உக்ரைனுக்கு ராணுவம் : பிரான்ஸ்-இங்கிலாந்து திட்டம்?
உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து பிரான்ஸ்- இங்கிலாந்து பரிசீலித்து வருகின்றன என லு மொண்டே என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனிடம் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கொடுத்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்து குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனியார் ராணுவம் (கூலிப்படை) அல்லது நாட்டின் வீரர்களை அனுப்புவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லெபனானுடனான எந்த ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்காது - ஸ்மோட்ரிச்
லெபனானுடனான எந்த ஒப்பந்தத்தை யும் இஸ்ரேல் மதிக்காது என தீவிர யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் பேசியுள்ளார். போரில் மேலும் தீவிரம் காட்ட வேண்டும் சமரசம் கூடாது என நேதன்யாகுவை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் எழுதப்பட்ட காகிதத்திற்கு மதிப்பு இல்லை. நாங்கள் லெபனானை மேலும் அழிப்போம். எங்களுக்கு எதிராக தலை தூக்கும் அனைவருக்கும் இது தான் நிலை என பேசியுள்ளார்.
வெனிசுலாவிற்கு ஆதரவாக கியூபா கருத்து
வெனிசுலா அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு சமீபத்தில் விதித்த பொருளாதாரத் தடைகளை கியூபா கண்டித்துள்ளது. கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் வெனிசுலா அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா திணித்துள்ள ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நாங்கள் நிராகரிக்கிறோம் எனவும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான பொலிவேரியன் மற்றும் சாவேஸ் புரட்சிக்கு கியூபாவின் ஆதரவையும் ஒற்றுமையையும் மீண்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் போக்குவரத்து ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம்
ஸ்பெயின் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை நிலைமைகளில் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் 60 வயதிற்கு முன்பே ஓய்வு பெறுவதற்கான வழிமுறை களை கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், டிசம்பர் 5, 9 ஆகிய தேதிகளில் மீண்டும்அடையாளப் போராட்டமும் டிசம்பர் 23 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எஃப்பிஐ இயக்குநராக காஷ் பட்டேல் நியமனம்
ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் உளவு நிறுவனமான எஃப்பிஐ இன் இயக்குநராக தனது நெருங்கிய நம்பிக்கைக்குரிய நபரான காஷ் பட்டேலை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது காஷ் பட்டேல் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரியாகவும், தேசிய உளவுத்துறையின் துணை இயக்குநராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.