கபூர் அரசு தடை விதித்துள்ளது.
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒருதலைப்பட்சமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் பல்வேறு மத, இன சமூகங்கள் வாழும் சிங்கப்பூரில் பகைமையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பு உள்ளதால் இப்படத்தை தடை செய்வதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 2022 மார்ச் 11 அன்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இத்திரைப்படத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல மாநில பாஜக முதலமைச்சர்கள் பாராட்டியிருந்தனர்.
ஆனால் இத்திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை பரப்புவதாக பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான சிங்கபூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு, அதற்காக அனுமதி கோரி சிங்கப்பூர் அரசிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் படம் சிங்கபூரின் திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த படத்தை வெளியிட அனுமதி அளிக்க முடியாது என கலாச்சாரம் சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.