கியூபாவில் உள்ள ஒரு உணவகத்தில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கியூபா தலைநகர் ஹவனாவில் உள்ள சரடோகா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் நேற்று காலை வழக்கம்போல செயல்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் உணவகத்தில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டதை அடுத்து உணவகத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த உணவகத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு குழந்தை உள்பட 22 பேர் பலியாகினர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து வந்த மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில், உணவகத்துக்கு இயற்கை எரிவாயு விநியோகித்து கொண்டிருந்த லாரி வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கியூபா அரசு தொலைக்காட்சி தெரிவித்ததுள்ளது. ஆனால் எரிவாயு எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.
இதைதொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.