எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். ஆனால் அங்கு அண்மையில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான விலையை அந்நாட்டு அரசு உயர்த்தியது. இதனால் ஆவேசமடைந்த அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. அல்மாட் நகரில் உள்ள மேயர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இருதரப்பிற்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
இதனால் அந்நாட்டு ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்படுவதாக நேற்று அறிவித்தார். அதோடு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாகவும் அவர் அறிவித்தார். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று ராஜினாமா செய்தது. அரசின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி காசிம், துணைப் பிரதமர் அலிகான் ஸ்மைலோவ் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.